நாஸ்திகமும் சமதர்மமும். குடிஅரசு கட்டுரை - 21.05.1949

Rate this item
(0 votes)

என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்குப் பயந்த வனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.

பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாபிரியர்கள் சொல்லித்திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறிஸ்துவையும், முகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக் கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத் தந்தான் காரணம்.

ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப் பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங் களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப் படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட் டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப் பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக்கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன் மையாலோ ஏற்பட்டவை என்று சொல் லப்படு கையில், அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லு பவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்த வனேயாகின்றான்.

அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதிய ரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படு கின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவை களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது?

கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும்.

மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும்.

ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத் திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள்.

அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீஸ்வரராய் இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

உதாரண மாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லா தார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள் ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது.

காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டி யதில்லை என்றும், அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டே யொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது.

ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலை களும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கடவுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத் தின் பேரால் உள்ள இன்றைய கொடு மைகளை ஒழிக்க முடியும். அப்படிக் கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்திற் கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி.

ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.

தந்தை பெரியார்

குடிஅரசு கட்டுரை - 21.05.1949

Read 30 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.