சகோதரர்களே!
இன்று நான், இன்ன விஷயத்தைப் பற்றித் தான் பேச வேண்டுமென்று நான் முடிவு செய்யவில்லை, ஆகிலும் கமிஷன் பகிஷ்காரம் என்னும் பொருள் பற்றிச் சிறிது பேச விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் இப்போது அரசியல் உலகத்தில் முக்கியமாக அடிபடுகிறது. அதாவது நமக்கு இதற்குமுன் சர்க்காரால் அளிக்கப்பட்டு நாம் அனுபவித்து வருகிற சீர்திருத்தத்தைக் குறித்தும், இந்தியர்களுக்கு இன்னும் அதிகப்படியான சீர்திருத்தம் கொடுக்கலாமா, அவர்கள் அவற்றை அடைய லாயக்குதானா என்பவைகளைக் குறித்தும் விசாரித்து அறிவிக்கும்படி பிரிட்டிஷ் பார்லிமெண்டு இப்போது ஒரு கமிஷனை அனுப்பியிருக்கிறது என்பதைப் பொருத்தவரை அரசியல்வாதிகள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். எனவே, நாம் இதை இப்போது பகிஷ்கரிக்க வேண்டுமா அல்லது அதனிடம் நமது குறைகளைச் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒத்துழைப்பதால் நாட்டுக்கு நன்மையுண்டா அல்லது பகிஷ்கரித்தால் நன்மையுண்டா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
நான் ஆரம்பத்திலிருந்தே ஒரு சிலர் ஆரம்பித்திருக்கும் கமிஷன் பகிஷ்காரம் வெறும் புரட்டென்றும், ஏதோ சில பார்ப்பனர்கள் கமிஷனால் தங்களுடைய ஆதிக்கம் போய் விடுமோ என்னும் பயத்தால் பகிஷ்காரம் பகிஷ்காரம் என்று வெறும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களென்றும், அவர்கள் மற்றவர்களை ஏமாற்றி தங்கள் காரியம் கொண்டு போகவே இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்களென்றும், ஆகையால் இழிவையும் கொடுமையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் இத்தகைய ஏமாற்று வார்த்தைகளுக்கு ஆளாகாமல் கமிஷனிடம் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை தெரிவித்தால்தான் அவர்களுக்கு ஏதாவது நன்மை உண்டாகலாமென்றும் நான் அடிக்கடி கூறி வந்திருக்கிறேன்.
ரகசிய திட்டங்கள்
ஸ்ரீ. எஸ். சீனிவாசய்யங்கார் தயாரித்த திட்டம் பார்லிமெண்டு குப்பைத் தொட்டிக்குப் போயிற்று. அம்மட்டோ? அவர் இங்கு பகிஷ்காரம், பகிஷ்காரம் என்று சொல்லி விட்டுச் சீமைக்கு தேகசுகத்தை முன்னிட்டுச் செல்வதாகச் சொல்லிப் போய் அங்கு பல ஆங்கிலேயர்களையும், அரசியல்வாதிகளையும் ஒருவர் பாக்கியில்லாமல் நேரில் கண்டு பேசி தம்முடைய திட்டத்தை அவர்களிடம் கொடுத்து அதை ஒப்புக் கொள்ள வேண்டுமென்று கெஞ்சினார். இதெல்லாம் பகிஷ்காரமா அல்லது ஒத்துழைப்பா?
இனி “ஹிந்து” ஆசிரியர் ஸ்ரீ. எ.ரெங்கசாமி அய்யங்கார் ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினார். அதுவும் பார்லிமெண்டு குப்பைத் தொட்டிக்கு இரையாயிற்று. அன்னிபெசண்டு அம்மையார் குடியாட்சி மசோதா ஒன்று தயாரித்து அனுப்பினார். அது ஒன்றரை வருஷமாகப் பார்லிமெண்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மாது இந்தியாவில் கதவு வைத்த வீடு வீடாகச் சென்று அதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கெட்டுப் போனதல்லாமல் மற்றக் கட்சிகளையும் கெடுக்கும் பொருட்டு சர்வகட்சி மகா நாடொன்று கூட்டி கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்துவிட்டு, மற்றொரு அரசியல் திட்டத்தைத் தயாரித்து கமிஷன் கால்களில் வைத்துப் பூசை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்டித நேரு ஒரு திட்டம் தயாரித்திருக்கிறார். அதுவும் கமிஷனுக்கு அனுப்பவே தயாரிக்கப் பட்டிருக்கிறதென்று நான் திட்டமாகக் கூறுகிறேன். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரும், தலைவரும், தனித்தனியாக திட்டங்களும், அபிப்பிராயங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது குறைகளை சர்க்காரிடத்தில் உள்ளபடி கூறுவதிலோ, அரசியல் புரட்டுகளை எடுத்துக் காட்டுவதினாலோ நாம் தேசத் துரோகிகளாக மாட்டோம். இதுவரை நாம் பார்ப்பனர்களிடம் இருந்து ஒத்துப்பாடியும் அவர்கள் நம்மை லட்சியம் செய்தார்களா? இதிலிருந்து அவர்கள் நம்மை ஏமாற்றுவதற்கே பகிஷ்காரக் கூச்சல் போடுகிறார்களென்பது தெரிய வரும். நாம் இதுவரை ஏமாந்து வந்தது போதும். கோயமுத்தூர் மகாநாட்டில் கவர்னர் மீது நம்பிக்கையில்லை என்ற ஒரு தீர்மானம் செய்யப்பட்டபோது இந்தப் பார்ப்பனர்கள் கவர்னரிடம் ஓடிப் போய் இதுவரை ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களை நல்லவர்களென்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். பாருங்கள், இப்போது உங்களையே விரட்ட வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கின்றார்கள்? என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்களை நம்பலாமா?
(குறிப்பு : 06.09.1928 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் பொதுக் கூட்டச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 16.09.1928)