வெட்கப்படுகிறார்கள் (குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.04.1927)

Rate this item
(0 votes)

சென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார் அக்கட்சியில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று நன்றாய்த் தெரிகிறது. அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒரே ஒரு சூசனை காட்டுகிறோம். அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால் நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக் கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல் போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பனரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தையும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக.

(குடி அரசு -– துணைத் தலையங்கம் - 10.04.1927 )

ஒரு விசேஷம்

சென்னை சட்டசபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது “இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சியாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு”மென்று பேசிக் கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப் பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில் எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம் சுப்பராயன் உடனே ஜனாப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச் சிமிட்டி உட்காரச் சொன்னாராம். இந்த காட்சியைப் பார்த்து சட்டசபையிலுள்ள மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம். சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.!

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.04.1927)

 

 
Read 47 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.