அயோக்கியதனம் எது? குடிஅரசு- 28.10.1944

Rate this item
(0 votes)

அயோக்கியதனம் எது? நன்றாய்க் கொழுக்கட்டை போலும், மணலில் பிடுங்கிய கிழங்கு போலும் இருந்து கொண்டு ஐயா மூன்று நாளாகக் கஞ்சியே காணவில்லை. காலணா தருமம் கொடுங்கோ என்று கேட்பது அயோக்கியத்தனம். ஆனால், அதுபோலவே இருந்து கொண்டு யாதொருவிதமான பாடும் படாமல் தன் பெரியோர்கள் சம்பாதித்து வைத்து விட்டுப்போனார்கள் என்றோ, பரம்பரை சொத்து பாத்தியத்தில் கிடைத்தது என்றோ பெரும் செல்வத்தை வைத்துக் கொண்டு சுகபோகமாய் இருப்பதாகக் கருதிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு இருப்பது அதைவிட அயோக்கியத்தனம். பிந்தியவன் பாடுபடாமல் ஏராளமான சொத்தை வைத்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது முந்தியவன் பாடுபடாமல் பிச்சை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தொல்லை எது? பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் இருக்கிறது. அது போலவேதான் பணக்காரன் (தனது தேவைக்கு மேல் வைத்திருப்பவன்) பணத்தை வைத்துக் கொண்டு கோவில், மடம் கட்டிக் கொண்டு கும்பாபிஷேகம், உற்சவம், பிராமண சமாராதனை முதலியன செய்துகொண்டு இருப்பதும் பெரும் தொல்லையாகவும் மனதிற்குச் சங்கடமாகவும் நாட்டுக்குக் கேடாகவும் இருக்கிறது.

கடவுள் எது? பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்: ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்தினாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்! ஆதலால் மக்களை எல்லாம் நாஸ்திகர்களாக ஆக்கி விட்டால் பணக்காரனும், தரித்திரனும் தானாகவே மறைந்துபோவார்களா மாட்டார்களா?

தந்தை பெரியார்

குடிஅரசு- 28.10.1944

 

 

 
Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.