பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு
நானும் எனது சகாக்களும் எதைச் சரி என்று உணர்ந்தோமோ, அதையே எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டுமென்ற கருத்துடனேயே இயன்ற தொண்டு செய்து வருகிறோம். எங்களுக்கு இத்தொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டதல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து வீரத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வந்து இன்று அன்னியர்கள் ஏமாற்றத்தில் அகப்பட்டு சுயமரியாதை அற்று மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்டே அதை நிவர்த்திக்க உழைத்து வருகின்றோம். ஏனெனில் நமது மக்களில் 100-க்கு 90 பேர் இப்போது கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகின்றனர். உலகத்தின் இதர தேசங்களையும் அத்தேசத்தாரின் நிலைமையையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் மற்ற காரியங்களையும் நம்மில் அநேகர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இது விஷயங்களையறிந்து நமது நிலைமையையும் கவனித்து எங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதைச் சொல்லவே முன் வந்திருக்கின்றோம். அதை நீங்கள் செம்மையாய் கவனித்து யோசனை செய்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டால் அதைச் செய்ய வேண்டுமென்றே உங்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நான் இவ்வாறு சொல்வது உங்களில் சிலருக்கு வருத்தமாகத் தோன்றலாம். நான் சொல்வதை பார்ப்பனர்கள் சொல்வதுபோல் அப்படியே நம்ப வேண்டுமென்று உங்களை கட்டாயப்படுத்தவில்லை. நான் நம்புவதை எனக்குத் தோன்றியதை நான் கண்டதைச் சொல்லுகிறேன். உங்கள் பகுத்தறிவைக் கொண்டு பார்த்து நான் சொல்லுவது நியாயமாயிருந்தால் அதைக் கைக்கொள்ளுங்கள். குற்றமானால் தள்ளுங்கள். அல்லாமல் இம்மாதிரி குருட்டுத்தனமாக நம்பிக்கை கொண்டு இன்னமும் மிருகப் பிராயத்திலிருந்தால் நாம் முன்னுக்கு வர முடியாது. அநேகமாய் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உண்மைகளை கண்டுபிடித்து அவற்றை செய்கையில் நடத்தியதானால்தான் இதர நாட்டினர்கள் முன்னுக்கு வந்திருக்கின்றார்கள்.
புரோகிதக் கொடுமையால் ஏற்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெரிந்ததாலேயே மேல் நாட்டினர் இன்று இந்நிலையிலிருக்கின்றார்கள். நம்நாட்டுப் புரோகிதக் கூட்டத்தைப் போலவே மேல் நாட்டிலும் 500 வருஷத்திற்கு முன் இருந்த புரோகித வகுப்பார் பாவமன்னிப்பு டிக்கட்டு என்று மக்களுக்கு விற்பனை செய்து பணங்களை கொள்ளையடித்து வந்ததாக சரித்திரம் இருக்கின்றது. அக்கொடுமையை அவர்களில் சில சீர்திருத்தக்காரர்கள் தோன்றியொழித்ததால்தான் அநேக அற்புதங்களைக் கண்டுபிடித்து ஆண்மையுடன் மேன்மையடைய முடிந்தது. பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கும் பயித்தியக்காரர்களாயிருந்தவர்கள் இன்று எவ்வளவோ தெய்வீகச் செயல்களைப் புரிகின்றார்கள். இது எதனால்? காலப் போக்கையறிந்து அறிவை உபயோகித்து மூடவாழ்விலிருந்து விலகியதால்தான் என்று மறுபடியும் சொல்லுகின்றேன். நாமோ பழைய வழக்கமென்ற கயிற்றால் தலையெடுக்க விடாதபடி கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம்.
மதம் என்பது மக்களின் வாழ்விற்கும் அன்புக்கும் பரோபகாரத்திற்கும் காலத்தின் நிலைமைக்கும் அறிவுக்கும் சீதோஷ்ண ஸ்திதிக்கும் தக்கதான கொள்கைகள். அக்கொள்கைகளைப் பற்றி வாழ்க்கையில் இன்பம் என்னும் முக்தியடைய ஏற்பட்டதேயல்லாமல் வேறல்ல. நமது மதம் என்பது அனுஷ்டானத்தில் இவ்வாறிருக்கின்றதா? இன்னும் முக்கியமாக உள்ள கிறிஸ்தவ மதம், முகமதிய மதம், புத்த மதம், இந்து மதம் ஆகிய நான்கில் இந்து மதம் என்பதைத் தவிர வேறெதுவும் கீழான நிலையில் இல்லை. நம்மைத் தவிர மற்ற மதஸ்தரெல்லாம் தங்கள் தேசத்தை ஆளுவதுடன் பிற தேசங்களையும் ஆண்டு வருகின்றார்கள். அப்படிக்கிருக்க நாமோ ஆயிரக்கணக்கான வருஷங்களாக அநேகருக்கு அடிமையாயிருக்கின்றோம் ஏன்?
நமது மதமென்பது நம்மை அடிமையாக்க உதவி புரிகிறது காரணம், அது பொய்யாகவும், புரட்டாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. நமது மதத்திற்கு பெயராக உள்ள இந்து என்ற வார்த்தை நமது தேச பாஷைகள் எதிலும் இல்லவே இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் இந்து என்ற வார்த்தை பாரசீக பாஷையில் திருடர்கள் என்று பொருள்படுவதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் சிந்து என்ற பதம் இந்து என்பதாக மாறிற்று என்றும், அது நாட்டைக் குறித்து என்றும் மதத்தைக் குறித்ததல்லவென்றும் கூறுகின்றார்கள். அதுவேதான் நம்நாட்டுக்கு இந்தியா என்ற பெயரைக் கொடுத்தது.
நமது மதம் கோடிக்கணக்கான வருஷங்களுக்கு மேம்பட்டதாகக் கூறுகின்றோம். ஆனால் விவரம் ஒன்றும் தெரியாது. நமக்கு எவ்வளவோ பின்பு ஏற்பட்டதாக நம்மால் கூறப்படும் எல்லா மதத்தினரும் கல்வி, ஆராய்ச்சி, பொருளாதார நிலைமை முதலிய பலவற்றிலும் முற்போக்குடன் உன்னத நிலையில் இருக்கிறார்கள். நமது மதத்தில் 100 -க்கு 5 க்கு மேல் படித்தவர்களில்லை. பிற மதங்களில் 100 -க்கு 90 பேர் இருக்கின்றார்கள். மதத்திற்காக இதர மதஸ்தார்கள் தங்கள் தங்கள் மதப்பிரசாரம் செய்யும் பொழுது நம் மதத் தலைவர்கள் நம் பணங்களைக் கோடிக்கணக்காய் வாங்கி தின்று கொண்டு எத்தகைய பிரசாரமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதுடன் நமது மதத்தவர்களை கோடிக்கணக்காக இதர மதங்களில் சேர இடங்கொடுத்து வருகின்றார்கள்.
நம் மத நூல்களை நம் மதத்தை சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். இதர மதக்காரர்கள் தங்கள் மதச் சங்கதிகளை தாராளமாக அச்சிட்டு வழங்குகின்றார்கள். பிற மதஸ்தார்கள் ஏழைகளுக்கு உபகாரங்களைச் செய்யும் பொழுது, நாம் தீண்டாதார்களென்று கோடிக்கணக்கான ஏழை மக்களை ஒதுக்கி வைத்து கஷ்டப்படுத்துகின்றோம். மத வழிபாட்டிலும் நாம் வீணாக குருக்களுக்கும், புரோகிதர்களுக்கும் கொடுத்து வறுமைப்படுகின்றோம். பிற மதங்களில் அவ்வாறில்லை. மதத்தின் பெயரால் நாம் செய்யும் சகல செலவுகளும் ஒரு வகுப்பாருக்கு ஜீவாதாரமாக முடிவதல்லாமல் அதைக் கொண்டு அவர்கள் நம்மை இழிவாக நடத்தி வரவும் இடங் கொடுத்து வருகின்றது.
ஒரு மதத்திற்குள்ளாகவே ஆயிரம் ஜாதி, பதினாயிரம் வகுப்பு, லட்சம் தெய்வம் என்பதாக மேலும் மேலும் பிரிவினையாகவே ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் நூல்களாகிய நமது சாத்திரங்களில் இந்த வித்தியாசங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? இடையில் புகுத்தப்பட்ட இந்த பேத வழக்கத்தை நாம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? பிராமணர் உயர்வு என்றும் மற்றவர் தாழ்வு என்றும் நாம் ஏன் கொள்ள வேண்டும்? சகல அக்கிரமங்களைச் செய்தாலும் ஒரு பிராமணன் உயர்வு என்றும் எவ்வளவு தூய வழக்கமும் அறிவுமுள்ளவனாக இருந்தாலும் ஏனையோர் தாழ்வு என்றும் கொள்வதுதானா நியாயம்? தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துக் கட்டுப்பாடு செய்துவிட்டு அவர்கள் சுசீலமாக இல்லையென்று சொல்வதில் என்ன அர்த்தம்? அவர்கள் மாடு தின்கிறார்கள் என்று சொல்வதும் விந்தைதான்? மாடு தின்னும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாய் இருக்கும் பொழுது நமது தேசத்தில் பிறந்த இவர்களை அதற்காக நாம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடத்த வேண்டும். இது நமது மதம் என்பதின் குற்றமல்லவா? இப்படியெல்லாம் செய்வதால்தானே நமது மக்கள் எல்லோரும் இதர மதங்களில் சேர்ந்துகொண்டு வருகின்றார்கள்.
திருவாங்கூர் ராஜ்யத்தில் சுமார் 40 லட்சம் ஜனங்களென்று கணக்கிருக்கும் பொழுது இப்பொழுதுள்ள ஜனக்கணிதக் கணக்குப்படி 16 லட்சம் கிறிஸ்தவர்களும், சுமார் 4 லட்சம் முகமதியர்களுமாக சுமார் 20 லட்சம் ஜனங்கள் அன்னிய மதத்திலிறங்கி இருக்கின்றனர். பாக்கியுள்ள 20 லட்சத்திலும் சுமார் 12 லட்சம் ஜனங்கள் தீண்டாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நிலைமையானதற்கு நம் மதக் கொடுமைதான் காரணம். ஆகவே, அவைகளை அடியுடன் ஒழித்தால்தான் நாம் சுகப்படுவோம். பிராமணர்களைப் போல் மதக் கட்டுப்பாடுகளை வற்புறுத்தும் பெயர் வழிகளிலும், இதர ஜாதிகளும் இல்லாமலில்லை. அவர்களையும் நாம் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் பார்ப்பனர்கள்தான் இவைகளுக்கு காரணமாகையாலும் அவர்கள் நம் நாட்டுக்கு வந்த பின்புதான் இவ்வாறான மூடப்பழக்கங்களெல்லாம் அவர்களால் ஏற்பட்டதாகையாலும் அவர்களைத்தான் முதலில் குறை கூற வேண்டியிருக்கின்றது.
இவர்கள் நிலைக்க வைத்த மதம் ஆசாரம் முதலியவைகளை நாம் முதலில் ஒழித்தால்தான் நமக்கு சுயமரியாதையும் அதன் மூலம் சுயராஜ்யமும் கிடைக்கும். இன்னும் சடங்குகளின் பேரால் நாம் பிராமணருக்குக் கொடுப்பதுதான் மோட்சம் என்று நினைத்து ஏராளமான பணத்தைச் செலவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை ஏழைகட்கும் அங்கஹீனர்களுக்கும் கஷ்டப்பட முடியாதவர்களுக்கும் உதவாமல் சோம்பேரிகளாகிய இவர்களுக்கா தர்மம் செய்வது. சற்று யோசித்து இதில் ஏதேனும் புண்ணியம் இருப்பதாகப் படுகின்றதா என்று பாருங்கள். இதெல்லாம் அறிவீனத்தையும் நமது சுயமரியாதை இன்மையையுமே காட்டுகின்றது.
தர்மம் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால் தகுதியை கருதி நாம் அதை நடத்த வேண்டும். அவ்வகையில் நாம் நடந்து வந்தால்தான் நமக்கு கதி மோட்சம் உண்டு. ஆகவே, சகோதரர்களே! இந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் உதறித் தள்ளி நீங்கள் சுயமரியாதைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
(குறிப்பு : 22.11.27 பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு - தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1927)