சென்னையில் 16.11.27 தேதி நடந்த கார்ப்பரேஷன் (முனிசிபல் சபை) தலைவர் தேர்தலில் வகுப்புவாதம் என்ன என்பதும் அது யாரிடத்தில் இருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கிவிட்டது. இனிமேல் கடுகளவு அறிவுள்ளவருக்கும் கூட அதைப் பற்றி எவ்வித சந்தேகமும் இருக்க நியாயம் இல்லை என்றே எண்ணுகின்றோம்.
சென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலை நினைத்த உடனே இந்த வருஷம் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாராகிய ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும், பார்ப்பனக் கக்ஷியாகிய சுயராஜ்ஜியக் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும் கருதியே வெள்ளைக்கார கவுன்சிலருடைய தயவு இருந்தால்தான் எந்தக் கக்ஷியாரும் வெற்றி பெற முடியும் என்கின்ற எண்ணத்தின் பேரில் இரு கக்ஷியாரும் வெள்ளைக்கார கவுன்சிலரை அணுகி கெஞ்சிப் பார்த்தார்கள். வெள்ளைக்காரர், இவர்கள் இவருடைய யோக்கியதையும் பார்த்து தனித்தனியே இரு கக்ஷித் தலைவரையும் தங்கள் தங்கள் அரசியல் கொள்கையைப் பற்றி தங்கள் முன் பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். அதற்கும் உடன்பட்டு பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்காக பனகால் ராஜாவும், பார்ப்பன கக்ஷிக்கு ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலமும் சத்தியமூர்த்தியும் போய் ஐரோப்பியர்கள் முன்னிலையில் தங்கள் தங்கள் கொள்கையைப் பற்றி பேசினார்கள். பேசியதில் இவ்விரு கக்ஷியாரும் ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு ஒருவர் பேரில் ஒருவர் குற்றம் சொல்ல இடம் ஏற்பட்டதே ஒழிய ஒருவர் காரியமும் பலிக்கவில்லை.
ஸ்ரீமான் நடேசய்யருக்கு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, நு.டு அய்யர், புர்ரா, சத்திய நாராயண அய்யர், மு. பாஷ்ஷியம் அய்யரவர்கள், டாக்டர் மல்லையா, டாக்டர் நாராயணராவ் ஆகிய ஆறு பார்ப்பனர்களும் ஒருங்கே ஓட்டு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றோம்..
ஜி.எ. நடேசய்யரின் அரசியல் கொள்கை என்ன என்று பார்த்தால் ஜஸ்டிஸ் கட்சியைவிட எந்த விதத்தில் தீவிரமானவர். சுமார் 10 வருஷத்துக்கு முன் வரையில் ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யரை கவர்மெண்டு ஒற்றர் என்று இந்த பார்ப்பனர்களே சொல்லிக் கொண்டு திரிந்தது என்ன ஆச்சுது? தவிர வெள்ளைக்காரருக்கு ஸ்ரீநடேசய்யர் எந்த விதத்தில் இப்போது மேலானவர் என்று சொல்லக்கூடும்? சென்ற வாரத்தில் தானே ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யர் ராயல் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பேசியதும், பகிஷ்காரக் கட்சியில் சேர்ந்திருக்கின்றார். ஆகவே, இதில் வகுப்புவாதமில்லாமல் வேறு என்ன தத்துவம் இருக்கின்றது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் வெள்ளைக்காரர் கூட்டத்தில் பேசும்போது சுயராஜ்யக் கக்ஷியார் யோக்கியர்கள் என்றும் ஜஸ்டிஸ் கக்ஷியார் சுயராஜ்யக் கக்ஷியைவிட அமிதவாதிகள் என்றும் உதாரணமாக கோயமுத்தூர் மகாநாட்டில் எல்லாக் கக்ஷியைவிட அமிதவாத கொள்கையை உடையதான இரட்டை ஆட்சி ஒழியும் வரை பதவி ஏற்பதில்லை என்று தீர்மானம் செய்திருக்கின்றார்கள் என்றும் சாடி சொல்லிக் காட்டிக் கொடுத்ததிலிருந்தே ஜஸ்டிஸ் கக்ஷி ராஜீய அபிப்பிராயம் வெள்ளைக்காரர்களுக்கு தத்துப் பிள்ளைகள் அல்ல என்பதை காட்டும். இப்படியெல்லாம் இருப்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளச் சக்தி இல்லை என்கின்ற எண்ணத்தின் பேரில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்ன என்னமோ நொண்டி சமாதானம் சொல்லுகிறார்.
சுயராஜ்யக் கட்சி தங்கள் கட்சியிலிருந்து தலைவர் ஸ்தானத்திற்கு அபேட்சகர் நிறுத்தாததற்கு காரணம் அடுத்த வருஷம் வரி அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயந்து விட்டார்களாம். இது யோக்கியமான காரியமாகுமா? அப்படி அதிகமாக்க வேண்டிய அவசியமிருந்தால் அதிகப்படுத்துவதில் ஆnக்ஷபனை என்ன? ஆகவே இந்த தைரியமும் பகுத்தறிவும் இல்லாத கட்சி வேறு என்ன காரியம் செய்ய முடியும்? எனவே ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் பார்ப்பனரல்லாததால் நிறுத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டால் விவகாரம் ஒரு வழியில் தீர்ந்துவிடும். அப்படி இல்லாவிட்டால் பார்ப்பன வண்டவாளம் மேன்மேலும் வெளியாகுமேயல்லாமல் நன்மை ஒன்று உண்டாகாது. இதுவரை இப்பார்ப்பனர்கள் எத்தனை பார்ப்பனரல்லாதாரை இம்மாதிரி செய்தார்கள் என்பதற்கு எவ்வளவு சாக்ஷி வேண்டும். பழய சங்கதிகளை விட்டு விட்டாலும் சமீப சம்பவங்களை கவனித்தால் அதுவே போதும் என்று நினைக்கின்றோம்.
காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பி.வரத ராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியோர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கமிட்டியில் இருக்க யோக்கியதை இல்லை என்று சொல்லி விட்டதும், ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியாரை விரட்டி விட்டதும், ஸ்ரீமான் ஆரியாவை விரட்டி விட்டதும், ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களையும், ஆரியாவையும் சிறையில் வைக்க வேண்டும் என்று சர்க்காரை வேண்டிக் கொண்டதும் ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பை மதுரை தேர்தலில் நடத்தியதும் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரை நடத்தியதும் ஸ்ரீமான் முத்தையா முதலியாரை நடத்தியதும் இப்போது திரு.சாமி வெங்கிடாசலம் செட்டியாரை நடத்தியதும் யோசித்தால் விளங்காமல் போகாதா என்று கேழ்க்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 20.11.1927)