கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன். கற்பு என்கின்ற வார்த்தையை பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி - படிப்பு என்பது போல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் “கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை. அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது.
அதை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால் ‘மகளிர் நிறை’ என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண்களையே குறிக்கும் பதம் எப்படி சம்மந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்கு பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்தைகள் காணப்படுகின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழிவில்லாதது, உறுதி உடையது என்கின்ற பொருள் கிடைக்கின்றது.
அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு கிரமமான கருத்துப் பார்க்கும்போது இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறபடி அதாவது சேஸ்டிடி (chastity) என்கின்ற வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டி (Virginity) என்ற பொருள் என்பதும் அதை அந்த உணர்ச்சிப்படியும் பார்த்தால் இது ஆணுக்கென்றோ பெண்ணுக்கு என்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே, எவ்வித ஆண் பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டதல்ல என்பதும் அதுவும் ஆணோ பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு அல்ல என்கின்ற கருத்து கொள்ளக் கூடியதாகின்றது. ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கின்ற பதத்திற்கு ‘பதிவிரதை’ என்கின்ற பொருள் கொள்ளப்படுகின்றது.
தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷை களில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்கும் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
இந்த விஷயத்தில் உலகத்தில் இன்ன நாடோ, இன்ன மதமோ, இன்ன சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. உதாரணமாக ஐரோப்பிய தேசத்திலும் பெண்களுக்கு பலவித சுதந் திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும் புருஷன் பெண்சாதி என்பதற் காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வு கருத்துகள் நுழைக்கப்பட்டி ருப்பதுடன் சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகவே ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி நாட்டிலும் மகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக் கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக் கொண்டு வாழக் கூடாது என்ற கொள்கையும், நம்நாட்டில் ஒருதடவை புருஷன் பெண் சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்தப் பெண்ணுக்கு சாகும் வரைக்கும் வேறு எவ்வித சுதந்திரமும் இல்லை என்றும், புருஷன் பல பெண்களை கட்டிக் கொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருடன் தான் கொண்ட பெண் ணைத் தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருடனை சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பத்திற்கோ, காதலுக்கோ கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.
கற்புக்காக புருடனின் மிருகச் செயலை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மைக் காதலை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.
எனவே இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிறவியில் உண்மைக் கற்பை, இயற்கை கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும் ஒருபிறப்புக் கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமை யற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாததுடன் அடிமைக் கற்பைத்தான் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடுமையை விட வெறுக்கத்தக்க காரியம் உலகத்தில் மனித சமூகத்தில் வேறு ஒன்று இருப்பதாக நான் சொல்ல முடியாது.
(குடி அரசு - கட்டுரை - 08.01.1928)