‘குடி அரசின்’ நான்காவது ஆண்டு முதல் இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் பார்த்த நண்பர்கள் பலர் நமது இயக்கத்தைப் பற்றியும், நம் ‘குடி அரசின்’ வளர்ச்சியைப் பற்றியும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார்கள். உதாரணமாக காரைக்குடி ‘குமரன்’ பத்திரிகையும், அதன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியார் அவர்களும், அமராவதிப்புதூர் திரு. பிச்சப்பா சுப்பிரமணிய செட்டியாரும், கானாடுகாத்தான் திரு. வையி. சு. ஷண்முகம் செட்டியார் அவர்களும், மதுரை, அருப்புக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாகப்பட்டணம், கும்பகோணம், மாயவரம், தஞ்சை, திருச்செங்கோடு, மாரண்டள்ளி, அம்பலூர், சென்னை, கொளும்பு முதலிய இன்னும் பல இடங்களிலிருந்து பல நண்பர்களும் எழுதி இருக்கின்றார்கள்.
அவற்றுள் சிலர் ‘குடி அரசை’ லிமிட்டெட் கம்பெனியாய் ஏற்படுத்துவதை ஆதரித்தும், பலர் அதைத் தடுத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தை ஒரு தனி ஸ்தாபனமாக்கி அதற்கு வேண்டிய சங்கம், பிரசாரம் காரியஸ்தலம் முதலிய ஏற்பாடுகள் செய்யும் விஷயத்தில் யாவரும் ஒரே அபிப்பிராயமாகத்தான் எழுதி இருக்கிறார்கள். இதை சுமார் ஒரு வருஷ காலமாகவே பலர் எழுதி வருகிறார்கள். இவைகளில் மலேயா நாட்டுக் கடிதங்களே பல. ‘குடி அரசை’ தனித்த முறையில் நமது சொந்த பத்திரிகையாக நடத்துவதில் பொருள் நஷ்டம் ஒன்றுமில்லையானாலும் நம்மால் இனி நிர்வகிக்கக் கூடியதாயில்லை என்பதை நாம் தெரிவித்தாக வேண்டியதாயிருக்கின்றது.
எனவே சுயமரியாதைக் கொள்கை உடையவர்களாகவே சேர்த்து ஒரு லிமிட்டெட் கம்பெனியாக்கி (எந்த மதத்தைப் பற்றியானாலும் சரி) வேதம், சாஸ்திரம், புராணம், ஜாதி, மதம் முதலியவைகளில் (எந்த மதத்தில் பிறந்தவர் களானாலும் சரி) அடியோடு நம்பிக்கையில்லாதவர்களாகவும் மனம், வாக்கு, காயங்கள் மூலம் சற்றும் அவை அனுபவத்திலில்லாதவர்களுமான ஒரு கூட்டத்தாரின் சுதந்திரத்தில் ஆசிரியத் தன்மையை விட்டு, ‘குடி அரசு’ம், ‘ரிவோல்ட்’டும் நடைபெறும்படியான ஏற்பாடு செய்வது மிகுதியும் அவசியமான காரியம் என்பதே நமது அபிப்பிராயம்.
மற்றபடி தங்கள் இனத்தாரின் சுயநலங்காரணமாகவோ, சில தனிப்பட்டவர்களின் பிழைப்பு காரணமாகவோ, அறிவில்லாத காரணமாகவோ கூப்பாடு போடுபவர்களை லட்சியம் செய்ய வேண்டிய நிலைமையையும் நமது இயக்கம் ஒருவாறு தாண்டிவிட்டதென்று சொல்லலாம். அன்றியும் அவ்வித கூப்பாடுகளால் நமக்கு பலவித நன்மைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆதலால் தொடர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்வதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய வேலையாகும். ஏதேனும் சில நண்பர்களாவது ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்திற்கு ஒரு சங்கமேற்படுத்தி அதை பதிவு செய்து அதன் மூலம் பத்திரிகைகளையும் நடத்த ஏற்பாடு செய்வதே நலம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இதைப் பற்றி சமீபத்தில் தஞ்சை ஜில்லாவில் கூட இருக்கும் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் ஒரு முடிவு செய்யலாம் என நினைக்கிறேன். அதற்குள் ஏதாவது கடிதப் போக்குவரத்து செய்ய வேண்டும் என்கிற எண்ணமுள்ள கனவான்கள் திரு. ஈ.வெ. ராமசாமி என்கின்ற சொந்த விலாசத்திற்கு எழுதிக் கொள்ளலாம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.05.1928)