மகாத்மாவின் தேக அசௌக்கியம் (குடி அரசு - கட்டுரை - 10.04.1927)

Rate this item
(0 votes)

மகாத்மா காந்தி அசௌக்கியமாக இருப்பதாகவும் அவருடைய தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் பாதிக்கப்படும் என்பதாகவும் பொதுவாய் தெரிய வருகிறது. ஆனாலும் அவருடைய சிஷ்ய கோடிகள், அதாவது அவரைக் கொண்டு வந்து ஆட்டி வைத்து யோக்கியதையும் பணமும் சம்பாதித்துக் கொள்ள நினைத்திருப்பவர்கள் அந்த விபரத்தைப் பற்றி ஜனங்கள் சரியாய் உணருவதற்கு இடமில்லாமல் குழப்பமடையும்படியாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் ஏமாற்றுத் தந்திகள் அடித்த வண்ணமாயிருக்கின்றார்கள். காயலாவினுடைய உண்மையையும் சரியாய்த் தெரியப்படுத்தாமல் ஏதேதோ தந்திரமாயும் மூடு மந்திரமாயும் தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீமான் ஸி.ராஜகோபாலாச்சாரி தந்தியை விட்டு விட்டு, ஸ்ரீமான் தேசாய், நியானியிலிருந்து கொடுத்திருக்கும் தந்தியை பார்க்கும் பஷத்தில் மகாத்மாவுக்கு மூளைக்கொதிப்பும், ரத்தோட்டக் குறைவும், கைக்கால் சரியான சுவாதீனமற்ற தன்மையும் காட்டுகிறதாகவும், தக்க ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் அபிப்பிராயம் கொடுத்திருப்பதாகவும் குறைந்தது இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு அதாவது கோடைகால முழுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணத்தை நிறுத்த வேண்டுமென்று சொன்னதாகவும் தெரிய வருகிறது. கடைசியாய் பார்க்கும் போது தற்காலம் மகாத்மா சுற்றுப்பிரயாணம் நிறுத்தப்பட்டதாகவே முடிந்து விட்டது. எனினும், இனியும் சுமார் இரண்டு மூன்று மாதம் பொருத்தானாலும் மகாத்மா நமது நாட்டுக்கு வரும்போது நாம் நமது கடமையைச் செய்து வரவேற்கத் தயாராயிருக்க வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 10.04.1927)

 
Read 44 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.