பிள்ளையார். குடி அரசு கட்டுரை - 26.8.1928

Rate this item
(1 Vote)

இந்து மதம் என்பதிலுள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது; ஏட்டிலடங்காது என்பதுபோல எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோவில், குளம், பூசை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவைகள் ஏற்படுத்தி இருப்பதும், அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்குப் பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரமும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவும் வெகுகாலமாய்ப் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக்கூடிய காரியமல்ல.

இந்தக் கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் "கணபதி” என்றும் ''விநாயகன்'' என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைக்கப்படுவதும் உண்டு.

நிற்க. இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்துவாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதானதும். யாவராலும் ஒப்புக் கொள்ளக்கூடியதும், அதிகச் செல்வாக்குள்ளதும் முதற்கடவுளென்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றிச் சற்றுக் கவனிப்போம்.

ஏனெனில் கடவுள்களின் சங்கதி தெரியவேண்டுமானால், முதன்முதல் முதற்கடவுளைப் பற்றித் தெரிவதுதான் நன்மையான தரும். ஏனெனில் முதற்கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாகத் தெரிந்தால் மற்ற கடவுள்கள் சங்கதி விளங்க எதுவாயிருக்கலாம். அன்றியும், எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் ககைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ?

இல்லாவிட்டால், அக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு எடுக்க இக் காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும். அன்றியும் சமிபத்தில் அக்கடவுளின் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்தச் சமயம் ஒருவேளை பொருத்தமாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்!

பிள்ளையார் பிறப்பு :

ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காகத் தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும் படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகி விட்டதாகவும், (ஆகலா மல்லவா? எப்படி எனில் மாட்டின் மலமான சாணிப்பிண்டமே பிள்ளையாராகின்றபோது பார்வதியின் அழுக்கு பிள்ளையாராவது அதிசயமா?) அந்த ஆண் குழந்தையைப் பார்த்து, நான் குளித்துவிட்டு வரும் வரையில் வேறு யாரையும் உள்ளேவிடாதே! என்று சொல்லி அதை வீட்டு வாயிற் படியில் பார்வதி உட்கார வைத்திருந்த தாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்கு உருண்டையான, வாயில் காக்கும். பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக்கூடாது என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டுத் தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப்பிள்ளையார் தலையைவெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், அப்போது பார்வதி சிவனைப் பார்த்து காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்! என்று கேட்டதாகவும், அதற்குச் சிவன், காவல்காரன் தலையை வெட்டி, உருட்டிவிட்டு வந்தேன் என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி தாள் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்கவேண்டி வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக்கருதி உடனே வெளியில் வந்து பார்க்க. வெட்டுண்ட தலை காணாமல் போனதாகவும், அப்போது அருகிலிருந்த. ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து அதற்கு உயிர் கொடுத்துப் பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக்கதைக்கு சிவபுராணத் திலும் சுந்த புராணத்திலும் ஆதாரம் இருக்கின்றனவாம்.

ஒரு காட்டில் ஆண், பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

பார்வதி கர்ப்பத்தில் கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக் கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச் சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையை வைத்து உண்டாக்கிக் குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதியின் தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது "தக்கயாகப் பரணி” என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.

இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அவை பற்றியும் பிள்ளையாரின் மற்ற கதைகளைப் பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வ திக்கோமகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு வளர்ப்பு. உடையவராகவும் ஏற்படுவதுமாயிருந்தால் மற்ற கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா?

நிற்க, ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய், தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும்? (இவைகளைப் பார்க்கும்போது கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்!) ஆகவே, இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது.

கடவுளைப் பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும் போது மாத்திரம், "கடவுள் ஒருவர் தான்; அவர் நாமரூப குணமற்றவர். ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பற்றவர்; தானாகவே உண்டானவர். என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும் ஒரு தன்மை அல்லது குணம்" என்றும் பேசி, அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு, பிறகு இம்மாதிரிக் கடவுள்களைக் கோடிகோடியாய் உண்டாக்கி, அவைகட்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாகக் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்கள் நம்பவும் வணங்கவும் பூசை செய்யவும் உற்சவம் முதலியன செய்யவும், செய்வதில் எவ்வளவு அறியாமையும் புரட்டும் கஷ்டமும் இருக்கின்றன என்பதை வாசகர்கள்தாம் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரம் நடராசர் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு இக்காட்சியை யாவருக்குத் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக்காட்சிக்குத் தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகிறது. பல ஆண், பெண் பக்தர்கள் அதைத் தரிசித்தும் கும்பிட்டும் வருகின்றார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக் கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறிக்குள் புகுத்தி அந்தப் பெண்ணைத் துக்கிக்கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக்கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப் பட்டிருக்கின்றது. இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால் இவைகளுக்கு ஒரு கதையும், புராணமும் இருப்ப தாகவும் சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தர் கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு  சூரார்கள் ஒரு அசுர பெண்ணின் குறியிலிருந்து பற்றிலிருந்து ஈசல் பறப்படுவது போல் பல இலட்சக்கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரவர்கள் ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது துதிக்கையை அந்தப்பெண்ணின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித் தன்மையான ஆபாசங்களுக்கு கண்டதையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ”ஆத்திகர்கள்” என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.

”எவனோ ஒருவன் ஒரு காலத்தில் அப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்லுவதானால் இவைகளுக்குத் தினமும் பெண்டுபிள்ளை, வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள், ”அப்படி இருக்க வேண்டும்” ”இப்படி இருக்க வேண்டும்” என்றும், மதத்திற்கு ஆபத்து! சமயத்துக்கு ஆபத்து! கடவுள்களுக்கு ஆபத்து! என்றும் கூப்பாடு போட்டு, மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று, அவைகளிடம் வக்காலத்துப் பெற்று, மற்ற மக்கள் துணையக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆத்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும் - பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும். குறையில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல் சும்மா இருந்து கொண்டும், இந்த ஆபாசங்களை பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்லுபவர்களை நாத்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாதென்றே சொல்லுவோம்.

சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

குடி அரசு கட்டுரை - 26.8.1928

Read 187 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.