சமீப காலத்தில் எங்கும் சுயமரியாதைத் திருமணங்கள் நூற்றுக்கணக்காய் நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அவைகளைப் பூரணமாய்ப் பிரசுரிக்கமுடியாமைக்கும் வருந்துவதுடன் அனேக திருமணங்களுக்குப் போக முடியாமைக்கும் விசனிக்கின்றோம்.
இவ்வியக்கம் தோன்றிய இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்களை நீக்கிய திருமணங்களும், மூடச்சடங்கை நீக்கிய செய்கைகளும் சந்தோஷமடையத்தக்க அளவு நடந்து வந்தாலும், விதவா விவாகம், கலப்பு மணம் முதலியவைகள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு 100 ற்கு 1 - பங்கு கூட நடத்தப்பட்டதாய் சொல்வதற்கில்லை.
ஆதலால், நமது நண்பர்கள் ஆங்காங்கு முயற்சித்து விதவைகளுக்கு மணம் செய்விக்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டிக் கொள்ளுகின்றோம்.
மணமக்களுக்கு உத்தியோகங்கள் சம்பாதித்துக் கொடுக்கக் கூட பல நண்பர்கள் முன்வந்திருக்கின்றார்கள். சுயமரியாதைத் தொண்டார்கள் இந்தாண்டில் சற்று கவலை செலுத்த விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.09.1929