செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய் விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும் பொது ஜனங்கள் கவனித்திருக்கலாம். அத் தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரியமில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம்.
ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வர பரோடா அரசாங்கத்தார் முந்தி விட்டார்கள் என்பதாக 29-3-29 -ந் தேதி ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’, ‘ஜஸ்டிஸ்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த - இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்டபோது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப் பட்டிருக்கின்றது. அதை கொண்டு வந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு பிரிவுக்கும் “சாஸ்திர” ஆதாரங்களை காட்டி இருக்கின்றார்களாம். இனி இதைக் கேள்விப்படும் தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பெண்களை “காப்பாற்ற” ‘பரோடா சமஸ்தானத்திற்கு ஓடுவார்களா? அல்லது இங்கேயே மூலையில் உட்கார்ந்து கொண்டு “பெண்ணின் பெருமையை” பேசிக் கொண்டு வயிறு வளர்ப்பார்களா? என்பது பொறுமையுடன் எதிர்பார்க்கப்பட வேண்டிய விஷயமாகும்.
குடி அரசு - கட்டுரை - 31.03.1929