தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகள் ஊரின் நடுவே அமைத்திட வேண்டும். விடுதலை- 3.7.1972

Rate this item
(0 votes)

டாக்டர் அம்பேத்கர் பிறந்ததின விழாவில், டாக்டர் அம்பேத்கர் அவர்களை நாம் பாராட்டுவது மட்டும் போதாது; அவரின் தொண்டினைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கையினைப் பின்பற்ற வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் பேரறிஞர். செயற்கரிய செய்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு யாரும் செய்ய முடியாத தொண்டு ஆகும்.

 

தாழ்த்தப்பட்ட மக்களுடைய எண்ணிக்கை எவ்வளவோ அத்துணை விகிதத்தில் கல்வி, உத்தியோகப் பதவிகளைப் பெற்றுத் தந்தவர் ஆவார்.

உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்லுவதில் அவருக்கு ஈடு யாரும் இல்லை. சிறந்த படிப்பாளி. தம் மனதில் பட்ட கருத்துகளைத் துணிந்து கூறி வந்தவர். எதிர்ப்புக்காகத் தம் கொள்கையில் இருந்து பின் வாங்காதவர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல சலுகைகள் கிடைத்தது அவரின் தொண்டு காரணமாக என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 

இங்கு அரிஜன நல மாணவர் முன்னேற்றக் கழகம் என்று துவக்கியுள்ளார்கள்.

 

அதில் எனக்கு ஓர் அதிருப்தி என்னவென்றால், அரிஜனம் என்ற பெயரை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது; காந்தி வைத்த பெயர் இது. அரிஜனம் என்றால் கடவுள் சாதி; விஷ்ணுவின் ஜனங்கள் என்று பெயர் வைத்தார்.

அதற்கு முன் உங்களுக்குச் சங்கர சாதி என்று பெயர் இருந்தது. அது சிவனுக்குச் சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் காந்தி, விஷ்ணுவுக்குச் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அரிஜனங்கள் என்று பெயர் வைத்தார்.

நாங்கள் தான் கண்டித்து எழுதினோம். நீங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். உங்களைத் தாழ்த்தியது இந்த விஷ்ணு, சிவன் முதலிய கடவுள்கள் தான். எனவே, இந்தப் பெயரை ஏற்கக்கூடாது என்று எழுதினேன்.

இதனை ஒரு சமுதாய முன்னேற்ற ஸ்தாபனமாக வைத்துப் பாடுபட வேண்டும். இன்றைக்குச் சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபடுகின்றேன் என்று பலர் பல சங்கங்கள் வைத்து உள்ளார்கள். அதில் ஈடுபட்டு உள்ளவர்கள் தாங்கள் முன்னேறப் பார்க்கின்றார்களே ஒழிய, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

 

காரணம், அரசியலில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றதனால் ஓட்டுக்காக, பதவிக்காகக் காரியம் ஆற்றுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எனவே, நீங்கள் அரிஜன மாணவர் நல முன்னேற்றக் கழகம் என்பதை விட்டு விட்டுத் தாழ்த்தப்பட்டோர் மாணவர் நலமுன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பேர் கூட நான் முயற்சி பண்ணி வைத்தது.

அதற்கு முன்பு பின் தங்கிய வகுப்பார், தாழ்ந்த வகுப்பார் என்றுதான் இருந்தது. நான் தான் கூறினேன், எழுதினேன். எப்படிப் பின் தங்கிய வகுப்பார் என்பவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படுகின்றதோ, அதுபோலத் தாழ்ந்த வகுப்பார்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கவேண்டும் என்று. நீங்களாகத் தாழ்ந்தவர்கள் அல்லவே. மேல் சாதிக்காரர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட்டவர்கள்தானே, ஆகவே தாழ்த்தப்பட்டோர் என்றே நீங்கள் போடவேண்டுமே ஒழிய அரிசனங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

உங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக - இழிமக்களாக ஆக்கியது கடவுள் காரணமாகத்தானே! நாங்கள் கடவுளின் ஜனங்கள் என்பதை ஒத்துக் கொண்டு நான் ஏன் இழிமகன், தாழ்த்தப்பட்ட மகன் என்று கேட்டால் என்ன நியாயம்?

இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள்.

முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.

அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களாகிய நீங்கள் குடிசை வீட்டில் குடி இருந்தாலும் ஊருக்கு நடுவில் இருப்பதையே பெரிதாகக் கருத வேண்டுமே ஒழிய, ஊருக்கு வெளியே கட்டிக் கொடுக்கக் கூடிய வீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

காரணம், இந்த முறை மேலும் உங்களை ஒதுக்கி வைக்கத்தானே உதவுகின்றது.

தோழர்களே, இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தமிழகத்தில் கூட தீண்டாமை, தொல்லைகள் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது. தொல்லைகள், கொடுமைகள் நடந்து கொண்டு தான் வருகின்றன.

பார்ப்பான் மட்டும் அல்லவே; பார்ப்பனர் அல்லாத மக்களும் கூட முட்டாள்தனமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில இடங்களில் கொடுமை இழைக்கின்றார்கள்.

முட்டாள்தனமாக இப்படிச் செய்கின்றார்கள். பார்ப்பான் அவனைச் சூத்திரன் என்றால் நான் எப்படி சூத்திரன் என்று கேட்கின்றவன், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறமுடியும்? தாழ்த்தப்பட்ட மக்கள் படித்துவிட்டு வெள்ளையும், சள்ளையுமாக வெளியே போவதைப் பார்த்து ஆத்திரப்படுவது முட்டாள்தனம் ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருக்கக்கூடாது. உங்களை இந்தத் தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவுளும், மதமும் தான் என்பதை உணர வேண்டும்.

நீங்கள் உங்கள் அறிவையே பிரதானமாக நம்ப வேண்டும். உங்களை ஈடேற்றுவது உங்கள் அறிவே தவிர கடவுளும், மதமும் அல்ல.

உங்கள் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. இவற்றை முழுமையும் பயன்படுத்திக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். இந்த அரசாங்கமானபடியால் இதன் ஆட்சிக் காலத்திலேயே நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் உண்டு. மற்றவர் ஆட்சியில் இந்த அளவு உங்களுக்குச் சலுகை கிடைக்காது.

மேல்சாதி என்று கருதிக் கொண்டு இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் கூறுவேன். நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மனிதர்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று கருதவேண்டும். அவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும். அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சாதி இழிவு மட்டும் அல்ல, உங்களுக்கும் இருக்கின்ற சாதி இழிவும் ஒழியும். சாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படவும் வழி பிறக்கும்.

 

23.6.1972 அன்று நொய்யலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

விடுதலை- 3.7.1972

Read 46 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.