டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத்தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாய் விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை.
இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3, 4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய் விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதியும் சட்டசபைகளில் நடக்கின்றதேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை. இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23 பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கக்ஷிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் 6 பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம்.
கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமையின்மேல் அறியாமையாகவே நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் கக்ஷி தேய்ந்து போகும்படியானதாகி விடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம்.
(குடி அரசு - தலையங்கம் - 04.03.1928)