டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணியில் தாங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இருந்தால், தாங்கள் முதல் முதலாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற கருத்து தங்களுக்கு எப்படித் தோன்றியது என்று கூறினால் பரவாயில்லை.
பெரியார்: எனக்குச் சின்ன வயசிலேயே ரொம்பச் செல்லப் பிள்ளை மாதிரி எல்லோரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அதிலே எனக்குக் கொஞ்சம் ரொம்ப வேகமாக கருத்துகளெல்லாம் தோன்றும். அது தப்பு, இது தப்புன்னு கருத்துகளெல்லாம் எனக்குத் தோனும். அதை நான் சாதாரணமா, தைரியமா வெளியிடுவேன். அந்த முறையிலே மத சம்பந்தமா, இலக்கிய சம்பந்தமா, அது அது சம்பந்தப்பட்டவங்ககிட்ட வாதாடி வாதாடி ஒரு மாதிரி, பொதுவா சொன்னா, ஒரு வாயாடி என்ற நிலைமைக்குப் பேரு வர்றபடி வாதாடிட்டு இருந்தேன். அதே போக்குலேதான் ஜனங்களண்டைப் பழகும்போது இந்தப் புள்ளைக் குட்டி அதிகமா பெத்துக்கிட்டு இருக்கிறவங்க படற கஷ்டம். நம்ம கிட்ட வந்து முறையிடுற முறை; புருஷன் - பெண்ஜாதி சண்டை போட்டுக்கிட்டு வர்ற கலவரம் இவற்றையெல்லாம் நான் சீரியஸா கவனிக்குறபோது இந்தப் புள்ளைங்களாலே பெரிய தொல்லைப்படறாங்க. இயற்கையா இருக்கிற தொல்லை தவிர, புள்ளைக் குட்டிங்களாலும் வேற தொல்லைப் படறாங்கன்னு கண்டேன்.
வேடிக்கையா சொல்றேன். குடிஅரசு ஆபீசிற்கு எதிர்த்தாப்பலே ஒரு வீடு. குடித்தனக்காரர் வீடு. அவங்க நம்ம ஜாதியில்லை. எங்களுக்கும் அவங்களுக்கும் ஒரு மாதிரியான முறை. அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான்னு கூப்பிடுவோம். அந்த முறையிலே எதிர்த்த வீட்டுக்காரன் ஒருத்தன், அவன் எனக்கு மாப்பிள்ளையா வேணும். அவன் மனைவிக்கு நான் அண்ணனா வேணும். இந்த மாதிரி இருக்கும். அவனுக்கு நாலு குழந்தை. கைக் குழந்தை ஒண்ணு. அந்த நிலையில அவன் கோவம் வந்து பெண்டாட்டியைப் போட்டு அடிச்சுப்புட்டான்.
அப்ப அந்த அம்மா பேச்சோட பேச்சா அது நம்ம செயலில்லே, அது பகவான் செயல்; அப்படிப் பண்ணிட்டது; நான் என்ன பண்ணட்டும்? அப்படின்னு சொன்னா. அப்பதான் அந்தப் பகவான் செயலைக் கண்டிச்சுப் போட்டு நான் அன்னிக்கே வந்து எழுதியிருக்கிறேன். இந்த மாதிரி குழந்தைகளைப் பெத்துக்கிட்டு சங்கடப்படறாங்க. இப்படி கிணத்துல விழுந்துட துணிஞ்ச பொம்பளைகூட - இந்தப் புள்ளைகளை வெச்சுக்கிட்டு, எப்படி நான் விழுகிறது. இதையும் போட்டுட்டு விழுகிறதுன்னா, எனக்கு இதா இருக்குதேன்னு விசனப்படறான்னு வேடிக்கையா அப்ப வந்ததுதான்.
எனக்கு முதல் மனைவியாயிருந்த நாகம்மை கல்யாணமாகி கொஞ்ச வருஷம் ஆனவுடனே ஒரு குழந்தை பொறந்து செத்துப் போச்சு. இந்தக் குழந்தையை நான் பார்க்கவும் இல்லை. அய்ந்து மாதம் ஆச்சு. அய்ந்து மாசமா நான் அதைப் பார்க்கக்கூட இல்லை. எனக்கு அவ்வளவுதான். மறுபடியும் அந்தம்மாகிட்டே சொன்னேன்.
அதனாலேயே ரெண்டு, மூணு புள்ளை வளர்த்தேன். அதுக்கு நான் ரொம்பவும் உபதேசம் பண்ணினேன். நம்மளுக்குக் குழந்தை வேண்டாம்னு. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்தது. அந்தக் குழந்தை பெக்கறது ஒரு நியூசென்ஸ்னு எனக்குப் பட்டது. என்னை ராமேஸ்வரத்துக் கெல்லாம் கூட்டிக்கிட்டுத்தான் வந்தாங்க. குழந்தைக்காக, ஆமா எங்க ஊரிலேகூட கணபதி, அரச மரம், வேப்ப மரம், கல்யாண மரம் இதெல்லாம் பண்ணிருக்காங்க. எனக்குப் புள்ளே வேண்டாம்னு அப்படி பழகிச்சு, அது என்னவோ பிராக்டிகலா ரொம்ப வளர்ந்து போச்சு அந்த எண்ணம்.
8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரையாடியதன் தொகுப்பிலிருந்து.
விடுதலை-9.3.1970.