சமீப காலத்திற்குள், அதாவது சுமார் 6 மாதத்திற்குள், நமது மாகாணத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு கனவான்கள் இந்தியாவின் பிரதிநிதி என்கிற முறையில் போயிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்த, கோவை ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள், எம்.எல்.ஏ. ஆவார். மற்றவர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த மைலாப்பூர் அய்யங்கார் ஸ்ரீமான் டி. ரங்காச்சாரியார் ஆவார். ஸ்ரீமான் செட்டியார் ஜனப் பிரதிநிதியாய் கவர்ன்மெண்ட்டாருடைய பணச் செலவில்லாமல் பொது அரசியல் விஷயமாய் சென்று வந்தவர். ஸ்ரீமான் ரங்காச்சாரியார் கவர்ன்மெண்ட் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் ஏதோ ஒரு ஊரின் திறப்பு விழாவிற்காக “இந்தியப் பிரதிநிதியும் வந்திருந்தார்” என்று கணக்கு காட்டுவதற்காக போகிறவர். இந்த லட்சணத்தில் தனக்கு ஒரு உத்தியோக காரியதரிசியாம். அதாவது தனது மகனையே காரியதரிசியாக்கிக் கொண்டார். சௌகரியத்திற்கு ஒரு ஆளாம். அதற்கு மற்றொரு மகனை நியமித்துக் கொண்டார். ஆகவே அப்பன் மக்கள் மூவரும் போகிறார்கள். திரும்பி வருவதற்குள் இந்த பிள்ளைகளுக்கு ஏதாவது மாதம் 300, 400 ரூபாய்களில் உத்தியோகங்களும் கிடைத்து விடலாம். ஸ்ரீமான் ரெங்காச்சாரியாருக்கும் கூடிய சீக்கிரத்தில் மாதம் 4000, 5000 கிடைக்கும். ஏதாவது கமிஷனில் மெம்பர் ஸ்தானமோ அல்லது நிர்வாக சபைகளில் மெம்பர் ஸ்தானங்களோ கிடைத்துவிடலாம்.
சர்க்கார் தயவை எதிர்பார்த்து சர்க்கார் பிரதிநிதியாய் சர்க்கார் செலவில் போன ஸ்ரீமான் ரங்காச்சாரிக்குப் பார்ப்பன பத்திரிகைகளும் பார்ப்பனர்களும் செய்த ஆரவாரமென்ன? விருந்து என்ன? வழியனுப்பு உபச்சாரமென்ன? என்பதையும், ஜனப் பிரதிநிதியாய் தன்னுடைய எலெக்ஷனையும் கவனியாமல் சர்க்கார் செலவில்லாமல் தனியே போனவருக்கு இப்பார்ப்பனர்கள் செய்த விஷயம் என்ன? என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமில்லையா என்பது விளங்காமல் போகாது.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927)