நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் ‘நமது நாட்டு கடவுள்’களே வழிகாட்டிகளாகயிருக்கிறார்கள் . அதாவது சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபசாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள்களிடத்தில் இவையாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித் தனியாகவும் சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படியும், மாதப்படியும், வருஷப்படியும் காலnக்ஷப மூலமாகவும், நடிப்பு மூலமாகவும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம். இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்து வரச் செய்திருக்கிறார்கள் . தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக் கூடும்? இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம் செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்? கடவுள்களும் கடவுள்களைப் பற்றிய கதைகளும் புராணங்களும் மற்றும் அது சம்மந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்குவதற்கு உண்டாக்கப்பட்டனவேயன்றி, இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப்பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது.
தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும், அதாவது கடவுளுக்கு பணி செய்ய இவர்கள் கோயிலில் நியமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும், இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்? வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண் மக்கள் உங்கள் சமூகத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்? இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூஜை காலத்தில் 10, 20, 30 சில கோயில்களில் 100, 150 வீதம் விபசாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது? கிராமாந்தரங்களில் எந்த கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்கும் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள், முதலாவது தர்மகர்தாவுக்கு அல்லது அவர்கள் மக்களுக்கு. அதற்கடுத்தது தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.
“சாஸ்திரங்களிலிருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். “வெகு காலமாய் வழக்கத்தில் வந்து விட்டது, அதற்கு நாம் என்ன செய்வது” என்று சிலர் சொல்லலாம். இதெல்லாம் முட்டாள்தனமான சமாதானமாகுமே தவிர அறிவுள்ள சமாதானமாகாது. நம்முடைய சாஸ்திரத்தில் இல்லாத அயோக்கியத்தனம் உலகத்தில் ஒன்று கூட இல்லை என்பதாக நம்மால் மெய்பிக்கலாம். அதையெல்லாம் இன்றைய தினம் நாம் செய்வதென்றால் நம்மைப் போல் மூடர்கள் உலகத்திலிருக்கவே முடியாது. அந்த சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதினார்கள்? இம்மாதிரி வேறு தேசத்தில் வேறு மதத்தில் வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்கு தொழில் வேண்டும், வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதாக ஏதாவது ஒன்றை எழுதி வைத்து நமக்குக் காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகி விடுமா அல்லது ஆதாரமாகி விடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது?
(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது. குடி அரசு - கட்டுரை - 04.09.1927)