சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சொற்பொழிவு. குடி அரசு - சொற்பொழிவு - 25.01.1931

Rate this item
(0 votes)

தலைவர் அவர்களே! இளைஞர்களே சகோதரர்களே! 

2 மணி நேரத்திற்கு முன் தான் இந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்பதாக ஒரு மாணவ நண்பர் கேட்டார். இன்றைய விஷயம் இன்னது என்று இப்போதுதான் தெரிந்து இதைப்பற்றி என்ன சொல்லுவது என்றும், இது மிகவும் விவாதத்திற்கிடமான சங்கதி ஆதலால் திடீரென்று என்ன பேசுவதெனவும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன் யோசனை முடிவதற்கு முன்னமேயே மேடைக்கு அழைக்கப்பட்டு விட்டேன். ஆனாலும் இதைப்பற்றிய என்னுடைய பழய சங்கதிகளையே இந்தத் தலைப்பின் கீழ் சொல்லப்போகின்றேன். நீங்கள் பெரும்பாலும் மாணவர்களும், இளைஞர்களுமாயிருப்பதால் நான் சொல்லுவதை திடீரென்று நம்பி விடாதீர்கள், நிதானமாய் யோசனை செய்து பிறகு ஒருமுடிவிற்கு வாருங்கள் என்பதை முதலில் உங்களுக்கு எச்சரிக்கை முறையில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

நண்பர்களே சமூக சீர்திருத்தம் என்றால் எந்த சமூகம்? என்பதும் சமயக்கொள்கை என்றால் எந்த சமயம்? என்பதும் முதலில் முடிவு கட்டிக் கொள்வது இங்கு அவசியமாகும். நான் இப்போது பொதுவாக மனித சமூகம் என்பதையும். பொதுவாக மனித சமூகத்திற்கு ஏற்ற சமயம் என்னும் பேரால் உலகில் வழங்குவதாக நமக்குத் தெரிந்த சமயங்களையும் எடுத்துக் கொள்ளு கிறேன். பிறகு அவசியமிருந்தால் தனிச்சமூகம், தனிச்சமயம் என்பதில் பிரவேசிக்கலாம் என்று இருக்கிறேன். பொதுவாக சமயங்கள் - மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக்கொண்டாலும் அவை மனிதசமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்ட வையாகும். 

மனிதவாழ்க்கைக்கேற்ற திட்டங்களேதான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப்படுவதுமாகும். 

ஒரு வாசகசாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக்கொள்வது போலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும் தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர் களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது ஒரு தலைவனால் அல்லது அறிஞனால் ஏற்படுத்தப்பட்ட விதிகளே சமயக் கொள்கைகளாகும். இதுவும் அந்தந்த காலதேசவர்த்த மானத்திற்கும் மக்கள் அறிவு நிலைமைக்கும் வளர்ச்சிக்கும் தக்கபடி செய்யப் படுவதேயாகும். ஆனால் அக்கொள்கைகள் மக்கள் தங்களது நன்மை தீமைகளைக்கூட சரிவர உணர்ந்து நடந்து கொள்ள முடியாத அறிவு - இல்லாத காலத்தில் மக்களை பயப்படுத்தி இணங்கச் செய்ய என்று பல கற்பனைகளை உண்டாக்சி பயப்படுத்தி வைத்து அப்பயத்தின் மூலமாவது நடக்கும்படி செய்யக்கருதி ஏற்படுத்திய கொள்கைகளும் சேர்ந்ததாகும். அதாவது எப்படி ஒரு குழந்தையானது தன்னைக்காட்டாற்றிக்கொள்ளக் கூடிய சக்தி இல்லாத தென்றும் அதைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொன்னால் அதை அறிந்து கொள்ளமுடியா தென்றும் அதன் பெற்றோர்களோ, பாதுகாப்பாளர்களோ கருதினால் அக் குழந்தை வெளியில் போய் நடமாடி. ஆபத்தில் பட்டுக் கஷ்டப்படாதிருக்கச் செய்ய வேறுவிதமாக அதாவது ஒருவித பயம் உண்டாகும் படியான பூச்சாண்டிபிடித்துக்கொள்வான் என்றும், பேய் பூதம் பிடித்துக் கொள்ளும் என்றும் துண்டுத்தடிக்காரன் பிடித்துக்கொண்டுபோய் அடைத்து விடுவான் என்றும் இன்னும் பலவகையாய்ச் சொல்லுவதோடு கையையும், முகத்தையும் ஒருவிதமாக ஆக்கிக்காட்டி அக்குழந்தைக்கு ஒன்றும் புரியாத படி மிரட்டி பயப்படுத்தி வைத்து அதை எப்படி வெளியில் போகாமல் செய்கின்றோமோ அப்படிப் போலவே மக்கள் வாழ்க்கை நலத்திற்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கை களை உணர்ந்து அதன்படி ஒழுகமுடியாத நிலையில் மனிதர்கள் இருக் கிறார்கள் என்று கருதப்பட்ட காலத்தில் அப் போதுள்ள அறிஞர் என்பவர்கள் அம்மக்களை பயப்படும்படியாக ஏதோ அம் மக்களுக்குப் புரியாத ஒன்றைச் சொல்லி வேறுவித பயத்தை உண்டாக்கி அக்கொள்கைகளுக்கும் மதக்கட்டுப்பாட்டிற்கும் இணங்கி நடக்கும்படி செய்திருக்கிறார்கள். அந்த நிபந்தனை மிரட்டல்களும், கட்டுப்பாடுகளும் தான் இன்றைய மோக்ஷம், நரகம், எமன், அடுத்த ஜென்மம். கர்மம், விதி, செக்கில் போட்டு ஆட்டுவது முதலாகியவைகளாகும். மற்றும் இவற்றை வலியுறுத்தி எழுதிய சாஸ்திரம், புராணம் இதிகாசம் முதலியவைகளில் சொல்லப்பட்டவைகளுமாகும். அதுமாத்திரமல்லாமல் மேற்கண்ட முறையில் சொல்லுபவைகளை யெல்லாம் சொல்லிவிட்டும் எழுதிவிட்டுமானபிறகு இவைகளை மனிதன் சொன்னான் மனிதன் எழுதினான் என்றால் நம்பு மாட்டார்களென்று கருதி ஏனெனில் அவை நம்பமுடியாததும் அறிவுக்குப் பொருந்தாததுவுமாய் இருப்பதால் அவைகளையெல்லாம் கடவுள் சொன்னார். பகவான் சொன்னார். ரிஷி சொன்னார். முனிவர் சொன்னார். என்று அதாவது மனிதத்தன்மைக்கு மீறினவர்களால் சொல்லப்பட்டது என்று சொல்லி கட்டாயப்படுத்தி எப்படியெனில் நம்பினவனுக்கு மோக்ஷம், நம்பாதவனுக்கு நரகம், கழுதை ஜன்மமாய் பிறக்க வேண்டும் என்று சொல்லி நம்பச்செய்வதுமான காரியத்தின் மீதேதான் சமயக்கொள்கைகளை மக்களுக் குள் புகுத்தி இருக் கிறார்கள். இவற்றை யெல்லாம் உண்மை என்று நம்பின பாமர ஜனங்களும், இவற்றினால் பிழைக்க வசதி செய்து கொண்ட சில பண்டித ஜனங்களும் இந்த மாதிரிக் கொள்கைகள் கொண்ட சமயங்களை முறட்டுப் பிடிவாதம் குரங்குப்பிடியாய் பிடித்து, சிறிதுகூட காலத்திற்கும் அறிவின் நிலைமைக்கும் யேற்றமாதிரி திருத்துவதற்கு விடாமல் முட்டுக் கட்டை போட்டு வந்ததாலேயே அழிவுக்குத் தகுந்தபடியும் காலத்திற்கு ஏற்ற படியும் பல பல சமயங்கள் தோன்ற வேண்டியதாயிற்று. அன்றியும் திருத்த இடம் கொடுத்துக்கொண்டு வந்த சமயமெல்லாம் பெருகவும், பிடிவாதமாய் இருந்ததெல்லாம் கருதவுமாய் இருந்து கொண்டு வரவேண்டியதுமாயிற்று 

ஆகவே இன்றையத் தினமும் மக்கள் எந்த சமயமானாலும் இந்தத் தத்துவத்தின் மேல் ஏற்பட்டதென்பதையும் ஒத்துக்கொண்டு கால தேச வர்த்தமானத் திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் தகுந்தபடி திருத்தமடைய உரிமையும் சௌக ரியமுடையது என்று சொல்லப்படுவதாயின் அது எந்த மதமாயினும் சமய மாயினும் கொள்கையாயினும் அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். 

அப்படிக்கில்லாமல், அதாவது மனிதனின் உலகவாழ்க்கை நலத்திற்கு மதம் ஏற்பட்டது என்பதாக இல்லாமல் அதுவும் காலத்திற்கும் அறிவுக்கும் ஏற்ற மாறுதலுக்கு கட்டுப்பட்டது என்பதாக இல்லாமல் மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும் அந்த மதத்தைக் காப்பாற்ற வேண்டியதே மனிதனின் கடமை என்றும் அது எப்படிப்பட்டதானாவோ திருத்தவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லும்படியான மதம் எதுவாயிருந்தாலுமதை அழித்துத்தர வேண்டியது மனித சமூக சீர்திருத்தத்தைக் கோருகிற ஒவ்வொ ருவருடையவும் முக்கியமான கடமையாகும். 

ஆகவே அக்கடமைக்கு கட்டுப்பட்டவைகள்தான் சமயக்கொள் கைகளாகும். இனி இந்திய சமூகத்தையும் இந்து சமயத்தையும் எடுத்துக் கொண்டோமானால் அது சுருக்கத்தில் முடிக்கக்கூடியவோ, விளக்கக் கூடியவோ, முடியும்படியான விஷயமல்ல. இந்திய மனித சமூகம் பெரிதும் சமயத்தைக்காப்பாற்றப் பிறந்ததாகக் கருதிக் கொண்டிருக்கின்றன. அப்படிக் கருதிக் கொண்டிருப்பதிலும் மற்றொரு சிறிப்புக்கு இடமான விஷயமென்ன வென்றால் மனித சமூக நன்மைக்கென்று ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை பெல்லாம் விட்டுவிட்டு அக்கொள்கைகளை நிறைவேற்ற வென்று பொய்யாக வும் கற்பனையாகவும் பயத்திற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அர்த்தமற்ற போலி நிபந்தனைக் கொள்கைகளைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டு கட்டி அழுவதாயிருக்கின்றது. காரணம் என்னவென்றால் மனிதனை அறிவு பெருவதற்கு விடாமலும் விஷயங்களைப் பகுத்தறிந்து நடப்பதற்கு சுதந்திரம் கொடாமலும் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இந்திய மனித சமூகம் இன்றும் சுய அறிவு அற்று சமயத்தின் கருத்தென்ன? சமயக் கொள்கைகள் எதற்கு ஏற்பட்டது? என்பவைகளை கவனிக்காமல் கீழ் நிலையிலேயே இருந்து கொண்டு சீர்திருத்தமடையவோ, முன்னேற்றமடையவோ முடியாமல் தவிக்கின்றன. உதாரணம் வேண்டுமானால் பாருங்கள். எல்லா சமயக்காரர்களின் மனோ பாவமும் குணமும் மற்றவனிடம் நடந்துகொள்ளும் பான்மையும் ஒரேமாதிரியாக இருப்பதை காண்கின்றோம். ஆனால் ஆண் களைப் பார்த்தால் இன்ன இன்ன சமயத்தான் என்று கண்டுபிடிக்கும்படியாய் வேஷத்தை மாத்திரம் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இவன் இஸ்லா மானவன், இவன் கிறிஸ்துவன், இவன் பௌத்தன், இவன் இந்து. இவன் சைவன், இவன் வைணவன், இவன் ஸ்மார்த்தன் என்று சுலபத்தில் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் இவர்கள் இத்தனை பேர்களுடைய ஒழுக்கங் களைப் பார்த்தால் மாற்றமில்லாதபடி ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே மதம் என்பதும் சமயம் என்பதும் யாருக்கும் அநேகமாய் வேஷ மாத்திரத்தில் இருக்கின்றதே ஒழிய கொள்கை மாத்திரத்தில் இல்லை என்பதும் மக்கள் வேஷத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கொள்கைகளை அடியோடு நழுவ விட்டு விட்டார்கள் என்பதும் நன்றாய் விளங்கும். இதற்கு காரணம் என்னவென்றால் இன்றைய உலகில் சமய போதனை என்பதே வேஷத்தை சொல்லிக்கொடுத்து அதை கிரமமாய் அந்தந்த சமயத்தார்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்று பார்ப்பதல்லாமல் கொள்கையை வற்புருத்தாததே யாகும். எந்த சமயத்திற்கும் இந்தமாதிரி வேஷந்தான் பிரதானமான கொள்கை என்று ஆகிவிட்டதால் தான் எந்த சமயமக்களிடமும் சமயஉண்மை கொள்கைகளைப் பார்க்கமுடியாமல் போனதோடு சமயத்தின் பேரால் எப்படிப்பட்ட கொள்கையைச் சொன்னாலும், லக்ஷியம் செய்யாமல் போய்விடவேண்டியாகிவிட்டது. 

அன்றியும் மக்களுக்கு இவ்வளவு சுலபத்திலேயே அதாவது வேஷ மாத்திரத்திலேயே சமயப்பிரதானம் கிடைத்துவிடுகின்றதாலும் உண்மையான அதாவது மனிதனிடம் நடந்து கொள்ள வேண்டிய கொள்கை நிறைவேற பலவிதமாக, பயங்களுக்காக கற்பிக்கப்பட்ட மோக்ஷம், கடவுள். அருள், அடுத்த ஜன்மத்தில் மேன்மையான பதவி ஆகியவைகள் என்பவைகள் எல்லாம் மேல்கண்ட வேஷமாத்திரத்தாலே கிடைத்து விடுவதாய் அவர் களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டு விட்டதாலும் வெரும் வேஷத்தைப் போடுகின்றதாலேயே மோக்ஷமடையக் கருதி அதிலேயே ஈடுபட்டு பிரதான சமயக்கொள்கையை அலரியப்படுத்தி விடுகிறார்கள். 

ஆகையால் இன்றையதினம் மக்களுக்கு சமயம் பயன்பட வேண்டு மானால் அதன் மிரட்டல் நிபந்தனைகளான போலிக் கற்பனைகளை யெல்லாம் முதலில் அழித்தாக வேண்டும். அதாவது மோக்ஷம் நரகம் தலைவிதி கடவுளின் பக்கத்தில் இருக்கலாம். அடுத்த ஜன்மத்தில் ராஜா வாய் பிறக்கலாம் என்பவைகளையும் சமய வேஷங்களையும் அடியோடு அழித்தாக வேண்டும். அப்படிக்கில்லாதபகம் எப்படிப்பட்ட நல்ல கொள்கையுள்ள சமயம் என்றாலும் ஒரு நாளும் பயன் கொடுக்கவே கொடுக் காது. மேலும் கொள்கையையும் அறிவையும் பிரத்தியடி அனுபவத்தையும் பொருத்திவிடவேண்டும். அதைக்கொண்டு அவரவர்களையே நடந்து கொள்ளும்படி விட்டுவிடவும் வேண்டும். அப்படிக்கில்லாத வெரும் பாட்டிக் கதைச் சமயங்கள் இன்றைய சமூக முன்னேற்றத்திற்கு பயன்படவே படாது என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். 

உதாரணமாக முன் காலத்தில் படிப்பு வாசனை உலகக் கல்வி அறிவு சௌகரியமில்லாத காலத்தில் ஒரு மனிதன் வெளியூர் பிரயாணம் போய் விட்டுமென்று கருதி அந்த ஊருக்கு போனால் புண்ணியம், இந்த சாமியை தரிசித்தால் மோக்ஷம், இந்த தண்ணீரில் குளித்தால் பாவம் நீங்கும், அடுத்த ஜன்மத்தில் ராஜாவாய் பிறப்பான் என்றெல்லாம் சொல்லி அதற்குத் தகுந்த கற்பனைக் கதைகள் எழுதி வைத்ததுடன் ஜீவகாருண்யம் என்பதையும் உத்தேசித்து மனிதன், மாடு, குதிரை ஆகியவைகள் மீது சவாரி செய்து அவற்றிற்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்கட்டுமென்று கருதி காலால் நடந்து போனால் அதிக மோக்ஷம் அவசியம் கிடைக்கு மென்றும் எழுதி வைத் திருந்தால் இன்று வர்த்தமானப் பத்திரிகை ரயில் மோட்டார். ஆகாயக் கட்டால் ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டு மலிந்த பிறகுகூட நடந்து யாத்திரை போகவேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இதுபோலவே தான் அனேக விஷயங்களை சமயத்தின் பேரால் அர்த்தம் புரியாமல் பின்பற்றி மூடர்களாக வும், தரித்திரர்களாகவுமாகி அடிமைகளாய் கஷ்டப்படுகின்றார்கள். இக் கண்டத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் சமயத்தின் உண்மை தத்துவத்தை தைரியமாய் எடுத்து ஓத வேண்டும். அதன் போலித் தத்துவங்களை தைரியமாய் அழிக்க வேண்டும். அதோடுபோவி கற்பனை நிபந்தனைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற கோவில், குளம், சாமிதரிசனம், புண்ணியம், மோக்ஷம், அடுத்த ஜன்மம் என்கின்ற உபத்திரவங்கள் எல்லாவற் றையும் அடியோடு ஒழித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு விடுதலையோ சுதந்திரமோ, திருப்தியோ, மோடிமோ இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன். இந்த உபத்திரவங்களும் மடத்தளங்களும் இன்று உலகத்தில் உள்ள எல்லா சமயங்களிலும் இருக்கின்றது என்று ஒருசமயம் சொல்லலாம். ஆனாலும் இந்து சமயம் என்பதிலும் இந்திய மக்கள் என்பவர் களிடமுமே அதிகமாக மிக்க கெடுதி தரும்படியாக-சிறிதுகூட முன்னேற்ற மடைய முடியாதபடியாக = சீர்திருத்தம் செய்ய சற்றும் ஒறுப்படாததாக இருந்து வருகின்றது. மற்ற நாட்டாரும் மற்ற சமயத்தாரும் துணிந்து தாங்கள் முன்னேற்றமடையத்தக்க மாதிரியில் சமயக் கொள்கைகளைத் திருத்தி தடை களை அழித்து முன்னேற்றமும், விடுதலையும் அடைந்து வருகின்றார் கள். ஆதலால் வாலிபர்களே! நீங்கள் சற்று நிதானமாய் விஷயங்களை யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து உங்களால் சமூகம் முன்னேரும் படியும் சமயக் கொள்கைகள் அதற்கு பயன்படும்படியான மார்க்கத்தை தேடுங்கள். 

குறிப்பு: சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 'சமூக சீர்திருத்தமும் சமயக் கொள்கைகளும் ' என்ற தலைப்பில் ஆற்றிய உரை: 

குடி அரசு - சொற்பொழிவு - 25.01.1931

Read 29 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.