ஸ்ரீமதி பெசன்டம்மையார் நாம் முன் நினைத்தது போலவே திக் விஜயம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பார்ப்பன சூழ்ச்சியின் வரவேற்புகளும், உபசாரங்களும் தடபுடலாக நடைபெறுவதாக விளம்பரமாகி வருகின்றது. இந்த சமயத்தில் எதற்காக பெசண்டம்மையாரை பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் உணரக்கூடும். ஆனால் பார்ப்பனரல்லாதார்களில் முனிசிபாலிட்டி, தாலூகா போர்டு முதலிய ஸ்தானங்களில் பதவி வகிக்கும் சுயமரியாதை அற்ற பலர் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமாய் இருப்பது நமக்கு மிகவும் அவமானமாக இருக்கின்றது. அநேக பார்ப்பனரல்லாதார்கள் கொள்கையே இல்லாமல் இரண்டு பக்கமும் வாயை வைத்துக் கொண்டு தம்முடைய வாழ்வையே பிரதானமாகக் கருதி திரியும் இழிதன்மை மாறினாலொழிய பார்ப்பனரல்லாதாருக்கு சுயமரியாதை ஏற்படுவதென்பது கனவேயாகும்.
ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் பதவி கிடைக்கும்வரை தான் பார்ப்பனரல்லாதார் என்றும், பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு பாடுபடுகின்றவனென்றும், பார்ப்பன அக்கிரமங்களை அடக்கவே இப்பதவிகளுக்கு ஆசைபடுகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு பல்லைக் காட்டி பதவி பெற்றதும், பெற்ற தாயை துரோகம் செய்வது போல் தன்னையும் பரிசுத்த பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு பார்ப்பனக் கூட்டத்துக்கு வால் பிடிப்பதில் பந்தயம் போட்டு முந்த ஆரம்பித்து விடுகிறார்கள். இதைப்போல் சிறுமை குணம் வேறு கூட்டத்தில் இருப்பதாக நாம் சொல்ல முடியாது.
ஸ்ரீமான்கள் எ.ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி அய்யரும் மறைமுகமாயிருந்து கொண்டு நடத்துகின்றார்கள். அம்மையின் பிரசாரமெல்லாம் பார்ப்பன மதப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றுவதுமேயாகும். அதோடுகூடவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஆnக்ஷபிப்பதுமாகும். இந்த நிலைமையில் உள்ளவர்களை பார்ப்பனர்கள் வரவேற்கவும், பூர்ண கும்பமெடுக்கவும் மற்றும் படம் வைத்து பூஜிக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதார் எதற்காக இதில் சேருகின்றார்கள் என்பதுதான் நமது கேள்வி.
ஆதலால் இனியாவது ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.11.1927)