“ஜஸ்டிஸ்” கட்சித் தலைவர்களுக்கு ராயல் கமிஷன் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய தன்மையைப் பற்றி ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தனது அபிப்பிராயமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் செய்தியாவது:-
பிரிட்டிஷாரின் ஏகபோக ஆதிக்கத்தை இந்தியர்கள் ஒப்புக் கொண்டு இருக்கின்ற வரையில் இம்மாதிரியான ராயல் கமிஷன்களில் இந்தியர்களுக்கு பதவி அளிக்காதது நம்மவர்களின் சுயமரியாதையை பாதிக்கக் கூடியதாய் இருக்கின்றது என்று எண்ணுவதில் கொஞ்சமாவது அர்த்தமில்லை. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஒரு அம்சமாகவே இந்த கமிஷன் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியரின் சுயமரியாதையை அடியோடு அழித்ததான பஞ்சாப் அநீதி போன்ற காரியங்களில், ஒன்று சேர்ந்து பரிகாரம் தேட சம்மதிக்காத ஒரு கூட்டத்தார் இப்போது பகிஷ்காரத்தைப் பற்றி வீண் கூப்பாடு போடுவது கேலிக்கிடமானதென்றே சொல்ல வேண்டும்.
ஆதலால் முழு சுதந்திரமும் கேட்கக்கூடிய காலம் வரும் வரை ‘ஜஸ்டிஸ்’ கட்சிக்காரர்கள் மாகாண சுயாட்சிக்காகவும், நம்முடைய நாட்டிலுள்ள எல்லா வகுப்பார்களுக்கும் சமமான நீதியும் பங்கும் கிடைக்கும்படியாகவும், ஒரு வகுப்பார் மற்ற வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்று கொண்டாடும் பாத்தியதையை நிராகரிக்கவும், ஒரே நிலையாக இருந்து பாடுபட்டு வர வேண்டியவர்களாவார்கள். ‘ஜஸ்டிஸ்’ கட்சியாரின் வெளிப்படையான இந்த கொள்கையை நம்முடைய தேச மக்களிடமும் மற்றும் அந்நிய நாட்டாரிடமும், அவர்களால் ஏற்படுத்தப்படும் சபைகளின் முன்னிலையிலும் ஸ்தாபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
கமிஷன் அங்கத்தினர்களில் இந்திய அங்கத்தினர்கள் ஒருவரும் இல்லாதது ஒரு கெடுதியாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கவர்ன்மெண்டார் ஒரு சமயம் இந்தியர்களில் யாரையாவது நியமிப்பதானால் இப்போதைய நிலைமையில் நியமனம் பெறக்கூடிய இந்தியர்கள் பொதுவாக பிராமணரல்லாதாருக்கு தீங்கிழைக்கக் கூடியவர்களாகத்தான் இருக்க முடியும்.
தவிர, ஆதியில் ரௌலட் கமிட்டியில், இந்தியர் ஒரு அங்கத்தினராய் இருந்தும்கூட, அக்கமிட்டியின் சிபார்சானது இந்திய மக்களை அரசாங்கத்தோடு ஒத்துழையாமை செய்ய வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. பொதுவாக யோசிக்குமிடத்து கமிஷனில் அங்கம் பெறக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர்களாகவே இருந்துவிடக்கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.
(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)