“கிறிஸ்தவ மதப் பிரசாரமா?” என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பனமித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூஷித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக் குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி “தூஷித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?’’ என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களிடையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனியுங்கள்.
குடி அரசு கட்டுரை - 11.07.1926