சென்னையில் சுயமரியாதைத் திருமணம்
நான் மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் என்ன என்பதைப் பற்றி யோசித்ததில் இப்பொழுது வழக்கத்தில் ஆசீர்வாதம் செய்கின்ற மாதிரியானது, சிறிதும் பொருளற்றது என்பதோடு, நம்மிடம் பிச்சை வாங்கி உண்பவர்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகச் செய்யும் காரியமாக இருக்கிறபடியால், இம்முறையில் ஆசீர்வாதம் செய்வது என்பது எனக்கு இஷ்டமில்லாத காரியமாகும். ஏனெனில் ஆசீர்வாதம் செய்யும்படி விரும்புகின்றவர்களும் எதிர்பார்க்கின்றவர்களும் இவ்வாசீர்வாதத்தால் உண்மையான பலனை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஆசீர்வாதம் செய்கின்றவர் ஆசீர்வாதம் செய்யப் படுகின்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லாமல் ஆசீர்வாதம் செய்வது என்பதை ஒரு பெருமையாக நினைத்து, தமக்கும் மற்றவர்களுக்கும் பொருள் விளங்காத ஏதோ ஒன்றின் மீது பழியைப் போட்டு அது உன்னைக் காப்பாற்றட்டும், இது உங்களைக் காப்பாற்றட்டும் என்று கை காட்டிவிட்டுப் போவதில் யாதொரு பலனும் இல்லை. அதுவும் இதுவும் மணமக்களை காப்பாற்ற ஆசீர்வாதம் செய்பவருடைய தயவு வேண்டியதில்லை. அப்படிக் காப்பாற்றும் ஒரு வஸ்துவோ, அல்லது ஒரு சக்தியோ வேறு ஒருவர் காப்பவருக்கும் காக்கப்படுபவருக்கும் இடையில் தரகராயிருந்து வக்காலத்துப் பேச வேண்டியதுமில்லை. அன்றியும் அப்படிக் காக்க வல்லமையுள்ள பொருளோ சக்தியோ மத்தியில் வக்கீலையும் தரகரையும் எதிர்பார்க்காது. ஆதலால் அந்த முறை அசட்டு முறை என்பதுதான் எனது அபிப்பிராயம்.
ஆனால் இப்படி ஒரு வழக்கம் ஏன் இருக்கிறது? என்று பார்த்தால் ஆசீர்வாதம் பெறுவது என்பது ஆதரவு பெறுவது என்பதற்காகத்தான் ஏற்பட்டதாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யாதானுமொருவர் ஒரு கனவானையோ மணமக்களையோ அல்லது ஏதாவது ஒரு ஸ்தாபனத்தையோ ஆசீர்வதிப்பது, வாழ்த்துவது என்பதானால், அவ்வாசீர்வதிப்பவர் மீது பொறுப்பு விழுகக் கூடியதாய்த் தானிருக்கும். எப்படியெனில் வாழ்த்தினவர் வாழ்த்தப் பட்டவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாளி யாவார். அப்படிக் கில்லாமல் வாழ்த்துவது ஏமாற்றுவதுதான் ஆகும். அது பற்றியே அறிஞர்களா யுள்ளவர்கள் பெரியோர்களாகவும், செல்வாக்கும் பொது ஜனமரியாதையும், பெற்றவர்களையே வாழ்த்துதலுக்கு விரும்புகின்றதும், வழக்கமாய் இருக்கின்றது. ஆனால் இங்கு இது சமயம் என்னை விரும்பியது எது பற்றி என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் எனது தலை நரையைப் பார்த்து இங்குள்ளவர்களில் நானே பெருங்கிழவனென்று எண்ணி அழைப்பதாக நினைக்கின்றேன். இம்மாதிரி வாழ்த்துதலுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை.
மற்றபடி நாட்டுக்கோட்டை நகரப் பிரமுகர்களுக்கு இவ்வுணர்ச்சி தோன்றியிருப்பதும் அதிமுக்கியமான நாட்டுக்கோட்டை நகரத் தலைவர்கள் இங்கு விஜயம் செய்திருப்பதும் எனக்கு அளவிலாத மகிழ்ச்சியை விளைவிப்பதோடு இந்நாட்டின் விடுதலைக்கும் சுயமரியாதை வளர்ச்சிக்கும் ஒரு அறிகுறியாகும்.
குறிப்பு : 31.03.1929 இல் சென்னையில் நடைபெற்ற சென்னை சட்டசபை துணைத் தலைவர் டாக்டர். எஸ். முத்துலட்சுமி அம்மாள் அவர்களின் வளர்ப்பு மகள் திருமணத்தில் வாழ்த்துரை.
குடி அரசு - வாழ்த்துரை - 07.04.1929