நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? விடுதலை தலையங்கம் - 6.7.1971.

Rate this item
(0 votes)

ஹிந்து மதம் என்பதும் ஹிந்து மத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவை எல்லாம் தமிழனுக்கோ தமிழ் நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்ட வையும் அல்ல. அவற்றுள் எவையும் எதுவும் தமிழ் மொழியில்- தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையுமல்ல.

இவை யாவும் அந்நிய மொழியாகிய வடமொழியிலும், தமிழன்- தமிழ்நாட் டினன் அல்லாதவனான அந்நியன் மொழியாகிய ஆரிய மொழியிலும், வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத் தப்பட்டவை- செய்யப்பட்டவையுமே ஆகும்.

 

அதுபோலவே தான் ஜாதி என்பதும், ஜாதி முறை என்பதும், ஜாதி அமைப்பும் என்பதும் தமிழ் நாட்டிற்கோ, தமிழர் சமுதாயத்திற்கோ ஏற்றதுமல்ல. தமிழர் பழக்கவழக்கங்களுக்குத் தமிழர் வாழ் விற்கு ஏற்றவையுமல்ல; ஏனென்றால் இவை யாவும் யாவற்றுக்கும் ஏற்பட்ட நடப்பு எதுவும் தமிழ் மொழியில் அல்ல என்பதோடு, தமிழர் சமுதாயத்தில் இருந்தவையும் அல்ல; தமிழரால் உண்டாக்கப்பட்டவையும் அல்ல.

ஜாதியானது, எப்படி வெள்ளைக் காரன் நம் நாட்டுக்கு வந்து துரை ஆனானோ, முஸ்லிம் எப்படி நம் நாட்டுக்கு வந்து சாயபு ஆனானோ, அதுபோல் ஆரியன் நம் நாட்டுக்கு வந்து அய்யர் ஆனான்; பிராமணன் ஆனான்; பிராமணாள் ஆனான்.

 

பார்ப்பானுக்குக் குறிப்புப் பெயர் வேதியன் என்பதாகும். வேதியன் என்றால் வேதத்திற்கு உடையவன் என்பதுதான் பொருள். அந்த வேதம் எந்தவிதத்திலும் தமிழர்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல; தமிழர்களுக்கு உரியதுமல்ல; தமிழுமல்ல; தமிழரால் ஆக்கப்பட்டது மல்ல.

எப்படி ஆரியன் (பார்ப்பான்) கடவுள் தமிழன் தொட்டால் தீட்டு ஆகிவிடும், கெட்டுப் போகும் என்று சொல்லப்படு கிறதோ, அதுபோலவே வேதமும் தமிழன் தொட்டாலும், அதைப் படித் தாலும், காதில் கேட்டாலும் அது கெட்டுவிடும். பார்ப்பான் அல்லாதவன் பார்த்துக் கேட்டுவிட்டால் அவன் குருடனாக ஆக வேண்டும். செவிடனாக ஆக வேண்டும் என்பது பார்ப்பனர் நிபந்தனை ஆகும்.

 

இதையே தான் சற்றேறக்குறைய பார்ப்பன ஆதாரங்களாகிய சாஸ்திர, தரும சாஸ்திர, புராணங்களுக்குமே பார்ப்பனர் நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இவை தாம் இந்து மத தருமம் ஆகவும், இந்து மதக்கொள்கை ஆகவும் இன்றும் தமிழ் நாட்டில் நடப்பில் இருந்து வருவன ஆகும்; இவைதான் இந்து மத, தருமமும் ஆகும்.

இவற்றிற்குக் கட்டுபட்டவன் தான், இந்த நிபந்தனையை ஏற்றவன் தான் ஹிந்து ஆவான். தமிழ்நாட்டாரே! தமிழ்ச் சமுதாயத்தாரே! தமிழர்களே! இப்பொழுது சிந்தியுங்கள்.

நாம் ஹிந்துக்களா? ஹிந்து மதத்தவர்களா? ஹிந்து மதத்திற்கு உரிய கடவுள், மத- வேத சாஸ்திர, புராண- இதிகாச, தருமங்கள், ஜாதி முறைகள், அமைப்புகள். இவை சம்பந்தமான கோயில்- குளம், அவற்றின் கதைகள், சிறப்புகள் நமக்குச் சம்பந்தப்பட்டவையா என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஹிந்து மதம் நம் மதமாயிருந்தால் அதில் நாம் நம்மை ஈனஜாதி, இழிபிறவி, நாலாம் ஜாதி, சூத்திரன், பார்ப்பானின் அடிமை, பார்ப்பானின் தாசி மக்கள், நம் பெண்கள் பார்ப்பானுக்குத் தாசிகளாக இருக்கத் தக்கவர்கள் என்று எழுதிவைத்துக் கொண்டிருக்க முடியுமா?

 

நிற்க, ஹிந்து என்றோ, இந்து மதம் என்றோ, இந்தியா என்றோ ஆரியர்களின் எந்த ஆதாரத்திலும் ஓர் இடத்திலாவது, ஒரு சொல்லாவது இல்லவே இல்லை. மத ஆதாரங்களில் காணப்படுவன எல்லாம் பரதகண்டம், பாரத தேசம், பாரதம் என்றும், சமுதாயத்திற்கு ஆரியர் என்றும், தேவர்கள் என்றும், ஆரியர்களுடைய எதிரிகளைக் குறிக்க அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும் தான் குறிப்பிடப்பட்டு இருக்கின் றனவே ஒழிய, இந்தியா, ஹிந்து என்ற சொற்கள் எந்தச் சாஸ்திர- புராண இதி காசங்களிலும், மத சம்பந்தமான எந்த ஆதாரங்களிலும் காண முடிவதில்லை.

தவிரவும் இந்தியா என்ற சொல், இந்து என்ற சொல், சிந்து என்னும் ஒரு நதியின் காரணமாக, அதன் கரையில் வாழ்ந்தவர் களுக்கு ஏற்பட்ட பெயர் என்றும், வட மொழியில் சி என்பதும் ஹி என்பதும் ஒரே சப்தமாக மாற இடம் உண்டு என்கிற காரணத்தால் சிந்து ஹிந்து என்றாயிற்று என்றும் சொல்லுகிறார்கள்.

பிறகு ஹிந்துகளைக் கொண்ட நாடு இந்தியா என்று ஆயிற்று என்றும், இந்தப் பெயரும் அந்நியரால் கொடுக்கப்பட்டது என்றும், இந்தியாவில் வசித்ததால் ஹிந்து என்று அழைக்க நேர்ந்தது என்றும், இதுவும் இஸ்லாம் ஆனவர்களாலும், வெள்ளையர் களாலும் கொடுக்கப்பட்ட பெயரே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

அதுவும் எந்த விதத்திலும் தமிழர் களுக்குப் பொருந்தாது என்பதோடு, ஆரியர்களுக்குத் தான் பொருந்தும் என்பதே ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஹிந்து என்ற சொல்லுக்கு ஆரியர்கள் என்ற பொருள் மேனாட்டு அகராதிகளில் காணப்படுகின்றது. தவிரவும் ஹிந்துக்கள் என்ற சொல்லுக்கு கிறிஸ்தவர், முகமதியர் அல்லாத மக்கள் என்று ஆங்கில அகராதிகள் (டிக்ஷனரிகள்) கூறுகின்றன.

The Concise Oxford Dictionary of Current English (1968-ஆம் ஆண்டு பதிப்பு) பக்கம் 516-இல் Hindu என்பதற்கு “Aryan of N India who (also anyone who) professes Hinduism” என்று போட்டிருப்பதுடன், இதற்கு சமஸ்கிருத ரூட் என்று குறிப்பிட்டு ‘Sindu River’ குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிந்து என்ற சொல்லையும், இந்துக்கள் என்ற குழுவினரையும் மேனாட்டவர்களும் முஸ்லிம்களும் மிக மிக இழிவாகவே கருதுகிறார்கள். அதாவது அஞ்ஞானிகள் என்றும் அறிவற்ற முட்டாள்கள் என்றும், கருதுகிறார்கள். அவர்களது ஆதாரங்களிலும் இந்தப் படியே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆகவே அன்பர்களே! நாம் ஹிந்துக்கள் அல்ல. ஹிந்து மத வேத சாஸ்திர தருமங்கள் நமக்குச் சம்பந்தப் பட்டவை அல்ல. ஹிந்து மதக் கடவுள்கள், அக்கடவுள்களின் நடப்புகள், அவற்றின் கதைகளான புராண- இதி காசக் கூற்றுக்கள் நமக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவை அல்ல என்பதை சிந்தித்துத் தெளியுங்கள்.

 

விடுதலை  தலையங்கம் - 6.7.1971.

Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.