இத்திருமணத்தில் மணமகனாக இருக்கும் கலியமூர்த்தி, சுயமரியாதை இயக்கத்திற்குச் செல்லப்பிள்ளை ஆவார். இயக்கக் காரியங்களுக்கு நாம் சொல்லாமலே நம் காரியப் பணிகளை முன்னிலையில் நின்று காரியமாற்றக் கூறியவர். மணமகளின் தந்தை இயக்கத்திற்கு மிகத் தொண்டாற்றியவர். தொண்டாற்றுபவராவார்.
மணமகன் அரசாங்கப் பணியில் உள்ளவர் இனி அதிகமாக இயக்கக் காரியங்களில் ஈடுபடாமல் ஆதரவு தருவதோடு நிறுத்திக் கொள்வது நலமென்ற கருதுகின்றேன். ஏன் இப்படிச் சொல்கிறேனென்றால், எங்காவது வேறு உத்தியோகத்தில் பார்ப்பான் இருப்பான். அவன் இவர் இயக்கக் காரியத்தில் ஈடுபடுவது தெரிந்தால் எப்படியாவது எந்தக் குறையையாவது, குற்றத்தையாவது சொல்லி வேலையிலிருந்து நீக்க முயற்சிப்பான். அதற்கு இடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நம் நாட்டின் திருமணமென்றால் பெண்ணாயிருந்தால் வேலைக்காரி, ஆணையிருந்தால் எஜமானன். இத்தத்துவப்படிதான உலகமெங்கும் திருமணம் நடைபெறுகிறது.
சாதாரணமாக நம் நாட்டில் கல்யாணமில்லாமல் ஆண்கள் சமாளித்துக் கொள்ளலாம். பெண்களால் முடியாது. ஏன் பெண்களால் முடியாது என்றால், என்ன இவ்வளவு வயதாச்சு? இன்னும் கல்யாணம் பண்ணமாலிருக்கிறீர்கள் என்று கண்டவரெல்லாம் கேட்பார்கள். அதற்காகவாவது கல்யாணம் செய்ய வேண்டியவர்களாகிறார்கள். பெண்கள் அடிமைகளாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான், நம் கடவுள் - மதம் - சாஸ்திரங்கள் எல்லாமாகும். அடுத்து மக்களைப் பல சடங்குகளைச் செய்ய செய்து அதன் மூலம் மடையர்களாக்குவது. மற்றும் ஜோசியம் - ஜாதகம் - பொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பது எல்லாமே மனிதனை மடையனாக்கப் பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதே ஆகும். தமிழனுக்கு இந்த முறையில் எதுவுமே சம்பந்தம் கிடையாது. இதுபோன்று முறை இருந்தது என்பதற்குத் தமிழில் எந்த இலக்கியத்திலுமே சான்று இல்லை.
மணமக்கள் நண்பர்களைப் போலப் பழக வேண்டும். வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. பட்டினிக் கிடந்தாலும், கடன்காரனாகக் கூடாது. ஆடம்பரமாகத் தங்களைத் காட்டிக் கொள்ளாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். சினிமா, கோயில் இவற்றிற்குச் செல்லக் கூடாது. நெய்வேலி - பம்பாய் போன்ற தொழில் நகரங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளைப் பார்க்க வேண்டும்.
பிள்ளை பெறாமலே பார்த்ததுக் கொள்ள வேண்டும். மீறினால் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். குறவனுக்கு எப்படித் திருடுவதில் அவமானமில்லையோ, அதுபோல பிள்ளைக் குட்டிக்காரன் இலஞ்சம் வாங்குவதிலும் - பல்லைக் காட்டிக் கெஞ்சுவதிலும் அவமானப்படுவது கிடையாது. நீ பணக்காரனாக வேண்டும் என்று சொல்வதற்குப் பதில், நீ நாசமாகப் போ என்று சொல்வதற்குப் பதில் பத்து பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள் என்று சொன்னாலே போதும். அப்பிள்ளைகளே அவனை நாசமாக்கி விடும்.
14.07.1968 அன்று மாயவரத்தில் நடைபெற்ற கலியமூர்த்தி - வெற்றிச் செல்வி திருணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.
விடுதலை - 13.08.1968