நான்கு சித்திரங்கள். குடி அரசு கட்டுரை - 26.07.1925

Rate this item
(0 votes)

ஒரு தமிழ்நாட்டுப் பெண் நாட்டியமாடுவது போலவும் ஒரு தமிழ்நாட்டு................ன் ஆட்டுவிப்பது போலவும் சித்திரம் எழுதி, இங்கிலாந்தில் தேசியக் கூத்து என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இது தமிழ்நாடு சுயராஜ்யக்கட்சி காரியதரிசியாய் இருந்த ஒருவர் இங்கிலாந்துக்கு தேசிய பிரசாரத்திற்கு போவதாகச் சொன்னதையும், அவர் போகும்போது ஒரு நாட்டியப் பெண்ணும் கூடப் போயிருக்கிறது என்று சொல்வதையும் குறிக்கிறது போல் இருக்கிறது.

மற்றொன்று

ஒருவர் ஒரு மாளிகையில் அன்னிய உடையுடன் ஒரு கையில் சிகரெட்டும் மற்றொரு கையில் பிராந்திக் கோப்பையும் பக்கத்தில் ஒரு சாராயக் குப்பியும் அருகில் ஒரு பொட்லரும் இருக்க அதுசமயம் மகாத்மா உள்ளே வர உடனே வேலைக்காரனைக் கூப்பிட்டு மீட்டிங்குக்குப் போக வேண்டும், மீட்டிங்குக்கு உடுத்துவதான கதர் உடை கொண்டுவா என்று சொல்வது போல் ஒரு சித்திரம் மகாத்மாவின் புது சிஷ்யர்களின் பெருமையைக் காட்டுவதுபோல் வரையப்பட்டிருக்கிறதுபோல் இருக்கிறது. இது கல்கத்தாவில் மகாத்மாவின் பிரயத்தனத்தால் மேயர் ஆன ஸ்ரீமான் சென்குப்தா அவர்களின் தன்மையைக் காட்ட குறிப்பிட்டது.

இனியும் ஒன்று

சேரமாதேவி குருகுலத்தில் ஒருவர் தாடியுடன் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பராக்கிரமத்துடன் ஒரு கையில் மீசையைத் தொட்டுக்கொண்டு மற்றொரு கையில் பயப்படாதிருங்கள் ஒரு கை பார்ப்போம் என்று அபயாஸ் தம் காட்டிக்கொண்டும், குருகுலவாசிகள் தாங்கள் இருக்கும்போது எங்களுக்கு என்ன பயம் என்றும் சொல்லுவதுபோலவும் உத்திரவில்லாமல் வரக்கூடாது என்று குருகுல வாயிலில் ஒரு பலகை எழுதிக் கட்டித் தொங்க விட்டு இருப்பது போலவும் வரையப்பட்டிருக்கிறது. இது தமிழர்களிடம் அதிகமாய் பணம் வசூலித்துக்கொண்டு தமிழ்க் குழந்தைகளை இழிவுபடுத்துவதைப் பற்றிக் கேட்டால் அதற்கு வீரியம் பேசுவதைக் குறிக்கிறது போல் இருக்கிறது.

இன்னும் ஒன்று

ஒரு பக்தி நிறைந்த கணவனும் மனைவியும் தன் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது போலவும், அவற்றை புரோகிதர்கள் வாங்கி மூட்டைக் கட்டிக் கொண்டு…...... வீட்டுக்குப் போவது போலவும் ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இது நம்மவர் யோசனையில்லாமலும் பாத்திரமறியாமலும் திதி கொடுக்கும் பயித்தியக்காரத்தனத்தைக் காட்ட குறிப்பிட்டதுபோல் இருக்கிறது. இவை முறையே தமிழ்நாடு, வங்காளி, ஊழியன் இவைகளில் காணப்படுகிறது.

குடி அரசு கட்டுரை - 26.07.1925

 
Read 23 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.