அக்கிராசனாதிபதியே! சமரச சன்மார்க்க சங்கத்தினர்களே! மற்றும் இங்கு கூடியிருக்கும் அன்பர்களே!
இன்று சமரச சன்மார்க்க சங்க சார்பாக வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் கண்ட புகழுரைகளுக்கு நான் உண்மையிலேயே ஒரு சிறிதும் பொருத்தமில்லாதவனாயிருந்த போதிலும் அதன் போக்கானது எனது தொண்டின் தாத்பர்யத்தையும் போக்கையும் தாங்கள் மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு என்னை புகழ்வதாயிருப்பதால் மிக்க நன்றியறிதலோடும் மகிழ்ச்சியோடும் இவ்வுபசாரப் பத்திரத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்.
பொதுவாக ஒவ்வொரு மதக்காரரும் உட்சமயக்காரரும் தங்கள் தங்கள் மதம் சமயம் ஆகியவைகளை சமரச சன்மார்க்கக் கொள்கை கொண்டதென்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவரவர்கள் நடை உடை பாவனை உணர்ச்சி முதலியவைகள் வேறாகவே இருந்து வருகின்றன. ஒவ்வொரு மார்க்கக்காரரும் தமது கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஒருவனை துன்மார்க்கியாகவே கருதுகிறார். மகமதிய மதம் சமரச சன்மார்க்கத் தன்மை பொருந்தியதானாலும், மற்ற சமயக் கடவுள்களும் கொள்கைகளும் அவர்களுக்கு சிறிதும் சகிக்க முடியாததாகவே இருக்கின்றது. கிறிஸ்த்தவ மதம் சமரச சன்மார்க்கக் கொள்கையுடையதுதான் என்று சொல்லப்பட்டாலும், அது வேறெந்த மதத்திலும் மோக்ஷமடைய வழி கிடையாது என்றும், மற்ற மதஸ்தர்கள் எல்லாம் அஞ்ஞானிகள் என்றும் சொல்லக் கூடியதாக இருக்கின்றது.
இந்து மதமும் அதன் ஒவ்வொரு உட்பிரிவும் சமரச சன்மார்க்கம் கொண்டதென்றே பறையடிக்கப்படுகின்றது. இதைப் போல ஏற்றத்தாழ்வுகளும் துன்மார்க்கங்களும் கொண்ட மதம் இது சமயம் உலகில் வேறு ஒன்றும் இருப்பதாக சொல்ல முடியாது. வைணவத்திற்கும் சைவத்திற்கும் அதனதன் கடவுள்களுக்கும் உள்ள பேதங்களும் விரோதங்களும் சொல்லி முடியாது. ஒவ்வொரு நாளும் இதில் உள்ள உயிர்கொலைகள் கணக்கிலடங்காது. குடியும் விவசாரமும் ஏட்டிலடங்காது.
நிற்க சகலருக்கும் பொதுவாகவே சன்மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையை உடையது அல்லவென்றே சொல்லுவேன். ஒருவருக்கு சன்மார்க்கமாயிருப்பது மற்றொருவருக்கு துன்மார்க்கமாகவே காணப்படுகின்றது. சிலருக்கு, குழந்தைகளுக்குக் கலியாணம் செய்வது சன்மார்க்கம், சிலருக்கு பக்குவமான ஆண் பெண்கள் இருவருக்கும் அவரவர்கள் சம்மதப்படி கலியாணம் செய்விப்பது சன்மார்க்கம். சிலருக்கு மனிதனை மனிதன் தொடுவது துன்மார்க்கம். சிலருக்கு மனிதனுக்கு மனிதன் தொடுவதினால் குற்றமில்லை என்று சொல்வது சன்மார்க்கம். சிற்றப்பன் மகளை மணந்து கொள்வது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். அத்தை மகளை மணந்து கொள்வது சிலருக்கு சன்மார்க்கம். சிலருக்கு துன்மார்க்கம். மாடு தின்பது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். கடவுளுக்கு கண்ணு, மூக்கு, கை கால், பெயர் பெண்டு பிள்ளை முதலியவைகள் வைத்து வணங்குவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம். காலும் கையும் கெட்டியாயிருந்து நன்றாய் உழைத்து சாப்பிடக்கூடிய வரத் தடியர்களுக்குச் சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம்; சிலருக்கு துன்மார்க்கம். ஏழை எளியவர்கள், சரீர ஊனமுள்ளவர்கள், உழைத்துச் சாப்பிட சக்தியற்றவர்கள் ஆகியோருக்கு சாப்பாடு போடுவது சிலருக்கு சன்மார்க்கம், சிலருக்கு துன்மார்க்கம்.
(குறிப்பு: 08.04.1928 ஆம் நாள் அம்பலூர் கரிய கவுண்டர் அவர்கள் பங்களாவில் அம்பலூர் சமரச சன்மார்க்க சங்கத்தாரால் வழங்கப்பட்ட வரவேற்பு உபசாரப் பத்திரத்திற்கு பதில் அளித்து உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 22.04.1928)