சென்னையில் சமீபத்தில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டைப்பற்றி பார்ப்பன பத்திரிகைகளும் அவற்றைப் பின்பற்றி வாழும் பார்ப்பனரல்லாத சில பத்திரிகைகளும் அம்மகாநாட்டையும் மகாநாட்டு தீர்மானங்களையும் நசுக்க எண்ணங்கொண்டு அதைப் பற்றி வெகுகேவலமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இதைப் போன்ற ஒரு கொடுமையான காரியம் வேறு ஒன்று இருப்பதாகச் சொல்லமுடியாது.
ஆதிதிராவிட சகோதரர்கள் இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் நாலில் ஒன்று அல்லது ஐந்தில் ஒன்று என்பதாக 6, 7 கோடி மக்கள் இருந்தாலும், அதைப் பற்றி ஒரு சிறிதும் லட்சியம் இல்லாமல் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாகக் கூட வெளியார்கள் அறிவதற்கும் இல்லாமல் சூழ்ச்சி செய்து மறைத்து வைத்து விட்டு, அவர்களது சுதந்திரத்திற்காக இப்பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளான பார்ப்பனரல்லாதாரும் அவர்களது பத்திரிகைகளும் எவ்வித உதவியும் செய்யாமலிருப்பதோடு ஆதிதிராவிடர்களாக ஏதாவது முயற்சித்தாலும் அதையும் கொலை செய்யப் பார்க்கின்றார்கள். என்ன கொடுமை! என்ன கொடுமை!! அதாவது சமீபத்தில் சென்னையில் கூடிய ஆதிதிராவிட மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பற்றி ஒரு சிறிதும் அனுதாபம் கொள்ளாமல் அது “சர்க்கார் தாசர்கள் மகாநாடு” என்றும், “சுயநலக்காரர்கள் மகாநாடு” என்றும், ‘முப்பது பேர்களே’ அம்மகாநாட்டில் கூடி இருந்தார்கள் என்றும் எழுதி அதன் மதிப்பைக் கெடுத்துப் பொதுமக்களுக்கு அதனிடம் துவேஷமும் வெறுப்பும் வரும்படி பிரசாரங்கள் செய்து வருகின்றன.
காங்கிரஸ் ஏற்பட்டு 42 வருடங்களாகி, சீர்திருத்தம் ஏற்பட்டு 20 வருடங்களாகியும், ஏழு கோடி ஆதிதிராவிடர்களில் ஏதாவது ஒரு ஆதி திராவிடர் ஸ்டேட் கவுன்சில் முதல் கிராம பஞ்சாயத்து வரையில் ஏதாவதொன்றில் பொதுப் பிரதிநிதியாய் சர்க்கார் தயவில்லாமல் உட்கார இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
சில இடங்களில் தெருவில் நடக்கக் கூட உரிமையில்லாமலும் சில இடங்களில் மனிதன் கண்களில் தென்படக் கூட உரிமை இல்லாமலும் நரிபோலவும், முயல் போலவும் வெளியில் பதுங்கித் திரிகின்றார்கள். இவற்றை நீக்க ஏதாவது ஏற்பாடு செய்தார்களா? என்று கேட்கின்றோம். கோவில்களில் உள்ள தெய்வங்கள் என்பவைகளைப் பார்க்கவோ வணங்கவோ ஏதாவது வழி செய்தார்களா? என்று கேட்கின்றோம். குடிக்கவோ பல் விளக்கவோ தண்ணீர் இல்லாமல் திண்டாடுகின்றார்களே இதற்கு ஏதாவது வழி செய்திருக்கின்றார்களா என்று கேட்கின்றோம். அன்னிய நாட்டிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சைக்காரர்களாய் நமது நாட்டுக்கு வந்தவர்களான ஆரியர்களின் சந்ததியார்கள், பஞ்சாங்கம் சொல்லி பிச்சையெடுத்து புஸ்தகம் வாங்கி முனிசிபல் விளக்கு வெளிச்சத்தில் படித்துவிட்டு, இந்தியாவை காட்டிக் கொடுத்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்து மாதம் 1-க்கு 5000, 10000 ரூபாய் வீதம் சம்பளமுள்ள உத்தியோகமும் சம்பாதனையும் ஏற்படும்படியாக காங்கிரசின் மூலம் சீர்திருத்தம் சம்பாதித்துக் கொண்ட இவர்கள், இந்த ஏழை ஆதிதிராவிடர்கள் தெருவில் நடந்து மூட்டை தூக்கிப் பிழைக்கவாவது வழி செய்தார்களா என்று கேட்கின்றோம்.
நிற்க ஆதிதிராவிடர் மகாநாடானது இந்த மாகாண ஆதிதிராவிட சமூகத்திற்கு சரியான பிரதிநிதித்துவம் கொண்டதல்லவென்றும், முப்பது பெயர்களே இந்த மகாநாட்டுக்கு வந்திருக்கின்றார்கள் என்றும், அரசியல் பிழைப்புக்காரர்கள் எழுதி அம்மகாநாட்டை கேவலப்படுத்தி இருக்கின்றார்கள். இதைவிட அயோக்கியத்தனமான காரியம் வேறொன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்த மகாநாடு ஆதிதிராவிடர் மகாநாடு அல்ல என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன சுதந்திரமுண்டு என்று கேட்கின்றோம். ‘மித்திரன்’ கூட்டத்தாரும் ‘தமிழ்நாடு’ பத்திரிகை கூட்டத்தாரும் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களா? அல்லது வேறு ஆதிதிராவிடர்கள் மகாநாட்டை நடத்தியவர்களைவிட அதிகமான எண்ணிக்கைப் பிரதிநிதிகள் இவர்களுக்கு எழுதினார்களா? அல்லது ஆதி திராவிட சகோதரர்களுக்குள் ஏதாவது இம்மகாநாடு விஷயத்தில் தகராறு ஏற்பட்டதா? அப்படிக்கில்லாமல் அந்த சமூகத்திற்கு சம்மந்தப்படாத ஒருவர் அதுசரியான பிரதிநிதித்துவம் அல்ல என்று சொல்லுவது குறும்புத்தனமா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
(குடி அரசு - கட்டுரை - 22.01.1928)