நான் இவ்வூருக்கு இதற்கு முன் இரண்டு தடவை வந்திருக்கின்றேன். இது மூன்றாம் தடவை. தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல இடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால் சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலைப் பெற்று வாழும் மக்களிடம் சுயமரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நாம் பல ஆயிரம் வருஷங்களாக விடுதலையின்றி அடிமைகளாகத்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பது நன்கு விளங்கும். முன்னர் சுமார் 500 வருஷங்களுக்கு முன் வெள்ளையர்கள் இருந்த நிலைமையையும், இப்போது அவர்கள் இருக்கும் நிலைமையையும் கவனிக்கையில் அவர்கள் எங்ஙனம் மாறுதலடைந்து வந்திருக்கிறார்கள் என்பது விளங்கும். இவர்கள் அக்காலத்தில் நம்மைவிட பக்தி, மூடக் கொள்கை முதலிய படுகுழிகளில் ஆழ்ந்து கிடந்தார்கள். நாம் நம் நாட்டில் நாகரிகம் படைத்திருந்த காலத்தில் அவர்கள் காட்டுமிராண்டிகளாக, மீன், நண்டு, புழு, பூச்சி முதலியவைகளைப் புசித்துக் கொண்டு அநாகரீகர்களாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். அத்தகைய ஜாதியார்கள்தான் நம்மை அநாகரீகமுள்ளவர்கள், மிலேச்சர்கள் என்று பலவகை மொழிகளை நம்மீது சாற்றி இழிவுபடுத்தி, அடிமைகளாக்கி ஆண்டு வருகிறார்கள்.
பல நூற்றாண்டுகளாக நாம் அடிமைக் குழியிலேயே இருந்தும், நாம் விழித்தெழுந்து நமது குறைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவில்லை. சுயராஜ்யம், விடுதலை என்றுதான் கத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நாளுக்கு நாள் பலமாகக் கிளர்ச்சி செய்து கொண்டும் கூக்குரல் செய்து கொண்டு வந்தும் நாளுக்கு நாள் நாம் பின்னோக்கியே செல்கின்றோம். இத்தகைய கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு எதிரிகள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.
இனி மதாச்சாரியர்கள், குருமார்கள் முதலியவர்களைக் கவனிப்போம், இவர்கள் குதிரைப் பல்லக்கு முதலியவைகளைப் போட்டுக் கொண்டு கொள்ளைக்காரர்களைப் போல ஊர் ஊராய் வந்திறங்கி, அங்குள்ள உத்தி யோகஸ்தர்கள், மிராசுதார்களின் செல்வாக்கை அனுகூலமாகக் கொண்டு மூட்டை மூட்டையாக பணத்தைப் பலரிடமிருந்து பறித்துக்கொண்டு செல்கின்றனர். இவர்கள் சொல்லிவாங்கும் வகைகளுக்காவது அப்பணத்தை செலவு செய்கின்றார்களா பாருங்கள். இல்லையே. அத்தகைய மடாதிபதிகள், குருமார்கள் பணத்தைக் கொண்டு போய் என்ன செய்கிறார்கள்? அவர்கள் யோக்கியதை என்ன? அவர்கள் நமக்கு என்ன உபதேசம் செய்கின்றார்கள்? என்பதையே நாம் கவனிப்பதில்லை. இவர்களெல்லாம் குலகுருக்களென ஆடம்பரத்துடன் எவ்வித யோக்கியதையும் இலட்சணங்களுமின்றி ஊர் ஊராய் கம்பீரமாய் வருகின்றனர். இவர்களிடம் அயோக்கியத்தனமே நிறைந்திருக்கிறது.
இனி நம் ஹிந்து மதஸ்தர்கள் அணிந்து கொள்ளும் சின்னங்களின் அர்த்தமென்ன என்று கேட்டால் ஒருவருக்கும் ஒன்றுமே தெரியாது. இதையெல்லாம் பொது ஜனங்களுக்கு உணர்த்த எவரேனுமிருக்கின்றனரா? இம் மாதிரியான அர்த்தமற்ற சடங்குகள் மூடக் கொள்கைகள் முதலிய ஊழல்களால் எத்தனை ஆயிரம் ஜனங்களை நாம் பிற மதங்களுக்கு பலி கொடுத்திருக்கின்றோம் என்று கவனியுங்கள். ஒரு ஹிந்து அரசரால் ஆளப்படும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சுமார் 35 வருஷங்களுக்கு முன் இருந்த மூன்று லக்ஷம் கிறிஸ்தவர்கள் இப்போது 15 லக்ஷமாகப் பெருகிவிட்டனர். இப்படி நாம் நமது மதத்தின் பேரால் பலரை அன்னிய மதங்களுக்கு அனுப்புவதல்லாமல் ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களை உயிருடனேயே “சனீஸ்வரர்களாகிய பிராமண எமன்களுக்கு” ஆளாகும்படி செய்து வருகிறோம்.
இனி மதத்தின் பெயரால் சிறு பெண்களைக் கோவில்களில் பொட்டுக் கட்டி விபசாரத்துக்கு விட்டு வைப்பதை தடுக்கும் பொருட்டு சென்னை சட்டசபையிலும் வெளியிலும் பலத்த கிளர்ச்சி செய்யப்பட்டது. இதைப் பெரும்பாலோரான பிராமணரல்லாதார் ஆதரித்தும் சத்தியமூர்த்தி போன்ற பிராமண அரசியல் தலைவர்கள் தேவதாசிகளைக் கோவில்களில் பொட்டுக் கட்டி வைப்பது மத சம்மந்தம் என்று அதை எதிர்த்து பிரசங்கங்கள் செய்தனர். இவர்களெல்லாம் போலிகளென்றும், வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு பணம் பறித்துத் தின்று திரிபவர்கள் என்றுந்தான் சொல்லுவேன். இதனால்தான் ஸ்ரீமேயோ போன்ற பிற நாட்டார்கள் நம்மை இழிவுபடுத்தி புஸ்தகம் எழுத இடமேற்படுகிறது. அதனால் நாம் இப்போது அனுஷ்டித்து வரும் மதம், மூடக் கொள்கை ஆகியவைகள் ஒழிந்தால்தான் நாம் nக்ஷமமடைவோம். இத்தகைய சடங்குகளும், கிரியைகளும் செய்து பணத்தைச் செலவிட்டும் நம் மதஸ்தர்களுக்குள் ஒருவருக்கொருவர் கட்டுப்பாடு சிறிதேனும் உண்டா? இல்லையே கட்டுப்பாடு இல்லாமற் போய்விட்டதுடன் ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வும் நமது மதம் கற்பிக்கிறது. உண்மையான ஒற்றுமையும், கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை ஏமாற்ற நம் நாட்டில் போலி ஒற்றுமைப் பிரசங்கங்கள் காங்கிரஸ் பெயராலும் மற்றும் ஸ்தாபனங்கள் பெயராலும் எங்கு பார்த்தாலும் ஆகாயம் அளாவும்படி ஒலிக்கின்றன.
இனி போலி பிராமணர்கள் ஊளையிடும் சுயராஜ்யத்தைப் பற்றி சிறிது ஆராய்வோம். சுயராஜ்யம் என்றால் என்ன? அதை நாம் அடைய யோக்கியதை உள்ளவர்களா? நமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் முதலிய சகல உரிமைகளையும் அன்னியோன்யமாய் அனுபவிக்கிறோமா என்று பார்த்தால் நம்மை ஆளும் வெள்ளைக்காரர்கள் இந் நாட்டில் இருந்தால் போதும் என்றுதான் சொல்ல வேண்டிவரும். இத்தகைய நிலையில் நாம் இருக்கும்போது இதற்கு முன் இரண்டு சுயராஜ்யம் வந்து விட்டு போய்விட்டது. மூன்றாவது சுயராஜ்யமும் 3 மாதக் கர்பமாக இருக்கிறது. இதற்கு முன் வந்த சுயராஜ்யத்தால் 3 மந்திரிகளும் 3 நிர்வாக உத்தியோகஸ்தர்களும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களுடைய சம்பளச் செலவுகளுக்கெல்லாம் குடியானவர்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்களின் தலைகள்தான் மொட்டையடிக்கப்படுகின்றன. நமக்குக் கிடைத்த இரண்டு சுயராஜ்யத்திற்குப் பிறகு ஹைகோர்ட் ஜட்ஜ்களும் உத்தியோகஸ்தர்களும்தான் அதிகப்பட்டன. இவ்விதம் சிப்பந்திகள் அதிகப்பட்டும் நிர்வாகமும் ஒழுங்காக நடைபெறுவதாகக் காணோம். ஆகையால் சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று கத்துவதெல்லாம் வெள்ளைக்காரர்களும், பணக்காரர்களும், படித்தவர்களும் லாபம் பெறவேயொழிய நாட்டுக்கு எத்தகைய நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஆகையால் நாம் சுயமரியாதையடைந்து ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு உண்மையான சுயராஜ்யம் பெற வேண்டுமானால் நம் மதத்தின் பேரால் ஏற்பட்டுள்ள மூடக் கொள்கைகளையும், புரட்டுகளையும் அறவே ஒழிக்க வேண்டியது அவசியமாகும்.
(குறிப்பு : 7.11.27-ல் பட்டுக்கோட்டையில் சுயமரியாதைப் பிரசார சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.11.1927)