சேலம் ஜில்லா போர்டு தலைமைப் பதவிக்கு திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதாக சேலத்திலுள்ள சில பார்ப்பனர்களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு திரியும் சில பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடி சுயமரியாதைக்கு பங்கமுண்டு பண்ணும் கூட்டத்திற்கு அனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டும் என்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனையோ அக்கிரமமான உத்திரவுகளைப் போடச் செய்தும் கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயனின் மந்திரி தன்மை, மானங்கெட்டு நாடு சிரிக்க ஏற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு எல்லப்ப செட்டியாருக்காவது ஒரு வித நஷ்டமும் ஏற்பட்டுவிடவில்லை.
நமது நாட்டு சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய பேச்சையாவது கேட்டு யோக்கியமடைந்ததாகவாவது முன்னுக்கு வந்ததாகவாவது, எந்த ஆதாரத்தைக் கொண்டாவது ருஜுப்பிக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்குக் கை ஆயுதமாக இருந்த பார்ப்பனரல்லாதார்களில் யாராவது ஒருவர் பார்ப்பனர்களால் சபிக்கப்படாமலும், தூஷிக்கப்படாமலும் தப்பித்துக் கொண்டவர்கள் ஒருவராவது இருக்கிறார்களா? இன்றைய தினம் பார்ப்பனர்களாலும் அவர்கள் பத்திரிகைகளாலும் வசை கேட்டுக் கொண்டு இருக்கும் தேசீய வீரர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்களின் கை ஆயுதங்களாக இருந்து கொண்டு “தேசபக்தர்கள்”, “தேசாபிமானிகள்,” “தலைவர்கள்,” பிரமரிஷி”, “ராஜரிஷி” என்கிற பெருமையை அடைந்து கொண்டு இருந்தவர்கள்தான். ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் வேலை முடிந்த உடனே திடீரென்று கீழே தூக்கிப் போட்டு மிதித்து விடுகிறார்கள்.
(குடி அரசு - கட்டுரை - 19.06.1927)