தமிழர் சங்கம். (குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929)

Rate this item
(0 votes)

சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றி வருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமூக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்கு தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப் பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மது பானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது, வாழ்க்கை சுப, அசுப காரியங்களில் போலிச் சடங்குகளை ஒழித்து சிக்கன முறையில் நடத்தச் செய்வது, கலப்பு மணம், மறுமணம் ஆகியவைகளை ஆதரிப்பது முதலிய சமூக சீர்திருத்தக் காரியங்களைச் செய்வதே முக்கியமாகக் கொண்டது.

நிர்வாகஸ்தர்கள்

திரு.டாக்டர் எம்.மாசிலாமணி முதலியார் போஷகராகவும், திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் தலைவராகவும், பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் உபதலைவராகவும், திருவாளர்கள் ஜகந்நாதப்பிள்ளை, பக்கிரிசாமி செட்டியார் காரியதரிசிகளாகவும் மற்றும் பத்து கனவான்கள் நிர்வாக அங்கத்தினராகவும் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.

‘சமய’ப் பற்றில் மூழ்கி, ‘பரலோகத்திற்கும்’, ‘பரலோகக் கடவுளுக்கும்’ பாடுபட்ட பெரியார்கள் பிரத்தியட்ச லோகத்திற்கும் பிரத்தியட்ச கடவுள்களுக்கும் பாடுபட முன் வந்ததை நாம் மனதாரப் போற்றி வரவேற்கின்றோம். மற்றும் ஆங்காங்கு சமயத்தின் பேராலும், ஜாதி வகுப்புகளின் பேராலும் அமைக்கப்பட்டிருக்கும் சங்கங்கள் தமிழர் சங்கத்தைப் பின்பற்றி நாட்டிற்குப் பயன்படத்தக்க வண்ணம் திருத்தியமைத்தால் அது மிகவும் போற்றத்தக்கதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1929)

 
Read 56 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.