ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மறுபடியும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் உபநயனம் என்னும் பூணூல் கல்யாணம் செய்து தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆதலால் அவரை இனி வரதராஜலு அய்யங்கார் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த கோஷ்டியார் சுவீகரிக்கத்தக்க ஒரு சந்தர்ப்பம் வருவதற்கு ஸ்ரீமான் வரதராஜலு பட்ட பாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. முன்பு ஸ்ரீகாந்தியையும், ஒத்துழையாமையையும்கூடத் தாக்கி, சுயராஜ்ஜியக் கக்ஷியுடன் கூடிக் குலாவி எவ்வளவோ கூத்தாடியும், அதைப்பற்றி தனது பத்திரிகையில் எவ்வளவோ பிரசாரம் செய்து பார்த்தும் அதற்கு செல்வாக்கு இருக்கின்றவரை கூடவே இருந்தும் பார்ப்பனர்களின் புகழ் விளம்பர சாகரத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு அக்கக்ஷிக்கு சாவு மணியடிக்கப் போகின்றதென்று தெரிந்தவுடன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி அதைவிட்டு ஒரே தாவாகத் தாவி வெளியில் வந்து விட்டதும், பிறகு அது அடியோடு செத்து குழியில் போட்டு புதைக்கப்படும்போது தானும் ஒரு கை மண்ணை அள்ளிப் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல் இரவும் பகலும் அதை வைவதன் மூலம் அதற்கு கருமாதி செய்வதிலேயே தனது கிரியை ஆற்றி வந்தார். பிறகு இவர்களால் காங்கிரசுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக தெரிந்தவுடன் தனக்கு ஏதாவது ஒரு இடம் வேண்டுமே என்கின்ற எண்ணத்தின் பேரில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாகிய ஜஸ்டிஸ் கக்ஷி என்கின்ற மரத்தின் கிளையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தார். இது தெரிந்த பார்ப்பனர்கள் இவரை அடியோடு காங்கிரசை விட்டு வெளியாக்க தீர்மானித்துவிட்டார்கள்.
ஆனாலும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இவர் பேரில் உள்ள சந்தேகத்தினால் தனக்குள்ள ஆதரவற்ற தன்மையை அறிந்ததும் சென்ற தேர்தலின் பொழுது எக்கக்ஷி வலுக்கின்றதோ அக்கக்ஷியில் சேர்ந்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் பேரில், ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள், காங்கிரஸ் கக்ஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள் என்று சொல்லி பிரசாரமும் செய்து பார்த்து கடைசியில் காங்கிரஸ் கக்ஷிக்கு ஜெயம் என்று தெரிந்த உடனே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை தலைவராய் ஏற்று மந்திரி வேலை ஒப்புக்கொள்ளும்படி தந்தி கொடுத்து கேட்டுக் கொண்டும், அக்கூட்டத்தார் இவரை லக்ஷியம் செய்யாமல் போகவே, மறுபடியும் அவர்களை வைதுக் கொண்டு கோவை மகாநாடு மூலமாய் ஜஸ்டிஸ் கக்ஷியுடன் உறவாட முயற்சித்து மறுபடியும் அதை விட்டு காங்கிரஸ் சத்தம் போட்டு ஒன்றும் முடியாமல் போகவே கடைசியாக பார்ப்பனர்கள் தங்களை எவ்வளவு அவமானப்படுத்திய போதிலும் அதிலிருந்தால்தான் ரதம் ஓட்ட முடியும் என்று நினைத்து தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் போது திடீரென்று கடவுள் அனுப்பியது என்பதுபோல் ராயல் கமிஷன் சாக்கு ஒன்று வந்தது. அதற்கேற்றாப் போல் அய்யங்காரின் ஒற்றுமை அறிக்கை ஒன்றும் வந்தது. மற்றெல்லோரும் அவ்வறிக்கையை தலையில் அடித்து அதை நசுக்கிக் கொண்டிருக்கும் போது அய்யங்காருக்கு நல்ல பிள்ளையாக எண்ணி இவர் அதை கட்டி முத்தமிட்டு வரவேற்று உபதலையங்கம் எழுதினார்.
ஸ்ரீவரத ராஜுலுவின் சொந்த நிலைமை இன்னதென்பதை தென்னாற்காடு மகாநாடே அவருக்கு நன்றாய்க் காட்டி விட்டது. அதாவது இவர் தலைமை வகித்த மகாநாட்டுக்கு உள்ளுர் பார்ப்பனர்கள் யாவரும் வரவில்லையென்றும், வெளித்தாலூகாக்களிலிருந்து யாருமே வரவில்லை என்றும் ‘சுதேசமித்திரன்’ தெரிவிக்கிறது. மற்றபடி இந்தத் தலைவரைச் சுற்றி இருந்த பெரும்பான்மையான கோஷ்டிகளும் இதை உறுதிப்படுத்துகிறது. எது எப்படியானாலும் நல்ல சமயத்தில் கிடைத்த ஆதாரத்தைப் பிடித்துக்கொண்டு இனி கரையேற வேண்டிய வேலையே அவருக்குச் சரியாய் போய்விட்டது. என்னவெனில் பகிஷ்காரப் பிரசாரந்தான். தவிர பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் கூட இவரைப் போலவும் இவரது பத்திரிகையைப் போலவும் அவ்வளவு அதிகமாய் பகிஷ்காரப் பிரசாரம் செய்வதில்லை. ஏனென்றால் புதிதாக ஒருவர் ஒரு மதத்தில் சேருவாரானால் அதே மதத்தில் பிறந்து வளர்ந்தவர்களைப் பார்க்கிலும் அதிகமான வேஷம் போடுவது சகஜம். எதுபோலவென்றால் “புதிய சைவனுக்கு பூச்சும், ருத்திராட்சமும் அதிகமாயிருக்கும்” என்பது போல், அப்படிச் செய்தால்தான் மற்றவர்களும் நம்புவார்கள். ஆதலால் ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது பத்திரிகையும் பகிஷ்காரப் பிரசாரம் சரியாகவோ, தப்பாகவோ முழக்குவதில் நமக்கு அதிசயம் ஒன்றும் இல்லை. இதை நம்பிக் கெட்டுப் போக எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
(குடி அரசு - கட்டுரை - 11.12.1927)