Tuesday, 29 September 2020 01:14

தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம்

Rate this item
(5 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 90

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்பாளர் - கா.கருமலையப்பன் 

  

தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட

எரிப்புப் போராட்டம் 

அபாயச் சங்கு

     சாதாரணமாக இன்று நம் நாட்டில் நடந்துவரும் பார்ப்பனப் (ஆரிய ஆதிக்க) பாதுகாப்புத் தீவிர முயற்சியானது நாமறிய சுமார் 60, 70 ஆண்டுகளாக நடந்திருக்காத அளவில் வெகு வேகமாகவும் வெகு தீவிரமாகவும், மிக்கப் பரவலாகவும் நடந்து வருகிறது.  இம் முயற்சிக்குத் தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக ஒற்றுமையாக ஒரே மூச்சாக முனைந்து நின்று பாடுபடுகிறார்கள். 

     அரசியல் வேடம் போட்டுக்கொண்டு இராஜாஜி தர்மங்களைக் காக்கப் போகிறேன்; தனி மனிதனின் உரிமையைக் காப்பாற்றப் போகிறேன். இத்துறைகளில் மக்களுக்கு முழுச்சுதந்திரமும் தேடித்தருவதே எனது (சுதந்தரா) கட்சியின் நோக்கம் என்று வெளிப் படையாகவே சொல்லிக்கொண்டு ஆகாவழிகளையும், வாழாவெட்டி களையும், வாழ்வில் வழுக்கி விழுந்தவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு பெரும்போராட்டம் நடத்தத் துணிந்துவிட்டார்.  அவருக்குக் காந்தியாரால் ஏற்பட்ட செல்வாக்கு இதற்குப் பெரும் ஆதரவளிக்கிறது என்பதுடன் பார்ப்பனர், அவர்களது பத்திரிகைகள் பெரும் ஆதரவு தருகின்றன. 

     அடுத்தாற்போல், வைதிக முறையில் அடியோடு எல்லாப் பார்ப்பனர்களும் சேர்ந்து அரசாங்க அலுவகங்களில் பெரிய பதவிகளில் மாதம் ரூ.3,000, பென்சன் வாங்கிக்கொண்டு இருக்கும் பார்ப்பனர்களின் தலைமையில் ஊர்தோறும் வைதிக ஸ்தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டும் மாநாடு நடத்திக் கொண்டும் பெரும் பிரச்சாரங்கள் செய்தும் வருகிறார்கள். 

     இதைத்தவிர, பார்ப்பன மடாதிபதிகள், சங்கராச்சாரி, மத்துவாச்சாரி, வையணவாச்சாரி, ஸ்மார்த்தாச்சாரி முதலான எல்லா மடாதிபதிப் பார்ப்பனர்களும் தினமும் நாள்தோறும் ஊர் ஊராய் சுற்றித்திரிந்து, ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகளைக் கண்டு ஆள்சேர்க்கச் செய்தும் பணம் சேர்த்துக் கொடுக்கச் செய்தும் இமாலாயப் பிரச்சாரம் செய்து, ஆரிய வைதிகக் கருத்துக்களைப் புகுத்திப் பார்ப்பனருக்குப் பொருளாதார உதவி, கல்வி உதவி ஆகியவைகளை அளித்தும் வருகிறார்கள்.

     இவையெல்லாம் தவிர வெள்ளையன் போனபின்பு வியாபாரத் துறையிலும், தொழில்துறையிலும், பஸ் நடத்தும் துறையிலும் பிரவே சித்துக் கோடீஸ்வரர்களான பார்ப்பனப் பிரபுக்கள், ஆச்சாரியார் முயற்சி முதல் மற்ற எல்லாப் பார்ப்பனர் முயற்சிகளுக்கும் ஏராளமான பொருள் உதவி, வேலை உதவி மற்றும் ஆள் மாகாண உதவி முதவியவைகள் செய்து, ஆதரித்து, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, பிரச்சார காரியங்கள் நல்லபடி நடக்கச்செய்து வருகிறார்கள். 

     மற்றும் மத்திய, மாகாண ஆகிய இரு சர்க்கார் அலுவலகங்களிலும் குறிப்பாகத் தபால், இரயில், சுங்கம், வருமானவரி, அக்கவுண்ட்ஸ், அய்க் கோர்ட் இலாக்கா அலுவகங்களிலும் பொறுப்பான பெரிய பதவிகளிலும் பார்ப்பனர்கள் – அதிலும் வைதிக வெறிப் பார்ப்பனர்களே குவிந்து கிடப் பதால், அவர்களும் கட்டுப்பாடாகத் தங்கள் இன உயர்வுக்குப் பாடுபடுவ திலும் ஒழித்துக்கட்டுவதற்கு ஏற்ற கொடுமைகளைத் துணிந்து செய்வதுமான காரியங்களிலும் முனைந்து நிற்கின்றார்கள்.

     மற்றும் பொதுவாழ்வில், அரசியலில் பிழைப்பை ஏற்படுத்திக் கொண்டு, யார் எந்தக்கட்சி தோன்றினாலும் அவர்களுக்கு விளம்பரமும் தேர்தலில் வெற்றியும் கொடுக்கக்கூடிய அளவுக்குப் பார்ப்பனர்கள் ஆதரவு தேவை இருக்கின்றபடியால், எல்லாக் கட்சிக்காரர்களும் காங்கிரசுக்காரர்களில் பெரும்பாலோர் உள்பட, பார்ப்பனர்கள் காலடியில் கிடந்து உழல வேண்டியவர்களாக இருப்பதால் சர்வகட்சிகளும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவே இருந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாகப் பார்ப்பனப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

     பத்திரிகைகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில் இருப்பதாலும் திராவிடர்கள் நடத்தும் பத்திரிகைகளும் பார்ப்பனர்களுக்குப் பயந்து நடத்தப்படவேண்டி இருப்பதாலும் மேற்கண்ட பார்ப்பன ஆதிக்க வைதீக முயற்சிக் காரியங்கள் எதற்கும் எதிர்ப்பு நடத்த எந்தத் திராவிடனுக்கும் எந்த எதிர்க்கட்சிக்கும் வசதியோ வாய்ப்போ இல்லாமல் போய் விடுவதோடு, வாழ வேண்டியவன், வளர வேண்டியவன் ஆன மந்திரிகள் உட்பட எந்தத் திராவிடனும் வைதிகப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டியவனாகவே ஆகிவிடுகிறான்.

     திராவிட நாட்டில் திராவிடர்களுக்குச் செல்வாக்கு இருக்கும் படியான தன்மையில் திருந்திய திராவிட அரசர்களைக்கொண்ட அரசுகள் பல அண்மையில் இருந்தன. வெள்ளையன் போன உடனே அந்தப் பிராந்தியங்கள் அந்தந்த அரசுடனேயே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.  அந்தந்தப் பிராந்திய அரசுக்குப் பூரண சுயஆட்சி உரிமைகள் வழங்கப் பட்டிருக்கவேண்டும் என்று சுதந்திரம் – சுயஆட்சி என்னும் பேரால் அதிலும் ஒரு பெரும் – மோசடியாக ஜனநாயகம் என்னும் பேரால் – ஜனங்களோடு சம்பந்தமே இல்லாத ஒரு சாதிப்பிரிவுப் பார்ப்பனரே ஜனநாயத்திற்கு மநுதர்மம்போல் சட்டம் செய்துகொண்டு, அச்சட்டப் படியான ஜனநாயக முறையில் சாதாரணத் தன்மையில் பார்ப்பானே  – ஆரியனே ஆட்சித் தலைவனாக ஆகும்படியான நிலையில் ஆட்சி நடக்க வகை செய்துகொண்டதோடு, அக்கால முடி அரசர்கள் எல்லாம் பார்ப்பன அரசுக்குச் சிப்பந்திகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.  இதனால் திராவிடர் கள் பார்ப்பனர்களுக்கு அடிமைக் குடியாளாகத்தான் என்றும் இருக்க வேண்டியதைத்தவிர ஆட்சியாளராக இருக்க முடியாத நிலை ஏற்படுத் தப்பட்டுவிட்டது.

     மற்றபடி, திராவிடர்களே பெருநிலக்கிழார்களாக இருந்த ஜமீன் மிட்டாதாரர்கள் எல்லோரும் ஒழிக்கப்பட்டு, அவர்கள் ஒரு சாதராணக் குடியானவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

     இவர்கள் இரு கூட்டத்தினருக்கும் இருந்த பரம்பரைப் பெருமை பாத்தியதை, அதாவது தனிப்பட்டவர்களுக்கு இருந்த உரிமை அடி யோடு ஒருநாள் அய்ந்து பார்ப்பனர் கூடி சட்டம் செய்து ஒரு வரி உத்தரவினால் பறிக்கப்பட்டுவிட்டது. 

     ஆனால், பார்ப்பனர்களையே பெரிதும் கொண்ட மடாதிபதிகள், அவர்களது உரிமைகள், செல்வங்கள், பெருமைகள் முதலியவை ஒரு சிறிதும் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை. அரசர்கள்  ஒழிக்கப்பட்ட தன் பயனாகத்தான், உஞ்சவிருத்திப் பார்ப்பனர்கள் ஒரே அடியாகச் சக்கரவர்த்தி ஏகபோக சர்வாதிகார ஆட்சிக்குத் திடீரென்று எட்டிக்குதித்துச் சர்வ பவுமன் என்று சொல்லத்தக்க ஏக சக்ராதிபதிகளாக ஆகிவிட்டார்கள்.  இன்றைய ஆட்சிக்கு ஜனநாயகம் என்று பெயர் சொல்லப்பட்டாலும், வேசிக்குத் தேவதாசி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதுபோல், என்றும் சர்வாதிகாரியாக ஒரு பார்ப்பானே இருந்துவரும்படியான ஆட்சித் தன்மைக்கு ஜனநாயகம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது .

     விளக்கிச் சொல்லவேண்டுமானால், இன்றைய ஜனநாயகத்தில் ஒரு பார்ப்பான்தான் பிரதம (மந்திரி) ஆட்சியாளனாகவும் ஒரு பார்ப்பான்தான் பிரசிடெண்டாக – ஆட்சியாளனாக வரமுடியுமே அல்லாமல், இந்த இந்தியக் கூட்டாட்சி என்பது உள்ளவரையில் ஒரு தமிழன் சுதந்திர ஆட்சிக்கு வரும்வரை தமிழன், தமிழ்நாடு ஒருநாளும் சூத்திரத்தன்மை யிலிருந்து, அடிமைக் குடியாய் இருப்பதிலிருந்து கடுகளவும் மாற்ற மடையமுடியாது.

     ஆகவே, இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழ்நாடும், தமிழனும் தப்பிப் பிழைத்து விடுதலை பெறவேண்டுமானால் இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி, தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்கிக் கொண்டாலன்றி, வேறு எக்காரணத்தாலும் எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ்மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.  தியாகம் என்பது சிறைத்தண்டனை அனுபவிப்பதுதான் என்று பலர் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு என்ற பொருளைக் கொண்டதாகும்.

     தன்னலமறுப்பு என்பது தனது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும். 

     இப்படிப்பட்ட தன்னலமறுப்பு கொண்ட ஓர் ஆயிரம் வீரர்கள் முன் வந்தால்தான் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடாக ஆகமுடியும்.

     இளைஞர்கள் இதை நல்லபடி சிந்தித்து முடிவுசெய்துகொண்டு செயலில் ஈடுபட வேண்டிக்கொள்கிறேன்.  சிந்திக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான் இந்த அபாயச்சங்கை ஊதுகிறேன்.

- விடுதலை; 13.05.1960.

 

தமிழ்நாடு

பெயர் மாற்றுத்துக்கு வழி

     சுமார் 3 கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிற்கு  அதிகாரப் பூர்வமாகத் தமிழ்நாடு என்ற பெயரில்லை.

     இராஜ்ய சீரமைப்புக் கமிசன் (States Re-organisation Commission)) அறிக்கை வெளிவந்தவுடன் நான் பதறிப்போய் பெயரிடுவது பற்றி 12.10.1955 இல் விடுதலையில் அறிக்கை வெளியிட்டேன்.  (இது பின்னால் வெளியிடப்படும்.)

     மக்களிடையே இக்கருத்துக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டும், ஆட்சியாளர்கள் இதை நிறைவேற்றத் தவறியதையும் இந்த நாட்டு எதிர்க்கட்சிகள் என்பவைகள், அதாவது தேர்தல் ஜனநாயகப் படுத்திக் கொண்டு, இன்றும் ஓட்டுப் பிழைப்புக்குப் பயன்படுத்தத் தங்களுக்குக் கிடைத்த நல்ல கருவி-சாதனம் என்பதாகக் கருதிக்கொண்டு பிரச்சாரம் புரிந்து வருகின்றனர். தமிழ்நாடு என்று பெயர் வரவேண்டும் என்ற ஆசையைவிட, அப்படி மாறிவிடக்கூடாது; மாறிவிட்டால் அந்த ஆயுதமும் பிடுங்கப்பட்டுவிடும் என்ற பயத்தால் அவதிப்படுகின்றனர்.  அந்த எண்ணமே அவர்களுக்கு அதிகம்.  மனதில் நினைப்பதை அப்படியே காட்டுவதற்கு, உடல் உஷ்ணத்தைக் காட்ட தெர்மா மீட்டர் கொண்டு அறிவது போல், கருவி ஒன்று இருக்குமானால், அதைவைத்து நான் கூறிவிடும் இந்த உண்மையை அறியலாம்.

     அதிலும் இங்குள்ள காமராசர் அரசாங்க எதிர்ப்புக் கட்சிகளைப் பொறுத்து இது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

   காமராசர் அரசாங்கம் இதை ஏன் செய்யவில்லை என்று கேட்பதைவிடக் காமராசரோ அல்லது அவரது சக மந்திரிகளோ தாங்களே பார்த்து உடனே உத்தரவு போட்டு மாற்றும் சக்தி சட்டப்படி, அதாவது அரசியல மைப்புப்படி உண்டா?  என்று கேட்பதுதான் நாணயமான காரியமாகும்.  ஆனால், அரசியல்தான் அயோக்கியர்களுடைய கடைசிப் புகலிடம் ஆயிற்றே! அதிலும் அந்த அரசியல்வாதிகளிடம் நேர்மை நாணயத்தை எதிர்பார்ப்பது நமது தவறல்லவா?

     இதோ இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது: ஷரத்து ((Article . 3) பார்லி மெண்டு சட்டத்தினால்,

            (அ) எந்த இராஜ்யத்திலிருந்தாவது ஒரு பிரதேசத்தைப் பிரித்தேனும் அல்லது இரண்டோ அதற்கு மேற்பட்ட இராஜ்யங்களையோ இணைத்தேனும் அல்லது எப்பிரதேசத்தையாவது ஓர் இராஜ்யத்தின் பாகத்தோடு இணைத்தேனும் புதிய இராஜ்யம் ஒன்றை அமைக்கலாம்.

  (அ) எந்த இராஜ்யத்தின் பரப்பையும் பெருக்கலாம்;

  (ஆ) எந்த இராஜ்யத்தின் பரப்பையும் குறைக்கலாம்;

  (இ) எந்த இராஜ்யத்தின் எல்லைகளையும் மாற்றலாம்; 

  (உ) எந்த இராஜ்யத்தின்  பெயரையும் மாற்றலாம்;

     எனினும், இவற்றிற்கான எந்த மசோதாவும் இராஷ்டிரபதியின் சிபாரிசின் பேரில் அன்றியும் மசோதாவில் அடங்கிய பிரேரணை முதலாவது அ பாகம் அல்லது ஆ பாகத்தில் குறிப்பிட்ட எந்த இராஜ்யம் அல்லது இராஜ்யங்களின் பெயர் அல்லது பெயர்களையாவது பொறுத்திருக்குமாயின் அம்மசோதவைக் கொண்டு வருவதற்கான பிரேரணையைப் பற்றியும், அதன் ஷரத்துக்களைப் பற்றியும் அந்த இராஜ்யம் அல்லது இராஜ்யங்களின் ஒவ்வொன்றின் சட்டமன்றத்தினுடைய கருத்துக்களை இராஷ்டிரபதி கேட்டறிந்துகொண்டால் அன்றியும் பார்லிமெண்ட் சபை எதிலும் கொண்டுவரப்படலாகாது.

     எனவே, பெயர்மாற்ற அதிகாரமும், சக்தியும் டெல்லி ஆட்சிக்கே உண்டு; அதிலும் இந்நாட்டு அரசாங்க சட்டசபைகள் கருத்துக் தெரிவித்தாலும் இராஷ்டிரபதியோ அல்லது பார்லிமெண்டு சபைகளோ அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற நியதி அரசியலமைப்பில் இல்லையே!

     ஆகவே, இதற்காகத் தமிழ்நாட்டு அரசாங்கத்தோடு முட்டிக்கொள்ளுவதைவிட இந்த அநீதிக்குக் காரணமான ஆதிபத்திய டெல்லி ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்பதுதானே அறிவுடைமை!

     எனவே, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்ற பெயரில்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்டே இளைஞர்களே! தோழர்களே புலவர்களே!  பெருமக்களே!  எழுத்தாளர்களே! பேச்சாளர்களே!

     நாடு பிரிவினையைத்தவிர வேறு வழி உண்டா?  என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். நேர்மை விடை காணுங்கள்.  உண்மையில் நாட்டின் பெயர் மாற்றத்தில் யாருக்காவது நாணயமான கவலை இருக்கு மானால் சூன் 5 இல் இந்திய யூனியன் படத்தை ஒரு கையிலும், தீப்பந் தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்! தீ மூட்டுங்கள்! தீ மூட்டுங்கள்!

     ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கம், பயம் இருக்குமானால் அவரவர்கள் வீட்டின் முன்வாசலில் கொளுத்திவிட்டுப் பெயர்களைக் கொடுங்கள்.

- விடுதலை; 18.05.1960.

 

தேசப்படத்தைக் கொள்ளுத்துங்கள்

அருமைத் தமிழ்ப் பெருமக்களே!

     இந்திய யூனியன் ஆட்சி (டெல்லி ஆட்சி) இந்தி மொழியைத் தீவிரமாகப் பரப்ப கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு தீவிரமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு வருகிறது.

     இந்திய அரசியல் சட்டத்தின் 343ஆவது ஷரத்து சொல்கிறது: யூனியனின் இராஜாங்க பாஷை தேவநாகரிலிபியில் எழுதப்பட்ட ஏற்பாடுகளையும் செய்துகொண்டு என்று.

     அதில் குறிப்பிட்டபடி ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மொழிக் கமிசன் திரு.பி.ஜி.கெர் என்பவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. நாம் முன்கூட்டியே சொன்னபடி இந்தி மொழிக் கமிசன் என்று கூறும் அளவு இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் இங்கிலீஷிலிருந்து இந்திக்கு மாற்றங்கள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதிவிட்டது.  பார்லிமெண்டும் அதன் சிபாரிசுகளை ஏற்றுக்கொண்டது.  நமது நாட்டைச் சார்ந்த திரு. டாக்டர் சுப்பராயன் அவர்கள் அக்கமிஷனில் ஒரு மெம்பராக இருந்து ஆட்சேபக் குறிப்பு தெரிவித்தபோதிலும் அவர்கள் காரியம் இதனால் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை.

     ஆறுபேர் கொண்ட கமிட்டி அமைத்து அதில் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் ஒரு அனாமதேய முஸ்லிமையும் போட்டு 4 பார்ப்பனர்கள் கூடிக், கல்லுப்பிள்ளையார் மாதிரி அமர்ந்து, அசைக்க முடியாத படி எந்த மரியாதையும் கொடுக்காமல், இந்தி நுழைப்புக்குச் சரியானபடி அடிகோலி ஆணி அடித்துவிட்டார்கள்.

     முன்பு ஒரு தடவை திருப்பதியில் இந்திய யூனியன் ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி திரு. இராசேந்திர பிரசாத் அவர்கள் இந்தித் திணிப்பிற்கு முழு ஆதரவு கொடுத்துப் பேசியதைத் தமது அடுக்கடுக் கான உத்தரவுகள் மூலம் செயல்படுத்திக் காட்டுகிறார்.

     முன்பு நாம் இந்தியைப் புகுத்துவதை எதிர்த்து இந்திய யூனியன் கொடியைக் கொளுத்துவது எனப் பிரகடனம் செய்தோம்; இல்லை, இல்லை;  இந்தி என்று அரசாங்கத்தினர் உறுதிமொழி கொடுத்து, நம்மைக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.

     நான் அப்போதே இவர்களது நாணயத்தையும் வாக்குறுதியையும் எடைபோட்டுப் பார்த்துத்தான் கைவிடவில்லை.  தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன் அதாவது ஒத்தி வைத்திருக்கிறேன் என்று அறிக்கை விட்டேன்.

     பிறகு சாமர்த்தியமாக, கொடியைக் கொளுத்தினால் மூன்று வருட தண்டனை என்பதாக ஒரு சட்டத்தை (இந்நாட்டுச் சட்டசபைக்கு உத்தரவிட்டு)ச் செய்துவைத்துக்கொண்டு, இந்தியைத் தீவிரமாகப் புகுத்தும் கைங்கர்யத்தில் டெல்லி ஆட்சியினர் இறங்கியுள்ளனர்.

     மைல் கற்களில் எல்லாம் இந்தி எழுதப்படுகிறது.  தமிழ்நாட்டு மந்திரிகள் ஆட்சேபித்தாலும் கூட அதற்கு டெல்லிக்காரர்கள் செவி சாய்ப்பதில்லை. 

     மணியார்டர், கார்டு மற்ற தபால் தந்தி ரசீதுகளில் இந்தி மயம்!

     வானொலிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு ஆகாசவாணி என அலறுவதைக் காண்கிறோம். 

     மத்திய இலாக்காக்களான தபால், இரயில்வே, சுங்கம் போன்ற பல துறைகளில் வேலையில் உள்ளவர்களை எல்லாம் இந்திப்படித்து பாஸ் செய்யும் சுற்றறிக்கைகளும், தாக்கீதுகளும் தூண்டுதல்களும் இடை விடாமல் நடந்த வண்ணமே இருக்கின்றன.

     இலாக்காவினரோ இந்தி வாத்தியார் போட்டு வேலை நேரத்தில் ஒரு பகுதியை அதற்கும் தந்து இந்தி படிக்கும்படிச் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

     பள்ளிக்கூடங்களில் எல்லாம் இந்தி கட்டாயமாகவே மாணவர்களுக்குப் புகுத்தப்படுவதுடன், இந்தியில் மார்க் வாங்காத மாணவர்கள் ஃபெயிலாக்கப்படுகின்றார்கள்.

     இந்தி பேசாத இராஜ்யங்களிலிருந்து பிரதிநிதிகள் டெல்லி சட்ட சபையில் மந்திரிகளைக் கேள்வி கேட்டால் அவர்களுக்குப் புரியாத வகையில் இந்தியிலேயே பதில்கள் தரப்படுகின்றன.  இதைத் தட்டிக் கேட்டுப் பரிகாரம்தேட அவர்களுக்கு வசதி ஏதும்இல்லை.

     இந்தியைப் பிரதான மொழியாக்கொண்ட உத்தரப்பிதேசம், பீகார், இராஜஸ்தான் போன்ற இராஜ்யப் பிரதிநிதிகள் கணிசமான அளவு அங்கு இருப்பதால் இந்தி ஆதிக்கத்தை ஆதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று பல பார்லிமெண்ட் உறுப்பினர்களுக்கே தெரியும். 

     மற்றும், அகில இந்தியக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் எந்தக்கட்சியும் இந்தித்திணிப்பை எதிர்ப்பது பேசுவது என்பது இயலாத காரியமாகும்.

     சென்ற இரண்டு வாரங்களுக்குமுன் ஜனாதிபதி போட்டுள்ள உத்தரவு இந்தியை எப்படியேனும் சீக்கிரம் திணித்து இங்கிலீஷைப் புதைகுழிக்கு அனுப்பியாக வேண்டும் என்கிறது. 

     இந்தி எதிர்ப்பாளர்கள் கருத்துக்கு மதிப்புத் தருவதுபோல், பிரதம மந்திரி நேரு சிற்சில நேரங்களில் பார்லிமெண்டிலும் வெளியிலும் வாய்ப்பேச்சு  உறுதிமொழிகள் தருகிறார்.  அந்தப் பேச்சு அச்சுப்போட்டு வெளியே வருவதற்குள் அச்சுமை உலருவதற்கு முன்பே உள்நாட்டு மந்திரி இலாக்காவிலிருந்தோ அல்லது இராஷ்டிரபதி பவனத்திலிருந்தோ இந்தி நுழைப்புத் திட்டம் வந்துவிடுகிறது. 

     ஆகவே, இந்தியைத் தீவிரமாக எதிர்க்கிறோம் என்கிற தோழர்களே! கட்சிக்காரர்களே !

     இந்தியாளர்களை ஆட்சிப் பீடத்தில் கொண்ட இந்திய யூனியன் ஆட்சி இருக்கும்வரை இந்தி நுழைக்கப்படாமல் இருக்கமுடியுமா?  என்று தீவிரமாக நாணயமாக யோசியுங்கள்!

     நண்பர் ஆச்சாரியார் அவர்கள்  இரண்டு ஆண்டுகளாக  இந்தி நுழைப்பு தேச அய்க்கியத்தைப் குலைக்கும் என்று சொல்லி வருகிறார்.  அதன் அர்த்தம்,  கருத்து எல்லாம் இந்தியை ஒழிக்க முடியாவிட்டால் நாம் இந்தி ஆட்சியாகிய இந்திய ஆட்சியிலிருந்து பிரிந்துகொள்வது என்பதுதானே? 

     இந்தியை எதிர்க்க, அதன் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஆட்சியின் பிணைப்பிலிருந்து நாம் விடுபடுவதைத் தவிர வேறு வழி உண்டா?  சொன்னால் ஏற்றுக்கொள்ளத் தயராக இருக்கின்றேன்.

     மைல் கற்களில் இந்தி எழுதப்படுவதை எதிர்த்து ஒரு போராட்டம், உண்ணாவிரதம்!

     ஆகாசவாணியை எதிர்த்து ஒரு போராட்டம்! உண்ணாவிரதம்! மறியல்!

     தபால், கார்டு, கவர்கள், மணியார்டர் கூப்பன்களில் இந்தி இருப்பதை எதிர்த்து ஒரு போராட்டம்! மறியல்! கிளர்ச்சி!

     இப்படித் தனித்தனியாகக் கிளர்ச்சிகள் நடத்துவதனால் இலட்சியம் எந்த அளவுக்குக் கைகூடும்?  எந்த அளவு இந்திக்கேடு நம்மைவிட்டு நீங்கும்? என்று யோசியுங்கள்! தனிப்பட்டவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும், விளம்பரம், வோட்டு, தியாக முத்திரை இவை தவிர, காரியத்தில் அது இந்தி ஒழிப்புக்கு எந்தஅளவு பயன்படும்?

     எனவே, இந்தி விஷவிருட்சத்தின் ஆணிவேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் உண்டு.  அதுதான் நாட்டுப் பிரிவினை.

     ஆகவே, அருமை இந்தி எதிர்ப்பாளர்களே! நீங்கள் வேறு எதற்காகவும் இந்திய தேசப்படத்தை எரிக்கவில்லை என்றாலும் இதற்காக வாவது கொளுத்துங்களேன்!

     சூன் 5 ஆம் தேதி மாலை தயார்தானே?  பல நாள்கள் அவகாசம் இருக்கிறது! நிதானமாகச் சிந்தியுங்கள்! இலட்சியத்தில் கவலை இருந்தால் தீவையுங்கள், இந்தியத் தேசப்படத்திற்கு!

- விடுதலை; 21.05.1960.

 

டெல்லிக்கும் நமக்கும்

சம்பந்தம் உண்டா?

     தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின்கீழ் அடிமையாக இருக்கவேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்?

     டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நிர்வாகத் திறமைக்கும், நேர்மைக்கும், ஜனநாயத்திற்கும், பாதுகாப்பிற்கும், பலத்திற்கும் சிறப்பான பேர்போன ஆட்சி?

1. வரலாற்றுப்படி நாம் டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? 56 நாடுகளில் நாம் ஒருநாட்டாராய் இருந்து வந்தவர்கள்!

வெள்ளைக்காரன் வியாபரம் நிமித்தம் இங்குவந்து பலபகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தானே தவிர அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு தமிழ்நாடு இருந்தது என்று சரித்திரத்தைப் புரட்டிக் காரணம் காட்ட முடியுமா? காசுமீர் முதல் கன்னியாகுமாரி வரை என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரே நாடு இந்தியா என்ற பொருள் இதற்குமுன் எப்போதாவது இருந்திருக்கிறதா? அல்லது

 2. புராணப்படியோ, இதிகாசப்படியோ ஒரே நாடாக இருந்திருக்கிறதா? சுயம்வரத்திற்குக் கூட 56 தேசத்து இராஜாக்கள் வந்திருந்தார்கள் என்றுதான் அவைகள் கூறுகின்றன. இராமாயணத்தில் வில் உடைப்பதற்குக் கூடப் பல தேச இராஜக்கள் வந்தார்கள் என்று இல்லையா? ஆகவே, அப்போதும்கூட பற்பல இராஜ்யங்கள், அவைகளுக்குத் தனிதனி எல்லைகள், இராஜாக்கள்  இருந்திருக்கின்றனர் என்றுதானே அறிகிறோம்? 

3. பூகோளப்படி எந்த நாடாவது 2,000 மைல்களுக்கு அப்பால்  எஜமான் ஆட்சியை வைத்திருப்பதும், எதற்கெடுத்தாலும் அங்கு  ஓடிஓடிக் கருத்தும்  உத்தரவும் என்ன என்று தெரிந்து, பிறகு செயலாற்றும் தன்மையைக் கொண்டுள்ளதா?  எந்தவகையில் இது சரியானதாகும்? 

4. கலாச்சாரப்படியாவது டெல்லி எஜமான ஆட்சிப் பீடர்களாகிய அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா? உணவில், உடையில், மொழியில் எல்லாவற்றிலுமே ஒன்றுக்கு மற்றொன்று ஏறுமாறான நிலை!

ஆகவே, வரலாற்றுப்படியும் காரணமில்லை;  

பூகோளப்படியும் காரணமில்லை;

புராணப்படியும் காரணமில்லை;  

கலாச்சாரப்படியும் காரணமில்லை;

இந்தப்படியான  எத்தன்மையாலும் நாம் டெல்லி ஆதிக்கத்திற்கு அடிமையாவதால் நமக்கு ஏதாவது சமுதாயம், பொருளாதாரம், ஆட்சி முறை ஆகிய ஏதாவது ஒரு துறையிலாவது பலன் ஏற்படுகிறதா?   ஏற்படுகிறது என்ற நிலையிலிருந்தாலாவது யூனியன் ஆட்சியின்கீழ் நாம் இருப்பதில் அர்த்தம் உண்டு.

     இந்த ஆட்சியில் நீதி இல்லை என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அய்க்கோட்டில் என்மீது போடப்பட்ட ஒரு வழக்கின்போது தெளிவாக எடுத்து விளக்கிப் பார்ப்பான் நீதிபதியாய் ஆட்சியாளனாய் உள்ள நாடு கடும்புலி வாழும் காடேயாகும் என்று குறிப்பிட்டுள்ளேன்.

     நிர்வாகத் திறமையோ நேர்மையோ இல்லை.  ஒவ்வொரு வருடமும் ஆடிட்டர் ஜெனரல் தரும் ரிப்போர்ட் ஒன்றே அதற்கு நல்ல சர்டிபிகேட்டாக இருக்கிறது.  பல கோடி நம்மிடம் சுரண்டும் வரிப் பணம் நாசத்திற்கும் மோசத்திற்கும் ஈடாக்கப்படுகிறது.

     நம்மிடருந்து நம்மைக் கசக்கிப் பிழிந்து வாங்கி அதை அவர்கள் டாட்டா, பிர்லா, முந்திராக்கள் இடம் கோடி கோடியாகத் தந்து, அதற்குக் கைமாறாக (காங்கிரசுதேர்தல் நிதிக்கு) இலட்சம் இலட்சமாய்ப் பெற்றுக் கொள்ளுகின்றேன்.

     சென்ற ஆண்டு பிரதம மந்திரி திரு.நேருவின் காரியதரிசியாக இருந்த திரு.மத்தாய் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதிப ராகவும், அதைக்கொண்டு அவர் தாயார் பெயரில் ஜக்கம்மா டிரஸ்ட் என ஏற்படுத்தியும், செய்த ஜகஜாலப் புரட்டுகளையும், அதைப் பூசிமெழுகி மூடிமறைக்க நேரு பட்ட பாட்டினையும், கடைசியில் முந்திரா விவகாரம் போலவே அது அமிழ்த்தப்பட்டதும் நாம் அவ்வளவு சுலபமாக மறந்துவிடுவதற்குரியவைகளா?

     பிர்லா, டாட்டா, டால்மியா போன்றவர்களிடம் வாங்கும் தேர்தல் நன்கொடையும் அதற்குப் பிரதி உபகாரம் என்ற முறையில் சர்க்கார் அவர்களுக்கு வழித்துறை வகுப்பதும் நாம் எடுத்துக்காட்டி வராதவைகள் அல்லவே?  இந்திய யூனியன் ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கும் நீதிக்கும் இன்னும் வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டும்?

     ஜனநாயகத்திற்கும், இந்த ஆட்சிக்குத்தான் ஏதாவது சம்பந்த முண்டா?

     எனது கொடி, அரசியல் சட்டம், ஆட்சி பிடிக்காதவர்கள் இந் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பார்ப்பன சர்வாதிகாரத் திமிருடன் பேசும் ஒரு பிரதம மந்திரியைக் கொண்ட இந்த ஆட்சிக்கு ஜனநாயக ஆட்சி என்று பெயரிட்டு அழைப்பதைவிட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு உண்டா? 

     அதிலும், கேரளத்தில் முறைப்படி நடந்த கம்யூனிஸ்டு ஆட்சியைக் காலித்தனம் மூலம் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்து, பிறகு அதைக் காட்டி, ஒரு வரி உத்திரவின் மூலம் ஒழித்துக்கட்டினார்களே, அந்தப் பிரத்யட்ச நிலையைவிட வேறு உதாரணம் வேண்டுமா?

     யூனியன் ஆட்சியின்கீழ் இருப்பதால் மற்ற எவையும் இல்லா விட்டால் கூட நமக்கு பாதுகாப்பாவது இருக்கிறதா?  

     வருடம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி ரூபாய்க்குமேல் இராணுவத்திற்குச் செலவழிக்கப்படுகிறது. அதாவது 55% இதற்குச் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் பலன் உண்டா? 

     ஒரு பக்கத்தில் சீனாக்காரன் ஆக்கிரமிப்பு; இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான்காரனிடம் தினம் தினம் உதைபடும் நிலை.

     சுண்டைக்காய் கோவாவை இதுவரை முயற்சி செய்தும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை; வீணாகப் பல உயிர் பலியானதுதான் மிச்சம்.  உலகமெல்லாம் சென்று தோட்டாக்கள் பெற்றுவரும் பண்டித நேருவால் கடுகளவு உள்ள இதற்குப் பரிகாரம் காண இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக முடியவில்லை.

     கடன், கடன் என்று வெளிநாட்டாரிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பலகோடிகள் மடிப்பிச்சை வாங்கி காசுமீர் முனைகளிலும், இது போன்ற மற்ற காரியங்களிலும் அவை பாழக்கப்பட்டு வருகின்றன.

     காஷ்மீர் பிரச்சினைக்கு மாத்திரம் இதுவரை சுமார் ரூ.300 கோடிக்கு மேல் செலவழித்தனர். காதொடிந்த ஊசியளவும் பயன் விளையவில்லை.

     இந்த நிலையில் எதற்காக நாம் டெல்லி ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும்? ஆண்டு ஒன்றுக்கு 66 கோடி ரூபாய் எதற்காக கப்பம் கட்ட வேண்டும்?

     சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! ஏக இந்தியத் தோழர்களே, நன்றாகச் சிந்தியுங்கள்!

   தெளிவடைவீர்களானால், சூன் 5 ஆம் தேதி மாலை இந்தியத் தேசப்படத்தில் தீவையுங்கள்! நாடு பிரிக்க, மேற்கூறிய அநியாய அக்கிர மங்களைக் கண்டிக்க, அடக்கி ஒழிக்க இது ஒன்றுதான் வழி வேற மார்க்கம் இருந்தால் காட்டுங்கள்; வேறு வழி இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் நீங்கள் எங்கள் வழிக்கு வாருங்கள்! நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! பந்தத்தை ஏந்துங்கள்! படத்தைப் பொசுக்குங்கள்! 

- விடுதலை; 22.05.1960.

 

 இந்திய யூனியன் ஆட்சி என்பது

(இந்து) மதப்பாதுகாப்பு ஆட்சியே!

     இந்து மதத்தை ஒழிப்பதற்காகவாவது யூனியன் ஆட்சியை (மய்ய அரசை) ஒழிக்க இந்தியா படத்தைப் பொசுக்குங்கள்!

    தோழர்களே! இந்நாட்டுக் குடிமக்களான நாம் (தமிழ்த் திராவிடர்) 100 - க்கு 90 பேர் இந்து மதம், இம்மதக் கடவுள், புராண, இதிகாச சாஸ்திர அமைப்புகள் ஆகியவற்றின்படி, சூத்திரர்கள் அதாவது மேல் சாதிக்காரர்களாகிய பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகும். (மலையாளமே இதற்கு ஆதாரம்)

    மானத்தோடும், மனிதத் தன்மையோடும் இருக்க விரும்பும் எந்தக் குடிமகனும் அவன் உடம்பில் சுத்த (தூய) இரத்தம் ஓடுமானால் இத்தகைய பிறவி இழிவைச் சகித்துக் கொண்டு இருக்கமாட்டான். 

     இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கம்வரை இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள சூத்திரப் பட்டம் ஒழியாது; நிச்சயம் ஒழியாது. 

     ஆனால், இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன மனு தர்மவாதிகளின் ஆட்சியில் இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது.  மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் மதம் மனிதனது சொந்த விஷயம் என்ற பாவனையில்கூட அரசாங்கம் நடப்பதில்லை.  இதற்குப் பிரத்யட்சயமாகப் (கண் கூடாகப்) பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

1. இந்திய அரசமைப்புச் சட்டம் என்கிற பார்ப்பன நவீன மனுதர்மச் சட்டம், எல்லோருக்கும் மதச்சுதந்தர உரிமை அளித்திருக்கிறது. அதன்படி இந்து மதக்காரன் சுதந்திரமாக இன்னொருவனைப் பார்த்து நீ கீழ்ச்சாதி, இழி சாதிக்காரன், சூத்திரன், பஞ்சமன் என்று கூறினால், மற்றவனும் ஆம் என்று தலையசைப்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்?  கூறுவதற்கு உரிமையும் இல்லை (இந்து லாவே (சட்டம்) இதற்கு ஆதாரம்).

2. இந்திய அரசாங்கத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இதை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் என்பதாகக் குறிப்பிடுவார்கள்.

     அத்தகையோர்களைப் பார்த்து நான் வணக்கமாக் கேட்டுக்கொள்வது எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஓர் இடத்திலாவது இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறதா? சட்ட நிபுணர்களே ஆராய்ந்து பாருங்கள். (மதச் சார்பு) ஆட்சி என்பதற்கு அரசமைப்புச் சட்டமே ஆதாரம்).

     இந்தக் கேள்விக்கு நேற்று முன்தினம் உததையில் டாக்டர் சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் பதில் அளித்திருக்கிறார்.

     இந்து அறநிலைய ஸ்தாபனக் (நிறுவனம்) கமிசன் என்பதாக ஒரு கமிசனை (குழுவை) ஏற்படுத்தி மத்திய அரசாங்கம், அதற்கு டாக்டர் சி.பி இராமசாமி அய்யர் அவர்களைப் போட்டிருக்கிறது.  மதச்சார்பற்ற அரசாங்கத்தினர் இதுபோல ஒரு கமிசன் ஏற்படுத்தலாமா?  என்றெல்லாம் கேள்விகள் கிளம்பியதற்குப் பதிலளிக்கும் முகத்தான் அவர் பேசியிருக்கிறார்; இது இந்து பத்திரிகையில் 25.05.1960இல் 7ஆம் பக்கத்தில் மூன்றாம் கலத்தில் வந்திருக்கிறது. 

     இந்தக் கமிஷன் நியமனம் பற்றி ஒரு சிலரிடையே ஓர் அபிப்பிராயம் நிலவுகிறது; அதாவது மதச்சார்பற்ற ஓர் அரசாங்கம் இக்காரியத்தைச் செய்திருப்பது என்பது விரும்பத்தகாததும், மத்திய அரசாங்க அதிகார வரம்பிற்கு மீறியதும் ஆகும் என்பதே அவ்வபிப்பிராயம்.  அத்தகையோர் ஒரு விசயத்தை நன்றாகத் தங்கள் மனத்தில் இறுத்திக் கொள்ளவேண்டும்.  நமது அரசமைப்புச் சட்டத்தில் இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று எந்த இடத்திலேயும் குறிப்பிடப்படவில்லையே! என்று சொல்லி விட்டார்.

     அதாவது இது மதச் சார்பற்ற அரசாங்கம் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருப்பது தவறானதாகும். ஆகவே இது மதச்சார்பு அரசாங்கமேயாகும் என்று சுட்டிக்காட்டி விட்டார். 

     நாம் இதுவரை சொல்லி வந்ததும், இப்போது சசிவோத்தம சர்  சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் வாயிலேயே வந்துவிட்டது. 

     மதப்பாதுகாப்பு என்றால் மனுதர்ம வருணாசிரமப் பாதுகாப்பு அல்லாமல் வேறு என்ன?

     ஆகவே, இது மதப் பாதுகாப்பு வருணாசிரமத் தர்மப் பாதுகாப்பு  ஆட்சி என்பதில் இனியும் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா? 

     மற்றும்,

3. இந்த ஆட்சியில் மதப்பண்டிகைகளுக்கு எல்லாம் அரசாங்க விடுமுறை.

4. கும்பமேளா போன்ற ஆபாச நிர்வாணப் பண்டிகைத் திருவிழாக்களில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற ஆட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளத் தவறுவது இல்லை.

5. 50,000 ரூபாய் செலவில் வருஷா வருஷம் இராவணனை எரிக்கும் இராமலீலா பண்டிகையில் ஆட்சி பீடத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மத உணர்ச்சியை நன்றாகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

6. ஜனாதிபதி திரு. இராஜேந்திரபிரசாத் அவர்கள் காசிக்குப் போய்ப் பார்ப்பனர்களது காலைக் கழுவி விட்டு வருவதும், கன்னியாகுமரிக்கு வந்தாலும் பார்ப்பனர்களிடம் மண்டி போட்டு உட்கார்ந்து தர்ப்பணம் பண்ணுதலும் உலகப் பிரசித்தி பெற்ற விசயங்களாகும்.

7. அணைக்கட்டுகள் திறப்பதானாலும் சரி, கப்பல் கட்டி அதைக் கடலில் மிதக்க விடுவதானாலும் சரி, இந்து மத முறைப்படி, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துத் தேங்காய் உடைத்து மதச் சடங்குகள் முறையில் அர்ச்சனை செய்துதான் அரசாங்கக் காரியங்கள் நடைபெறுகின்றன.

8. சோமநாதபுரம் கோவிலைப் பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அரசாங்க ஆதரவுடன் புதுப்பித்திருக்கிறார்கள்.

9. இந்து மதத்திற்கே சலுகையெனப்படும் முறையில் கோவில்களைப் புனருத்தாரணம் செய்ய டெல்லி சர்க்கார் காட்டும் முயற்சி, ஆர்வம் அதிகம்.

10 வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் டிட்டோ, குருஷ்சேவ் போன்றவர்கள் வரும்போது இந்துக் கோவில்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று பூரண கும்ப மரியாதை செலுத்தி, நடராசன், சிவன் போன்ற கடவுள்களின் சிலைகளை அவர்களுக்குப் பரிசளித்தரல்.

11. தபால் முத்திரையில் மும்மூர்த்தி உருவம் போட்டு அச்சடிப்பது.

12. அரசாங்க அலுவலகங்களில் இந்து மதக் கடவுள்களின் படத்தை வைத்து, அதற்கு அடிக்கடி பூசை நடத்துதல்.

13. இந்துலாவின்படி (இந்துச் சட்டப்படி) பவுத்தர்களையும் இந்துக்களாக எண்ணி இந்துலாவையே, விவாகரத்திற்குப் பயன்படுத்திய போதிலும், பல இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வட நாட்டில் புத்த மார்க்கத்ததைத் தழுவினார்கள் என்றவுடன், அவர்களை அதற்காகப் பழிவாக்கும் தன்மையில் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தந்து வந்த கல்வி, உத்தியோகச் சலுகைகள் இனி தரப்பட மாட்டாது என்று இந்திய யூனியன் (மய்ய ஆட்சி) மறுத்தது, ஒர் அருமையான இது இந்து மத சர்க்கார்தான் என்பதற்கு நல்ல எடுத்துகாட்டு.

     பவுத்தத்திற்கு மாறினால் மாறினவனுக்குச் சலுகை கிடையாது.  இவற்றையெல்லாம் கண்டு மற்ற மதக்காரர்களான கிறிஸ்துவர்கள் எடுத்துக் கூறிக் கண்டிக்கிற தைரியம் நெஞ்சுரம் அவர்களுக்கு இல்லை.  அதற்குக் காரணம் தாங்கள் மைனாரிட்டிகளாக இருப்பதால் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால் கேடு வரும்.  ஆகவே, எதிர்க்கக் கூடாது; ஆதரித்தே ஏதாவது ஒரு சில சலுகைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். 

     இந்த நிலையில், இவற்றை எல்லாம் துணிந்து எடுத்துக் கூறி, இத்தகைய வருணாசிரம தர்மப் பாதுகாப்பு ஆட்சியினின்று விடுபட்டால்தான், இந்துமதப் பிடிப்பிலிருந்து விலகமுடியும். இந்துமதப் பிடிப்பு ஒழிந்தால்தான் மூவாயிரம் ஆண்டுக்காலத்து இழிவான சூத்திரப் பட்டமும் ஒழியும்.

   ஆகவே, உடனடியான அவசரத் தேவை நமது தனித்தமிழ்நாடு.  இந்துமத ஆட்சியான டெல்லி ஆட்சியிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும்.  விடுபட அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. 

    ஆகவே, விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி கிளர்ச்சியே.  அந்தப்படியான கிளர்ச்சி என்பதில் சாந்தமும், சமாதனமுமான கிளர்ச்சி (1960) ஜூன் 5 ஆம் தேதி இந்து மத ஆட்சயான யூனியன் ஆட்சியை வெறுக்கிறோம் எனக் காட்டிக்கொள்வதற்கு மாத்திரமே தமிழ்நாடு நீக்கிய இந்திய தேசப்படத்தைப் பொசுக்குங்கள்! அப்படிப் பொசுக்குவது மதஆதிக்கத்தையும், நமது பிறவி இழிவாகிய சூத்திரப் பட்டத்தையும் சுட்டுப் பொசுக்குவதற்கு, அது ஒன்றேதான் சரியான வழி என்பதாகும்.

  மற்றப்படி அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரத் தமிழ்நாடு கேட்கவோ, சூத்திரன் என்கிற ஜாதி ஒழிக்கவோ இடமில்லை; இருந்தால் ஒரு கை பார்க்கலாம். 

 ஆகவே, தமிழர்களோ, நீங்கள் நிரந்தரமாகவே சூத்திரர்களாக இருக்கப் போகிறீர்களா?  அல்லது அதை ஒழித்து மானமுள்ள தமிழர்கள் எனக் காட்டிக்கொள்ளப் போகிறீர்களா? 

  என்ன செய்யப் போகிறீர்கள்?  என்று உங்களைக் கேட்பதுதான் பட எரிப்பு நிகழ்ச்சி.

தயார்! தயார்! ஜுன் 5 ஆம் தேதி தயார்!

     - விடுதலை; 27.05.1960. 

 

பட எரிப்பு அரசியல் போரட்டமல்ல;

அது ஓர் இனப் போரட்டமே ஆகும்

     அரசியல் போராட்டம் என்பது ஒரு நாட்டு மக்கள் தங்கள் நாட்டு ஆட்சி முறைகளில் உள்ள கொள்கை திட்ட வேறுபாடுகளுக்குகாகச் சட்ட திட்டங்களுக்கு அடங்கிப் போராடுவது ஆகும். 

     உதாரணமாக நம் நாட்டு அரசியல் போரட்டம் என்பது மக்களிடம் ஓட்டுப் பெற்ற பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த மக்களும் அந்தப் பிரதிநிதிகளும், அந்த அரசமைப்புச் சட்டத்திட்டங்களுக்குக் கீழடங்கிக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களே ஆவார்கள்.  நாம் படம் எரிப்பது என்பது ஆட்சி முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு ஆக அல்ல. 

     இந்திய உபகண்டத்தின் ஆரம்ப கால சரித்திரம் தொட்டே, நம் நாட்டில் அரசியல் போரட்டம் என்றே ஒன்று நடைபெற்றதாகக் காணப்படுவதே இல்லை.  இனப் போரட்டங்களே ஆகும் என்பது இந்திய சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்துப் படித்தால் நன்றாக விளங்கும்.

     இந்திய நாட்டு விடுதலைப் போரட்டத்தின் முதல்கட்டம் 1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் என்பதுதான் என்று கூறி, அதற்கு 1957இல் நூற்றாண்டு விழாவும் கொண்டாடினர்கள். 1857 இல் நடை பெற்றது அரசியல் ரீதியாக ஓர் அரசியல் போராட்டமல்ல; அதைச் சுதந்திரப்போரட்டம் என்று கூறுவது சுத்தப் பித்தலாட்டம் என்பதை நான் முன்பே பல தடவை எடுத்து விளக்கியிருக்கிறேன்.

     1857இல் நடைபெற்ற சிப்பாய்க் கலகம் வெள்ளையனுடைய ஆதிக்கம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படுவது கூடாது; அரசியல் ஆதிக்கம் அந்நியரிடத்திலா இருப்பது?  என்ற கருத்தில் நடைபெற்றது அல்ல என்பதை அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை முன்  வைத்துப் பார்த்தால் அறியலாம்.  லார்டு டல்ஹவுசியின் சீர்திருத்தங்கள் ஒரு சிலரான பார்ப்பனர்களுக்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை, நாடெங்கும் எல்லொரும் படித்துப் பயன் பெறும் வண்ணம் பரப்பிய முறை, இரயில் நீராவி எஞ்சின், தந்தி சாதனம் போன்ற விஞ்ஞான சாதனங்களைப் புகுத்தியமை போன்ற சீர்திருத்தங்களைக் கண்டு, வைதீக மேல்சாதிக்காரர்கள் (பார்ப்பனர்கள்) என்பவர்கள் வெகுண்டார்கள்.  இத்தகைய அறிவு வளர்ச்சி எங்குத் தங்கள் ஆதிக்கத்திற்கு உலை வைத்துவிடுமோ என்று அஞ்சி, எதைச் செய்தால் இவற்றை ஒழித்துக் கட்டலாம் என நினைத்து அதைச் கண்டுபிடித்து, பாமர மக்களான சிப்பாய்களாக இருந்த சாதி மத வெறியர்களை, உங்கள் சாதியும், மதமும் ஒழிந்துவிட வெள்ளையன் ஏற்பாடு செய்கிறான் எனக் கூறி வெள்ளையர்களை எதிர்க்கச் செய்தனர்.

     அதாவது, எங்கு இந்தச் சீர்திருத்தங்களும், விஞ்ஞானக் கல்வியும் பரவினால், சாதி முறையும் அதையொட்டி அமைத்துள்ள கீழ்ச்சாதி மக்களின் பணிவும், அடிமைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநலம் எண்ணத்தின் பேரில்தான் மற்றவர்களைத் தூண்டிவிட்டனர்.

     துப்பாக்கிகளில் கொழுப்பைத் தடவிக் கொடுத்தனர் என்ற குற்றச் சாட்டிலுங்கூட, இந்துச் சிப்பாய்களிடம் அது பசு மாட்டுக் கொழுப்பு என்றும் பிரச்சாரம் செய்து, அவரவர்களுக்கு உள்ள மத உணர்ச்சியையும் அதனடியாகப் பிறந்த மூட நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

     நெற்றியில் மதக் குறிகளை அணியக்கூடாது; எல்லாச் சிப்பாய்களும் ஒரே மாதிரியான உடையே உடுத்தவேண்டும்; தாடி வைத்துக் கொள்ளக்கூடாது; காதணி அணியக் கூடாது என்பன போன்ற விதிகளின் மூலம் வெள்ளையர்கள் இவர்களுடைய மதத் தத்துவங்களைத் தகர்த் தெறியச் செய்கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடன் அவைகளை நோக்கினார்கள்.

     அதுபோலவே, கடலைத் தாண்டிப் போரிடச் செல்ல வேண்டும் என்கிற விதி, தங்களுக்கு இந்து மத சாத்திரத்திற்குப் புறம்பான முறையில் அமைந்துள்ளது என்று நினைத்தே கொதித்தெழச்  செய்தார்கள்.

     இரயில் வசதியும், படிப்பு வசதியும், மற்ற விஞ்ஞான சாதனங்களின் மூலம் கிறித்தவ மதத் தத்துவங்கள் பரவ வகை ஏற்படும் என்றும், அதனால் இந்து மதம் அழிந்து விடும் என்ற பயமும், சிப்பாய்களைத் தூண்டிவிட்ட மேல் சாதிக்காரர்களுக்கு இருந்தன என்பது ஒரு மாபெரும் உண்மையாகும்.

     1857 இல் இந்தியா அந்நியனிடமிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.  மேலும் சொல்லப்போனால், 1857இல் மாத்திரம் அல்ல, 1886ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை ஏற்பாடு செய்த பெருந்தலைவர்கள் என்பவர்கள்கூட, இந்தியா விடுதலை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் மீது காங்கிரசை ஏற்படுத்தவில்லை.

     இதற்கு ஆதாரம் வேண்டுமானால், காங்கிரசின் தொடக்க விழாவிலும் அதன்பின் ஒவ்வொரு ஆண்டு காங்கிரஸ் விழாவில், இந்தியாவின் பெருந்தலைவர்கள் பேசி இருக்கும் பேச்சுகளையும், அவற்றில் வெகுகாலம் செய்யப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்களையும், ஊன்றிப் படித்துப் பார்த்தால் தெரியும்.  இந்தியாவானது வெள்ளையர் ஆட்சி ஏற்படும் காலம் வரையில் கொடுங்கோன்மை ஆட்சிக்கு உள்பட்ட ஓர் அடிமை நாடாக இருந்து வந்ததாகவும், இந்தியப் பெண் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத தன்மையில் காட்டாளர் ஆட்சியாக இருந்தாகவும், இந்திய மக்கள் கண்ணற்ற குருடர்கள்போல் எழுத்து வாசனை அற்றவர்களாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும், நல்ல அறிவு ஆராய்ச்சி அற்றவர்களாக இருந்ததாகவும், வெள்ளையர் ஆட்சி ஏற்பட்ட பின்பே, இந்திய நாடு நல்ல சுதந்திர மனித்ததன்மை உள்ள, உன்னத நிலைக்கு வந்திருப்பதாகவும் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.  அவை மட்டு மல்ல, மற்றும் ஆங்கிலம் புகுத்தப்பட்டது ஒரு வரப்பிரசாதம் என்றும் பல தடவை கூறியிருக்கிறார்கள்.

     இந்த நாடு வெள்ளையர் ஆட்சிக்கு வந்தது கடவுளால் அருளப்பட்ட ஓர் அருள் பிரசாதம் வெள்ளையர் ஆட்சியே இந்த நாட்டில் என்றென்றும் இருந்து வரவேண்டும் என்றும், அப்படி இருந்து வர கடவுள் அருள்புரிய வேண்டும் என்றும், வெள்ளைக்காரர்களைக் கடவுள் காப்பற்றவேண்டும் என்றும், பிரபல தலைவர்கள் கடவுளைப் பிரார்த்தித்து ஏகமனதாகத் தீர்மானமும் செய்திருக்கிறார்கள். 

     காங்கிரசை வெள்ளைக்காரன் ஏற்படுத்தியதே தனக்கு முஸ்லிமிடத்திலும், மராட்டியனிடத்திலும் ஏற்பட்ட எதிர்ப்பை பகையை ஒழிப்பதற்கே ஆகும்.

     இதை நல் வாய்ப்பாகக் கொண்டு இவனிடத்தில் பார்ப்பனர்களும் அவனது பெருமைப்பள்ளு பாடிவிட்டு அதிகச் சம்பளம், அதிக உத்தியோகங்கள், அதிக அதிகாரம், அதிகப் பதவி, அந்தஸ்து, பட்டங்கள் வேண்டும் என்று கேட்டு, அதன் மூலம் சலுகைகள் பெற, பார்ப்பன மேல்சாதிக்காரர்கள் காங்கிரஸ் ஸ்தாபனத்தை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு அவைகளைப் பெற்று வந்தார்கள்.

     வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்து அவனை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டு எந்தக்கட்டத்தில் அவனால் தங்கள் இடத்திற்கும், உயர்சாதித் தத்துவத்திற்கும், சுயநல வாழ்விற்கும் கேடு ஏற்படும் என்று எண்ணினார்களோ அன்று முதல்தான் அவனை வெளிப்படையாக எதிர்க்க முன்வந்தனர் மேல் சாதிக்காரர்கள் மனதைக் கொண்டு வாழ்ந்து வந்த பார்ப்பனர்கள்.

     ஆகவே, அரசியல் போராட்டம் என்பதாக இந்த நாட்டில் ஒன்று நடைபெறவில்லை என்பது தெளிவாக விளங்கும்.

     பிறகு அவனை எதிர்த்து வெளியே போ என்று காந்தியார் காலத்தில் சொன்னபோதும்கூட அவனது ஆட்சி முறையில் கோளாறு, அதனால் அது பிடிக்கவில்லை என்று கூறி, வெள்ளையன் ஆட்சி வேண்டாம் என்று கூறவில்லை. அவன் ஆட்சி முறையைத்தான் நாம் இன்றும் அப்படியே சுதந்திரம் அடைந்த பின்னரும் பின்பற்றி வருகிறோம்.  அவனை நாம் எதிர்த்ததற்கு எல்லாம் சொல்லிய காரணம் அவன் அந்நியன் என்ப தேயாகும். அதாவது நம் தேசத்தவன் அல்லாதவன் நம்மை ஆளுகிறான்; அது கூடாது; அப்படிப்பட்ட ஆட்சி கூடாது என்று சொல்லித்தான் போராட்டம் நடந்தது. அதாவது அது ஓர் இனப் போரட்டமாகும்.  அதுவும் வெள்ளையன் இந்துக்களையும், சமமாக நடத்த ஆரம்பித்த பிறகு துவக்கிய போரட்டமாகும்.

     ஓர் இனப் போராட்டம் என்றால், அந்த  இனத்துக்குரிய மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு முதலியவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட வேறு இனத்துக்காரன் ஆட்சியை வெறுப்பது, வெறுத்து எதிர்த்து ஒழிப்பது என்பதாகும். 

     இந்தக் கண்ணோட்டத்தோடு இன்றையத் தினம் நம் நாட்டில் நடைபெறும் வடவர் தென்னாட்டவர் கிளர்ச்சி, ஆரியர், திராவிடர் போராட்டம், இனப்போராட்ட உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான்.

     வெள்ளைக்காரன் நமக்கு எவ்வகையில் அந்நியனோ, அவ்வகைகளில் எல்லாம் இவனும் நமக்கு அந்நியன்தான்,  வெள்ளைக்காரன் காலத்திலாவது அவன் நம்மைச் சமமாகக் கருதி சமத்துவ உணர்ச்சியோடு சம அந்தஸ்து கொடுத்து மனிதத்  தன்மையோடு நடத்தினான். ஆனால், இன்றுள்ள அந்நியன் ஆட்சியோ பெரும்பான்மையாளாராக இருக்கும் நம்மக்களை பாடுபடும் உடலுழைப்புக்கார மக்களை சமுதாயத்தின் முதுகெலும்பாக உள்ள மக்களை கீழ்ச்சாதியாக்கி இழி பிறவிகளாகக் கற்பித்து அந்த நிரந்தர இழிவு சிறிதும் ஆடாமல், அசையாமல் இருக்கும்படி ஆணி அடித்து, அதற்காகவே கோவில் மடம் கடவுள் சாஸ்திர, புராண, இதிகாசம் முதலியவைகளை ஏற்படுத்திப் பாதுகாத்துக் கொண்டு, அந்த நிலைமை என்றென்றும் மாறாத வண்ணம் சிரத்தையோடும், கவலையோடும் ஆட்சி  மூலம் கவனித்து வருகின்ற நிலை இருக்கிறது.

     வெள்ளைக்காரன் காலத்தில் அவனை எதிர்க்க எத்தனைக் கேடுகள் சொன்னார்களோ அதைவிட ஆயிரம் அதிகம் இந்த ஆட்சியை ஒழிக்க நம்மால் சொல்ல முடியும் சொல்லியும் வருகிறோம்.

     இன்று நம்மை ஆளுபவனுக்கும், நமக்கும் பிறவியினால்கூட வேறு ஒற்றுமை இல்லை.  ஆளும் அவன் மேல்பிறவி, ஆளப்படும் நாம் கீழ்ப் பிறவி என்கிற கேவல நிலைமை வெள்ளையன் காலத்தில்கூட இல்லாததாகும்.

     இதைப்பற்றி நம்மைப்போல் உணர்ச்சி-கீழ்ச்சாதியாக, சூத்திரனாக இந்தியாவில் இருக்கும் மற்ற (மொழிகள் பேசும்) நாட்டு மக்களுக்கு இல்லை.  மற்ற நாட்டுக்காரர்கள் இந்த இழிவு ஒன்று இருப்பதாகவே எண்ணுவது இல்லை. மாறாக இத்தகைய மேல்சாதிக்காரன் ஆட்சியில் இருப்பதே பெருமை என்று எண்ணிக் கொள்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். எப்படி நம் மக்களில் சிலர் தங்களைச் சற்சூத்திரங்கள் என்று மிகப் பெருமையுடன் சைவர்கள் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளுகிறார்களோ அதுபோலவே, சில நாட்டுக்காரர்களுக்கு இந்திய ஆட்சி என்றும் மேல்சாதி வடவர் ஆட்சிக்குட்பட்டு இருப்பதே நல்ல காரியம் என்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

     இந்த நிலையில் பிரிவினை உணர்ச்சியைக் கொண்டுள்ள நாம் தனியே விலகி, அந்நிய ஆதிக்க ஆட்சியின் பிடியிலிருந்து நீங்கிய சுதந்திரத் தனிஆட்சி அமைத்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பாகும். 

     எனவே, வரும் (1960) ஜூன் 5 ஆம் தேதியன்று நடைபெறப் போகும் பட எரிப்புக் கிளர்ச்சியானது ஓர் அரசியல் கிளர்ச்சியல்ல.  அது ஓர் இன விடுதலைப் போராட்டமாகும்.

     நமது இனத்தின் நல்வாழ்வில் அக்கறையும், கவலையும் கொண்ட ஒவ்வொருவரும் இதில் ஈடுபடவேண்டியது அவசரமும், அவசியமுமான காரியம் ஆகும்.

- விடுதலை; 28.05.1960.   

 

தமிழர் வாழ்வதா?

அல்லது சாவதா? 

     பட எரிப்புக் காரியத்தில் இது ஏதோ படத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துவது என்றாலும் தத்துவத்தில் இது படை எடுப்பே ஆகும்.

     நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஆரியப் படை எடுப்பினால் தோல்வியுற்றுச் சிறைக்கைதிகள் போல வாழ்கின்றோம். எந்தவித உரிமையும் இல்லாமல்தான் இருக்கின்றோம். நம்மிடையே பணக்காரர்கள், படிப்பாளிகள், அறிவாளிகள், இலட்சாதிபதிகள், மந்திரிகள் போன்றவர்கள் இருக்கலாம்.  அனைவரும் இழிசாதி மக்கள்தானே?

    நாம் தமிழர்கள் சரித்திரக்காலத்திற்கு முன்பிருந்தே நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள். ஆனால், இன்று நாம் ஆரியத்தால் இழிமக்களாகக் காட்டுமிராண்டிகளாகக் கல்வி அறிவற்றர்களாக, மானத்தை ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்கின்றோம். 

    தமிழன் என்றால் என்ன? சட்டப்படி சமுதாய அமைப்புப்படி, சாஸ்திரப்படி நாம் சூத்திரன்! சூத்திரன் என்றால் என்ன? மேல்சாதி பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்; அவனுக்குத் தொண்டு ஊழியம் செய்யக்கூடியவன்; அவன் உண்ட எச்சிலைத் தின்று வயிறு வளர்க்க வேண்டியவன் என்றே சாஸ்திரத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

     இன்று ஏதோ துலாம்பாரமாகத் தெரியாமல் மறைவாக இருக்கலாம்.  என்றாலும், நீறுபூத்த நெருப்புத்தான் அது.  ஏதோ எங்கள் கூப்பாட்டால் வாலாட்டவில்லை.  அடங்கிக் கிடக்கின்றார்கள்.  நாங்கள் தொலைந்தால் பகிரங்கமாக மீண்டும் வெளிவந்துவிடும்.   நேற்றுப் பார்த்தோமே பார்ப்பன முதலமைச்சரான இராஜாஜி ஆட்சியில் நாம் அடைந்த இன்னலை!

     பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாக நடந்து தமிழர்களைக் காட்டிக் கொடுத்து நல்ல பிள்ளையாக ஆவது மூலம் எவ்வளவு நாளைக்கு வாழ முடியும்? அதன் மூலம் நீங்கள் என்ன வாரிக் கட்டிக் கொள்ள போகின்றீர்கள்? 

     3000 ஆண்டுக் கொடுமையினை ஒழிக்கத் தன்னால் ஆன காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டாமா? 

     இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பது?  தமிழன் வாழ்வதா?  அல்லது சாவதா?  என்பதை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டாமா?

     மடையன்தான் சுதந்திரம் வந்துவிட்டது என்று கூறுவான்?  எங்கே சுதந்திரம் வந்துவிட்டது?  இந்த இழிநிலை காட்டுமிராண்டித்தனம் ஒழியாது இருக்கையில் என்ன சுதந்திரம் வாழுகிறது? 

     இத்தகைய எங்களைப் பார்த்துத்தான் தேசத் துரோகிகள் என்கிறார்கள்! யார் தேசத்துரோகி? எங்களைத்தவிர வேறு எவன் சுதந்திரம் கேட்டான்? அதற்காகப் பாடுபடுகின்றவர்கள் நாங்கள்தானோ? வேறு யார் தமிழ்நாடு தனியாகவேண்டும் என்று கேட்கின்றான்?  நாங்கள் ஒன்று, இன்னொருவர் திரு.ஆதித்தனார். மற்றவன் எவன் கேட்கின்றான்? 

     ஆகவே, இந்தப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும்.  இன்னும் எத்தனை நாளைக்கு இழி மக்களாக முட்டாளாக ஆட்சியை அந்நியனுக்கு ஒப்படைத்து விட்டு அடிமையாக இருப்பது? 

     உலகத்திலேயே நம்மைவிட மிகவும் சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் அவன் அவன் நாட்டை அவன் அவன் ஆளுகின்றான். சுதந்திரமாக ஆட்சி செய்கிறான்.  நம்மைவிட நேற்று வரை காட்டுமிராண்டியாக வாழ்ந்து வந்த நீக்ரோவுக்குக் கூட தனிச் சுதந்திர நாடு இருக்கிறது!

     ஆனால், வாழ்ந்த இனம், நாகரிகத்துடன் ஆண்டவன் (ஆட்சி செய்தவன்) என்கின்ற உன் சங்கதி என்ன?  நீ மட்டும்தானே உலகில் உன் நாட்டில் அந்நியனை ஆதிக்கம் செலுத்த விட்டு விட்டு அடிமையாக இருக்கின்றாய்? 

     உன்னுடைய நாட்டில் என்ன இல்லை?  நீ எவற்றிற்காக அந்நியரிடம் கையேந்தி நிற்க வேண்டும்? உப்பு இல்லையா? மற்ற மற்றப் பொருள்கள்தான் இல்லையா? இன்றியமையாத பொருள் வசதி இல்லாத நாடுகள் எல்லாங்கூட இன்று தனித்து சுதந்திரமாக வாழ்கின்றனவே.  50,000 சதுர மைல்கள் பரப்பும் வளமான, வசதியான கடற்கரையும், 3 கோடிக்குமேல் மக்களையும் கொண்ட உன் நிலையைப் பற்றி நீ சிந்திக்க வேண்டாமா?

     தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாக ஆகவேண்டும் என்று 1937இல் இருந்தே சொல்லி வருகின்றேன். இத்தகைய எங்களைத்தானா தேசத் துரோகிகள் என்பது?  

     இந்திய தேசப்படத்தில் தமிழ்நாடு நீங்கலாக இதர பகுதிகளைக் கொளுத்தச் சொல்லுகின்றேன் என்றால், காட்டுக்குப் போகவா சொல்லுகின்றேன்.  சுதந்திரமாக வாழவேண்டும் என்றால் எவன் இந்தக் காரியத்திற்கு ஆதரவு காட்டுகின்றான்?

     தோழர்களோ! இதை ஒரு முடிவான போராட்டமாகக் கருத வேண்டும். இதில் இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்.  இந்தக் காரியத்துக்குப் போராட வேறு நாதியில்லை.  நாங்கள்தான் எல்லாம்.  நாங்கள் போய்விட்டால் வேற எவன் இருக்கிறான்?  எவ்விதத் தடையேற்றபட்டாலும் தவறாமல் போர் நடத்தவேண்டும். 

- விடுதலை; 04.06.1960.

 

ஓட்டுக்காரனே உணர்ந்துபார்!

      நாடு பிரியவேண்டியதுதான். அதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்; அதற்காகத்தான் சட்டசபைக்கும் பார்லிமெண்டுக்கும் போக வேண்டுமென விரும்புகிறோம் என்று சொல்லுகிற சட்டசபை சர்வரோக நிவாரணிக்காரர்களைப் பார்த்து நான் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்ளுவதாவது:

     சட்டசபைவாதிகளே! நீங்கள் சட்டமன்ற நாற்காலியில் உட்காருவதற்குமுன், உள்ளே நுழைந்தவுடன்,    அ, ஆ என்னும் நான், சட்டசபையின் ஒர் அங்கத்தினனாக தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறபடியால்,

   சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் அமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருப்பேன் என்றும், நான் இப்போது ஏற்கப்போகும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், கடவுள் பெயரால் சத்தியம் செய்கிறேன்.  மனப்பூர்வமாய் உறுதி கூறுகிறேன்.

     (இந்திய அரசியல் சட்டம், மூன்றாவது தப்கில் பிரிவு VII,, பக்கம் 226) என்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொடுத்தீர்களே! அந்தச் சட்டப்படி நாடு பிரிவினையை வலியுறுத்த முடியும்? அதுவே அரசியல்  சட்டத்திற்கு விரோதமல்லவா? 

     இல்லை; இல்லை! அது பொய் சத்தியம்தான்  என்றாலும் புளுகினாலும் அதை (நாடு பிரிவினையை) வலியுறுத்தும் வாய்ப்பும் வசதியும் பார்லிமெண்டிலோ, சட்டசபையிலோ இருக்கிறதா?  தீர யோசித்துப் பாருங்கள்!

     டெல்லியில் உள்ள பார்லிமெண்டின பிரதான சபையான மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை 506 பேர்கள்.

     (இதில் தேர்தல் மூலம் 500, நியமனம் மூலம் 6)

     சென்னை இராஜியம் என்று அழைக்கப்படும் நம் தமிழ் நாட்டிற்கு உள்ள பிரதிநிதி 41 பேர்கள்.  அதாவது 8% பேரே!  நாடு பிரியவேண்டும் என்று சொல்லுபவர்களாகவே இந்த 8% இருந்தாலும் இவர்களால் என்ன செய்ய முடியும்?  எப்படித் தீர்மானம் கொண்டு என்ன செய்யமுடியும்?  எப்படித் தீர்மானம் கொண்டு போக முடியும்? சாத்தியக்கூறுகள் உண்டா?

  எந்தக் காலத்தில் 41பேர்களும் ஒரு கட்சிக்காரர்களாகவே போய் உட்காருவது?  அகில இந்தியா கட்சிக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவார்களா, பிரிவினையை?  தேர்தலுக்குத்தான் நேசக்கரத்தை நீட்டலாமேயொழிய இலட்சியத்திற்கு, அவர்களை நம்பினால் மோசம்தானே வரும்?  கொக் குத்தலையில் வெண்ணெய் வைத்து கொக்குப் பிடிக்கப் பார்க்கிறாய் என்றுதானே சொல்ல வேண்டும்!

     சென்னை மட்டுமல்ல; கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நாடுகளைச் சேர்த்தால்கூட

                சென்னை 41 (மெம்பர்கள்)

                கன்னடம்  26

                கேரள       18

                ஆந்திரம்  43

                ஆக          128 பேர்கள்தான்.   

     இந்த 128 பேரும் முட்டினாலும் கூட நாடு பிரிக்க முடியுமா?   இதையும் பாருங்கள். 

                தமிழ்நாடு        41                         

                கேரளம்           18                                                                                               

                கன்னடம்        26

                ஆக                 85

     ஆனாலும், பிரதம ஆட்சியாளர்களான பண்டித நேரு, பண்டித பந்த் ஆகியோர்களைக் கொண்ட ராஜியமான உத்தரப்பிரதேசத்திற்கு மட்டுமே 86 பேர்கள் இருக்கிறார்கள்!

     இந்தியக் கூட்டாட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் ராஜ்ஜியம் என்ற பெயர் எடுத்துள்ள ராஜ்ஜியம் உத்திரப்பிரதேசமாகும்.

     பார்லிமெண்டில் நாட்டுப் பிரிவினைக்காரர்களாகிய நீங்கள் எந்தக் காலத்தில் எப்படித் தீர்மானம் கொண்டு போய் மந்திரிகள் கண்ணில் விரலைவிட முடியும்?  வாய்வீச்சும், வீரப்பிரதாபமும் வெளியில்தான்; உள்ளே முடியுமா?

இது நடக்குமா?

     முயலுக்கு மூன்று காலும், மனிதனுக்கு முதுகில் ஒரு கையும் முளைத்தால் கூட சட்டசபை, பார்லிமெண்டுமூலம், அதுவும் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் திராவிடநாடு பிரிவினை நடவாத காரியம் ஆகும்.

     இதைப் புரிந்து கொள்ளாமல் அங்கு செல்லுகிறவர்கள் ஒன்றும் புரியாதவர்களாக இருக்கவேண்டும். இல்லை புரிந்துகொண்டுதான் பேசுகிறோம், அங்கு செல்ல விரும்புகிறோம் என்றால் பித்தலாட்டக்காரர்கள் அதாவது அசல் அரசியல்வாதிகள் (Typical politicians) என்பதையாவது ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

சட்டமன்றப் பேச்சு பயன் தருமா?

     நாடு பிரிவினையில் அவசரமும் அக்கறையும் உங்களுக்கு இருக்குமானால், உங்கள் இலட்சியமும் மூச்சும் அதுவேதான் என்றால், என்ன செய்ய வேண்டும்?

     சத்தியப்பிரமாணமும், சபாநாயகர் தயவினால் சண்டப் பிரசண்டமும் செய்து விட்டால் போதுமா? நாடு பிரிந்துவிடுமா?

கிளர்ச்சி! கிளர்ச்சி! கிளர்ச்சியே தேவை

     கிளர்ச்சி என்ற வெடி மருந்து வேட்டினால்தானே யூனியன் ஆட்சி என்ற பாறையைப் பிளக்க முடியும்? 

     எனவே, அருமை சட்டசபைவாதிகளே நாடு பிரிவினை வேண்டியதுதான் என்ற பறைசாற்றிடும் தோழர்களே உங்கள் நேர்மை, நாணயத்தை கொள்கைப்பிடிப்பைக் காட்ட இதுவே நல்ல தருணம்.

தீப்பந்தம், யூனியன் தேசப்படம் தயாரியுங்கள்!

     தீப்பந்தமும் இந்திய தேசப்படத்தையும் எடுத்துக் கொண்டு எங்களோடு சேர்ந்துவர வெட்கப்பட்டால் தயங்கினால் நீங்களே உங்கள் வீட்டு வாசலின் முன்பாகவது தமிழ்நாடு இந்திய யூனியன் தேசப்படத்தைக்  கொளுத்துங்கள்! எங்கள் இலட்சியம் திராவிட நாடு என்று சொல்லுபவர்கள், உண்மையும் நாணயமும் உடையவர்களானால், திராவிட நாட்டை நீக்கியாவது கொளுத்துவது யோக்கியமான காரியமாகும்.

நாட்டுக்கு ஆற்றவேண்டிய நற்கடமை

     அப்படிக்கில்லாமல் இப்போது தங்களது தாய் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய இந்த இன்றியமையாத கடமையின்று தவறுவார்களானால் அப்படிப்பட்டவர்களை வருங்கால தமிழர் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் நல்ல வண்ணம் யோசித்துப்பார்க்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

     ஜூன் 5 - ந் தேதி வீண் நாளல்ல; உரிமைப் போராட்ட உணர்ச்சியைக் காட்டிக்கொள்ள வேண்டிய நாள்; தமிழனது மான உணர்ச்சியைப் பரிசோதனை செய்யும் நாள்.

      போர்க்கொடி உயர்த்தப்பட்டு விட்டது!

     போர்ச்சங்கு ஊதி போர்ப்பறை கொட்டியாகி விட்டது!

     அணிவகுத்து நிற்கத் தயாராகி விட்டீர்களா? 

Read 845 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.