Monday, 28 September 2020 01:39

வைக்கம் போராட்டம்

Rate this item
(9 votes)

திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு வெளியீடு : 75

வெளியீடு : தந்தை பெரியார் திராவிடர் கழகம் 

தொகுப்பாளர் : கா. கருமைலயப்பன்


வைக்கம் போராட்டம்

இந்த ஊருக்கு (மார்த்தாண்டம்) சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன். 20 வருடங்களுக்கு முன்பும் ஒரு தடவை வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீங்கள் வேறு நாடு, வேறு ஆட்சியின் கீழ் இருந்தீர்கள். ஆனாலும் கூட நாம் அனைவரும் ஒரே இனம், ஒரே சாதி, அதாவது சூத்திரர்கள் - திராவிடர்களாகிய நாம் எல்லோருக்கும் பொது இழிவு ஒன்று. அதுதான் இந்தச் சூத்திரப்பட்டம் என்ற நிலையில்தான் இருந்தோம்.

இப்போது நாம் ஒரே நாட்டார் ஆகிவிட்டோம். அதாவது நாம் தமிழர்கள், தமிழ் நாட்டவர்கள்; நமக்குள் அதிகமான ஒற்றுமை, சம்பந் தம் ஏற்பட்டு ஒரு குடும்பத்தினர் போல் ஆகிவிட்டோம்! நாமெல்லாரும் ஒரே நாட்டார் ஆகிவிட்டது மாத்திரமல்லாமல், ஒரே இனமானதால், ஒரே இலட்சியத்திற்குப் பாடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இன்றைக்குச் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே நம் சாதிக்கு உள்ள இழிவுகளை, தடைகளை நீக்க வைக்கத்தில் போராட்டம் நடத்தி, அதில் நான் தலைமை வகித்து தெருவில் நம்மில் பெருவாரியான மக்கள் நடப்பதற்கும், ரோட்டில் (பாதையில்) நடந்து செல்லுவதற்கும் கூடாதபடி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்த வந்த தடையை ஒழித்துக்கட்டி உரிமைகளைப் பெற்றோம். அவையெல்லாம் தெரிய வேண்டுமானால் சுமார் 35 வருடத்துக்கு முந்தைய சங்கதியானபடியால் இன்றைக்கு 45-50 வயதானவர்களாக இருக்க வேண்டும். அதற்குக் குறைந்த இந்தக்காலத்து இளைஞர்களுக்கு அவையெல்லாம் தெரியாது. அந்தக் கிளர்ச்சிகள் இல்லாதிருந்தால் இன்று இந்த நாட்டிலேயே பெரும்பாலான நம்மவர்கள் பல தெருக்களில் நடக்கக்கூட உரிமையற்றவர்களாக இருப்போம்.

அப்போது இந்த நாட்டில் நிலைமை மிகமிக மோசமானதாக இருந்தது. இது ஒரே பார்ப்பன வைதீக வருணாசிரம் ஆதிக்க ஆட்சியாக இருந்தது. எங்கள் நாட்டில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோன்றிய பிறகுதான் அப்போது இருந்த பார்ப்பான் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிப் பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சில உரிமைகள் பெறப்பட்டன.

பார்ப்பனர்கள் பிராமண சமாஜம், பிராமண மகாசபை என்றெல்லாம் வைத்து வெளிப்படையாக நாம் பெற்ற எல்லா உரிமைகளையும் எதிர்த்து, பலவற்றை ஒழித்துக்கட்டி விட்டார்கள். பார்ப்பான் தன்னை மேல் சாதி என்றும், தான் பிராமணன் என்றும் அழைத்துக் கொள்ளுவதிலும், நாமும் அவனைப் பிராமணன் என்று சொல்லுவதிலும் அவனுக்குப் பெருமையுண்டு. ஆனால், நம்மை அவன் சூத்திரன் என்று அழைப்பதிலும், சாஸ்திரமும், சட்டமும் நம்மைச் சூத்திரர்கள் என்றே குறித்து வைத்துள்ளதிலும் நமக்கு எவ்வளவு இழிவும், வாழ்வுக்கேடும், முன்னேற்றத்தடையும் இருக்கின்றன. நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக் கொள்ளாமல், வேறு பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சூத்திரர் கழகம் என்றுதானே வைத்துக் கொள்ள வேண்டும்?

அதனால் தான், நம்மைக் குறிப்புக் காட்டுவதற்குத் திராவிடர் என்ற இனப்பெயரை வைத்து திராவிடர் கழகம் என்றும், தென் இந்தியர் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்பதற்குப் பதிலாகப் பெயர் மாற்றினோம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் முயற்சியிலேயே 1919, 1920 ஆம் வருடங்களில் நடந்த கிளர்ச்சிகளால், எங்கள் நாட்டிலே - ஏன் தெலுங்கு, கன்னட, மலையாள நாடுகளிலே வீதியில் நடக்கிற உரிமை வந்துவிட்டது. இப்படி வீதியில் எல்லோரும் நடக்கலாம் என்ற நிலைமையைச் சட்டம் மூலம் அமலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

பார்ப்பனர்கள் தண்ணீர் மொண்டு உபயோகப்படுத்துகிற குளத்திலேயும், கிணற்றிலேயும் மற்றத் தாழ்ந்த சாதிக்காரர்கள் எனப்படுகிற நாமும் தண்ணீர் எடுக்கலாம், உபயோகப்படுத்தலாம் என்று அப்போதே ஜஸ்டிஸ் கட்சியினர் (நீதிக்கட்சியினர்) சட்டம் செய்தார்கள்.

இவையெல்லாம் காந்திக்கு முன்பே நடந்த காரியங்களாகும். காங்கிரசும், காந்தியும் வந்துதான் இந்தக் காரியங்கள் நடந்தன என்ப தெல்லாம் புரட்டும் பித்தலாட்டமுமாகும். அதுமாத்திரமல்ல, எல்லா சாதிக்காரனும், பஞ்சாயத்து போர் டிற்கு, முனிசிபாலிட்டிக்கு, தாலுக்கா, ஜில்லா போர்டுகளுக்கு, சட்டசபைக்குப் போகலாம். நியமிக்க வேண்டும் என்றுகூடத் திட்டம் - காந்தி வருவதற்கு முன்பே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் (நீதிக்கட்சி) செய்து விட்டனர் ! பார்ப்பானும் சட்டசபைக்கு நுழையலாம். பறையனும் போகலாம் என்பதெல்லாம் காந்தியால் ஆன காரியம் அல்ல. அதற்கு முன்பே பறையர், சக்கிலிகள், பள்ளர்கள் என்பவர்கள் சட்டசபையில் இருந்தார்கள் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

குளத்திலேயும், கிணற்றிலேயும் பார்ப்பானும், பறையனும், சூத்திரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது. மேல் ஜாதிக்காரனுக்குத் தனிக்குளம், கிணறு, தனிக்கோவில்; மற்ற சாதிக்காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோவில்கள் கட்டித்தர வேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம். எனக்குத் தெரியும், யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்வார்கள் - காந்தி மகான் காட்டிய வழி, மகாத்மாவின் சேவை என்றெல்லாம், அது வெறும் புரட்டு.

நான் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டிக்குக் காரியதரிசியாக, தலைவனாக இருந்தபோதுதான் ரூ.48,000 (நாற்பத்தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்கிரசு கமிட்டிக்குக் கிராண்ட் (உதவித் தொகை) அனுப்பினார்கள். எதற்கு? பறையன், சக்கிலி, பள்ளனுக்கு வேறுகோயில் கட்டிக்கொடு; மற்றச் சாதியானுக்கு, மேல் சாதிக்காரனுக்கு என்று இருப்பதில் போய்ரகளை (கலவரம்) செய்யக் கூடாது என்று.

ஆனால், அந்தக்காலத்திலேயே ஜஸ்டிஸ் (நீதிக்கட்சி) கட்சிக்காரர்கள் சட்டம் செய்துவிட்டார்கள்; ஒன்றாகப் படிக்கணும்; படிக்கிறதிலே சாதி வித்தியாசம் காட்டக்கூடாது என்று. இன்றும்கூட அந்தச் சட்டப்படிக்கு எல்லாப் பள்ளிக்கூடத்திலும் அமல் நடக்கிறது. பறையர்கள், பஞ்சமர்கள் எனப்படும் சாதிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள சில மாணவர்களைச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும்; இல்லாவிட்டால் சர்க்காரின் கிராண்ட் (உதவித்தொகை) அவைகளுக்குக் கிடைக்காது என்று திட்டம் செய்துவிட்டார்கள்.

கல்வி இன்ஸ்பெக்டர் (ஆய்வாளர்) வரும்போது கீழ்சாதிப் பையன்கள் இல்லையா? என்பார். இல்லை, யாரும் வரவேயில்லை என்றால், இல்லாவிட்டால் போய்ச் சேர்த்துக் கொண்டு வா என்பார்.

அப்படி எங்கள் தமிழ்நாட்டிலே ஏராளமாக நடந்து கொண்டிருந்த நேரத்திலே, உங்கள் கேரளநாட்டிலே கொடுமை; கீழ்ச்சாதியான் மேல்சாதியான் கண்ணில் தென்படக்கூடாது; அவனின் நிழல் கூட மேல் சாதிக்காரர்களின் மேல் படக்கூடாது என்ற நிலைமை; அவன் தன்னை இன்னான் என்று காட்டிக்கொள்ள மறைவிலிருந்தே ஒருவித சத்தம் போட வேண்டும் என்றும் திட்டம் இருந்தது. அவர்களின் (நீதிக்கட்சி)

போற்றத் தகுந்தத் தொண்டு காரணமாகத்தான் ஓரளவு கீழ்ச்சாதி மக்கள் உணர்வு பெற்று, வைக்கம் கிளர்ச்சி நடந்து இதற்குப் பரிகாரம் கிடைத்து; நிலைமை மாறியது என்று சொல்லலாம்; இவையெல்லாம் கூட இன்றைக்கு இருக்கும் சிறுபிள்ளைகளுக்குத் தெரியாது; 40, 45 வயதானவர்களுக்குத் தெரியும்.

வைக்கத்திலே நாங்கள் கிளர்ச்சி செய்ததும், அதனால் நாங்கள் பல தடவை சிறை சென்றதும், அடிப்பட்டு அவமானம் அடைந்ததும் இக்கொடுமைகளை நீக்கத்தானே? அந்தக் காலத்தில் ஜெயிலில் வகுப்புகள் கிடையாது. ஒரே சி வகுப்புதான்; ஆகவே அப்போது சாதிக்கொடுமை ஒழிய நாம் எப்படிப் பட்ட கொடுமைகளை அனுபவித்து இருந்தோம் என்பதும், இப்போது உள்ள உங்களில் பலருக்குத் தெரியாது. இது எப்படி மாறியது? இப்போது நம் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நீங்கள் யோசித்தால்தான், இப்போது நாங்கள் மெதுவாக இந்தச் சாதி ஒழிப்பு விஷயத்தில் போகிறோம்; இன்னும் வேகமாகப் போக வேண்டும் என்று உங்களுக்குத்தெரியும்.

வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலேயிருந்துதான்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ.பி.எல். படித்த வக்கீல் ஒரு வழக்குக்காக (நீதிமன்றத்திற்கு) ஆஜராகப் போனார் வழக்கு விசார ணைக்கான. கோர்ட் இடம் இராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண் மனையில்) ஓர் இடம். இராஜாவின் பிறந்தநாள் விழாவிற்கு அந்த இராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) எல்லாப் பக்கங்களிலும் பந்தல் போட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் ஆகி ஒரு கேசில் (வழக்கில்) ஆஜராக அங்கே போக வேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. அங்கே இந்த வக்கீல் ஈழவ (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக்கூடாது என்று தடுத்தார்கள்.

அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்! கலப்பு மணம், சம்பந்தி போஜனம், எல்லோரும் பள்ளிக் கூடத்தில் படிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துகளில் தீவிர நம்பிக்கைக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும், பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துத்தான் காந்தியும் அவற்றை நிருமாணத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டார். அந்தக் காலத்தில் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சிக்காரர் நல்லபடி வெளியாக்கி வெளுத்து வாங்குவார்கள். ரோட்டிலே (சாலையிலே) பார்ப்பனர்கள் அப்போது தைரியமாகத் தனியே நடக்கக் கூட முடியாது. டி. எம். நாயரும், தியாகராயரும், ஜஸ்டிஸ் இயக்கமும் ஜனங்களிடத்தில் (மக்கள்) தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, பார்ப்பனரல் லாதாரின் ஆதரவைத்திரட்டி, ஆட்சியைப் பெற்று ஆண்டு கொண்டிருந்தது. பார்ப்பனர்கள் அவர்களைக் கண்டு நடுங்குவார்களே! பார்ப்பனர்களுக்கு மேடையே இல்லாமல் போன காலம் அது!

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள் எங்களுக்கு ஆட்சி வேண்டாம்; அதிகாரம் வேண்டாம்; சட்டசபை வேண்டாம்; என்று குள்ள நரித் தத்திரம் செய்து மக்களை வசப்படுத்தச் சதி செய்து கொண்டு இருந்த காலம். அந்தக்காலத்தில்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு (நீதிக்கட்சிக்கு) இருந்த செல்வாக்கைக் கண்டு வஞ்சக மனத்தோடு பித்தலாட்டக் கருத்துக் கொண்ட தீண்டாமை விலக்கு என்பதைத் தங்கள் திட்டத்தில் காந்தி சேர்த்தார்.

அந்தக்காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு மிகவும் வேண்டியவனாகத்தான் இருந்தேன். என்னை நிரம்பவும் மதிப்பார்கள். காரணம், நான் எல்லாப்பதவிகளிலும் இருந்து வந்தவன். திரு. இராஜகோபாலச்சாரியாரே வந்து சமுதாயச்சீர்திருத்தம் தானே நமக்கு வேண்டும். அது காந்தியால்தான் முடியும் என்று சொல்லி என்னைக் காந்திக்கு சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் (ஈரோடு நகர் மன்றத் தலைவர்) பதவியை இராஜிநாமா கொடுத்து வெளியேறி, காங்கிரசில் சேர்க்கப் பட்டுவிட்டேன். சென்ற பிறகு தமிழன் ஒருவனுக்காவது அதுவரை கிடைத்திருக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர், தலைவர் இடத்தில் உட்கார வைத்தார்கள்.

ஏனென்றால், திரு.வி.க. சாதாரணமாக ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். டாக்டர் வரதராஜலு அவர்கள் பிரபஞ்சத்தின் வாரப்பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்ப மாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றி விடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ. உ. சிதம்பரனார் ஒருவர் அவர் பாவம்! எல்லாவற்றையும் விட்டு நொடித்துப்போய் கஸ்தூரிரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். அதனால் சிறிது வசதி உள்ளவன்; பெரியவியாபாரி ; பதவிகளை விட்டு வந்தவன் என்கிற முறையில் இராஜகோபாலச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார்.

உண்மையாகவே நானும் அதை நம்பி அவரிடம் மிக்க விசுவா சமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நாங்கள் மேடை தேடிக்கொடுத்து விட்டோம்! அப்போதே நான் நாம் தொட்டால் தீட்டுப் பட்டுவிடும் என்கிற சாமி நமக்கு எதற்கு? அதை எடுத்து ரோட்டுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற்றிலே தூக்கிப் போட்டு வேட்டி துவைக் கப் போடணும், இப்படித்தான் பேசுவேன். டாக்டர் வரதராஜலு, கல்யாணசுந்தரனார், சிதம்பரனார், நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத்தான் முன்னே தள்ளுவார்கள்! என்னைப் பார்த்து பதவி வேட்டைக்காரன் என்று எவரும் சொல்ல முடியாது என்பதால் பார்ப்பனர்களும் நான் என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

சாதி, மதம், கடவுள் துறையில் இப்பொழுது சொல்லுவ தெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவார் நாயக்கர் உங்களுடையது ரொம்ப (நிறைய) strong dose என்று சொல்லுவார். நான் சொல்லுவேன் நீங்க என்னங்க, இந்த மடப்பசங்களுக்கு strong என்ன, லேசு என்னங்க, என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன். அவரும் வேறு வழி இல்லாததால் சிரித்துக் கொள்ளுவார். அந்த மாதிரி முறையில் நாட்டைப் பார்ப்பனர் கைக்குப் போகும் படியான அளவுக்குப் பக்குவப்படுத்திவிட்டோம்.

இந்த மாதவன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வேண்டு மென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன் (கேரள காங்கிரஸ் கமிட்டித்தலைவர்), கே. பி. கேசவமேனன் இவர்களெல்லா ரும் இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள். முறை ஜெபத்தன்று சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க லாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஊரில்தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4 வாயிலுக்கு எதிரிலும் 4 நேர்வீதிகளும், கோவில் மதில்கள், சுற்றியும் தெருக்கள், பிரகாரம் எல்லாமும் இருக்கும்.

அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்கள் எல்லோரும், ஆயித்தார்கலி எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத்திலும் கோயில் வாசல்களுக்கு முன்னாலும் நடக்கக்கூடாது! மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும், 4 ஃபர்லாங்கு தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில் (சாலையில்) கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக் கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போகவேண்டும். தீண்டப்படாதவர்களைப் போலவேதான், ஈழவர்கள், ஆசாரிகள், வணிகர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.

இதே மாதிரித்தான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த இராஜ்ஜியத்தில் உள்ள மற்றக் கோவில்கள் பக்கமும் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோவிலுக்குப் பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில் தான் எல்லா முக்கிய ஆஃபிசுகளும் (அலுவலகங்களும்), கோர்ட் (நீதி மன்றம்), போலீஸ்ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதனாலுங்க கூட கீழ்ச்சாதியார்களை அங்கு மாற்றமாட்டார்கள். ஏனென்றால், அந்த போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்கள் இருக்கும் இடத்திற்குப் போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் இந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிக் கூலிகள் அங்குச் செல்லமுடியாது.

சத்தியாக்கிரகம் ஆரம்பமானவுடன் வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி. கே. மாதவன், ஜார்ஜ் ஜோசஃப் முதலியவர்களைப் போல் சுமார் 19 பேரை இராஜா அரஸ்ட் (கைது) செய்யும்படி உத்தர விட்டு, அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

தினசரி ஒருவர் வீதம் கைது செய்து, அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் (தனிப்பட்ட) கைதிகளாக நடத்த உத்தரவிட்டார்கள். அப்போது இராஜாவிடம் மிஸ்டர் பிட் என்ற ஒரு வெள்ளைக்காரர் போலீஸ் அய்.ஜி.யாக (மாநிலக் காவல்துறைத் தலைவர்) இருந்தார். அவர் இந்தப் பத்தொன்பது பேரைப் பிடித்து உள்ளே போட்டுவிட்டவுடன், அடுத்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட யாரும் முன்வர ஆள் கிடைக்கவில்லை. அதோடு அதுவும் நின்று விடும் போலத் தோன்றியது. உடனே எனக்கு ஜார்ஜ் ஜோசஃபும், பாரிஸ்டர் கேசவ மேனனும் சேர்ந்து கையொப்பம் போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

நீங்கள் வந்துதான் இதற்கு உயிர் கொடுக்கணும்; இல்லா விட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவதானால் எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்றாலும், பெரிய காரியம் கெட்டுப்போகுமே என்று கவலைப்படுகிறோம். உடனே நீங்கள் வந்து பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எழுதி அனுப்பினார்கள்.

எனக்கு ஏன் எழுதினார்கள் என்றால் தீண்டாமைப் பற்றி பேசு வதில் நான் கெட்டிக்காரன்; கிளர்ச்சியிலும் நான் கெட்டிக்காரன் என்று எனக்குப் பேர்; நான் அப்போது சுற்றுப்பிரயாணத்தில் இருந்தேன்.

ஈரோட்டிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் ரீடைரக்ட் (திருப்பி அனுப்பி) செய்யப்பட்டு மதுரை ஜில்லாவில் உள்ள பண்ணப்புரம் என்ற ஒரு மலைப்பக்க கிராமத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவன் என்ற முறையில் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குக் கிடைத்தது.

உடனே, மீதி சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திப் போட்டுவிட்டு நேரே ஈரோட்டுக்குப் போனேன்; வீட்டுக்கு வந்தவுடன் வைக்கத்திற்குப் போய்ச் சத்தியாகிரகத்தை நடத்துவதென்று மிக்க மகிழ்ச்சியோடு மூட்டைக் கட்டிவிட்டேன்; திரு. இராஜகோபாலாச்சாரி யார் அவர்களுக்கும் நான் வரும் வரை தலைமைப்பதவி ஏற்றுக் கொள் ளும்படி ஒரு கடிதம் எழுதிவிட்டு, இந்தச் சந்தர்ப்பம் ஒரு நல்ல வாய்ப்பு; இதைவிட்டால் இந்தமாதிரி அருமையான வேலை செய்ய வேறு கிடைக்காது என்று எழுதிவிட்டு 2 பேரைக் கூட்டிக் கொண்டு வைக்கத்திற்கு வந்தேன்.

வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்). ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும்போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வர வேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வரவேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒருநாள் ஈரோட்டிலே தங்கி விட்டு, அடுத்த நாள் டெல்லிக்கு இரயில் ஏறிப்போவது வழக்கம், அப்படி ஈரோட்டிலே தங்கும் போது, அதற்கு வேண்டிய வசதிகளையும், மகாராஜா எங்கள் பங்களாவிலும் தான் தங்க ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கும். அப்படி 3 மாதத்திற்கு முன் வந்தபோது அவருடன் இந்த போலீஸ் அதிகாரி, இன்னும் இராஜாவுக்கு உதவிக்குத் தேவையான எல்லா அதிகாரிகளும் வந்து போனதில் இவர்கள் ஈரோட்டில் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறவர்களாகவும், நானும் அவர்களை எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சந்தித்துப் பேசியவர்களாகவும் இருந்திருக்கிறோம். இதனால் மகாராஜா சற்று மரியாதை காட்டினார்.

சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து நடத்த வந்த என்னை மகாராஜா சார்பில் இந்தப் பெரிய அதிகாரிகளே வரவேற்கின்றார்கள் என்று கண்டதும் இப்பக்கத்திய பாமர மக்களுக்கு ஒரே மகிழ்ச்சியாக ஆகிவிட்டது. என்னை விருந்தினராக மகாராஜா கருதினாலும் கூட நான் பல இடங்களில் சென்று பொதுக்கூட்டம் போட்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிப் பேசினேன். காரசாரமாகப் பேசினேன், கீழ்ச்சாதி மக்களான நாம் உள்ளே தெருவில் போவதால் தீட்டுப்பட்டுவிடும், செத்துப்போகும் என்று சொல்லும் வைக்கத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினேன். சுற்று வட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் வைக்கம் வந்து கூடிவிட்டார்கள். அது இராஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 5, 6 நாள்வரை சும்மாதான் இருந்தார். பலரும் போய் அவரிடத்தில் நான் பேசுவது குறித்து முறையிட்டார்கள். பிறகு இராஜாவினால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படி சுமார் 10 நாள் ஆனவுடனேயே, ஒரு போலீசு (சூப்பிரண்ட்) அதிகாரி அவர்கள் அய்யங்கார் - அவர் முயற்சியால் பி.சி.26 படி தடையுத்தரவு போட்டார். அந்நாட்டிலே 26 என்பது இப்போது இங்கே 144 தடையுத்தரவு போன்றது. நானும் சட்டம் மீறுவதைத்தவிர வேறு வழியில்லை என்று கண்டறிந்தேன். உடனே நான் சட்டத்தை மீறிப் பேசி னேன். என்னுடன் (தற்போது காங்கிரசுக்காரராக இருக்கும்) கோவை திரு. அய்யாமுத்து அவர்களும், மற்றும் இருவரும் சட்டம் மீறினோம். எங்களைக் கைது செய்தார்கள். எல்லோருக்கும் ஒரு மாதம் வெறுங் காவல் போட்டார்கள்! என்னை அருவிக்குத்தி என்ற ஊரில் உள்ள ஜெயிலில் (சிறையில்) வைத்தார்கள். அதற்குப்பிறகு என் முதல் மனை வியார் திரு. நாகம்மையாரும் பிறகு நான் வெளியே வந்தவுடன் என் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும் மற்றும் சிலரும் வந்து நாடெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார்கள். நான் விடுதலை ஆகிவந்து அதே மாதிரி மறுபடியும் திட்டம் போட்டேன்.

நான் வெளியே வருவதற்குள் இந்தக்கிளர்ச்சிக்கு ஏராளமான அளவில் ஆதரவு பெருகிவிட்டது. மளமளவென்று ஆட்களும் வந்த சேர ஆரம்பித்தனர். ஏராளமான பேர்கள் பல பகுதிகளிலும் சென்று சுற்றுப் பயணம் செய்து தீவிரப் பிரச்சாரம் செய்தார்கள். எதிரிகளும் அடிதடி, காலித்தனம், கலவரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு இதை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டுமென்று பலவித முயற்சிகளும் செய்து பார்த்தார்கள்.

ஆனால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டேயிருந்தது. வெளிநாடுகளிலிருந்து மலையாளிகளும் சாதிக்கொடுமை என்பதைக் கண்டு மனம் துடித்து, அதற்குத் தங்கள் எதிர்ப்பையும் சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் செய்யப்படும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவையும் காட்டும் வண்ணம் தினம் ரூ.50-60-100 என்று மணியார்டர் அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.

பெரிய பந்தல் போட்டு தினசரி போராட்ட வீரர்கள் முகாம் செய்திருந்த வீட்டில் 200-300 பேர் சாப்பிடுவார்கள்! தேங்காயும், மற்ற காய்றிகளும், மலைமலையாகக் குவிந்து கிடக்கும். பெரிய கலியாண வீடு மாதிரி காரியங்கள் நடைபெறும்.

திரு. இராசகோபாலாச்சாரியார் எனக்குக் கடிதம் எழுதினார். நீ ஏன் நம் நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டிலே போய் ரகளை (கலவரம்) செய்கிறாய்? அது சரியல்ல. அதை விட்டுவிட்டு நீ இங்கு வந்து, நீ விட்டுவிட்டுச் சென்ற வேலைகளைக் கவனி என்று. அப்போது இருந்த எஸ். சீனுவாசய்யங்காரும் இப்படித்தான் என்னை வைக்கத்திற்கு வந்தே அழைத்தார்; வரச்சொன்னார். அதேமாதிரி பத்திரிகையிலேயும் எழுதினார்கள். ஆனால், இதற்குள் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் 1000 பேருக்கு மேல் சேர்ந்தார்கள். தினமும் ஊர் முழுவதும் சத்தியாக் கிரக பஜனையும், தொண்டர்கள் ஊர்வலமும் நடந்து உணர்ச்சி வலுத்துவிட்டது.

பஞ்சாபில் சுவாமி சிரத்தானந்தா என்பவர் ஒரு அப்பீல் (வேண்டுகோள்) போட்டார். அதன் பிரகாரம் பஞ்சாபிலேயிருந்து சீக்கியர்கள் 20-30 ஆள்களையும், இரண்டாயிரம் ரூபாயையும் கையிலெடுத்துக் கொண்டு நேரே வைக்கத்துக்கு வந்தார்கள். தாங்கள் சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு ஆதரவு தருவதற்காக. உடனே இங்கிருந்த பார்ப்பனர்கள் எல்லாரும் சீக்கியர்கள் வந்து, இந்து மதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள் என்றெல்லாம் காந்திக்கு எழுதினார்.

உடனே அதன் பேரில் காந்தியார் துலுக்கன், கிறிஸ்தவன், சீக்கியன் ஆகிய பிற மதக்காரன் எவனும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று எழுதிவிட்டார்கள்.

காந்தி எழுதினவுடனே இதில் கலந்திருந்த சீக்கியன், சாயபு, கிறிஸ்தவன் எல்லாரும் போய்விட்டார்கள். அதுபோலவே, தீவிரமாக இதில் ஈடுபட்டு முன்னோடியாக உழைத்த காலஞ்சென்ற ஜோசஃப் ஜார்ஜூக்கும் இராஜகோபாலாச்சாரியார் கடிதம் எழுதினார். இந்து மதச்சார் புள்ள இந்தக் காரியத்திலே நீ சேர்ந்திருப்பது தப்பு என்றார். அதை ஜோசஃப் ஜார்ஜ் அவர்கள் இலட்சியம் பண்ணாமல் திருப்பி எழுதினார். நான் என் சுயமரியாதையை விட்டுவிட்டு இருக்க மாட்டேன். வேண்டுமானால் என்னை விலக்கி விடுங்கள் என்றார். தற்போதைய நகர்கோவில் பயோனீர் டிரான்ஸ்போர்ட்டைச் சேர்ந்த சேவு என்பவரும் அண்மையில் காலஞ்சென்ற டாக்டர் எம்.இ.நாயுடு (திரு. எம். எம்பெருமாள் நாயுடு அவர்கள் இந்தப் பேச்சுக்கு முதல் நாள் இரவு நாகர்கோவிலில் காலமானார். பிறகு தந்தை பெரியார் சென்று துக்கம் விசாரித்தார் என்பதை வாசகர்கட்கு நினைவூட்டுகிறோம்) அவர்களும் என்னுடனேயே இருந்து தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் இதை விட்டுப் போக மாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள் என்றாலும், காந்தி சத்தியாக் கிரகத்திற்கு விரோதமாக எழுதிப் பணத்தையும் ஆளையும் தடுத்து விடுவாரோ என்று சிலர் பயப்பட்டார்கள்.

அந்தச்சமயம் சாமி சிரத்தானந்தா அவர்கள் வைக்கம் வந்து தான் பணத்துக்கு வகை செய்வதாகச் சொன்னார். பிறகு காந்தி கட்டளைக்கு விரோதமாகவே சத்தியாக்கிரகம் நடந்து வந்தது.

இதற்கிடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. எங்கள் போராட்டத்துக்குப் பெரிய மரியாதையையும், செல்வாக்கையும், தேடிக் கொடுத்துவிட்டது, இந்தக் காந்தி கட்டளை. இந்த சமயத்தில் என்னை மறுபடியும் பிடித்து 6 மாதக் கடினக்காவல் விதித்து ஜெயிலில் போட்டு விட்டார்கள். பிறகு சத்தியாகிரகத்தை நிறுத்துவதற்காகவும், எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரி பார்ப்பனர்களும், சில வைதீகர்களும் சேர்ந்து கொண்டு சத்துரு சங்கார யாகம் என்னும் ஒன்றை வெகுதடபுடலாக ஆயிரக்கணக் கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். ஒருநாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண் டிருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன், என்ன சேதி? இப்படி வெடிச்சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திரு விழா நடக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாமல் இருந்தது. மகாராஜா நேற்று இராத்திரி திருநாடு எழுந்துவிட்டார் என்றான்.

அதாவது இராஜா செத்துப்போனார் என்று சொன்னான். அவ்வளவுதான், மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள்ளாகவே ரொம்ப (நிறைய) பெருமை வந்து விட்டது. அவர்கள் பண்ணிய யாகம் அங்கேயே திருப்பி மகாராஜாவைக் கொன்றுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாக்கிரகக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், மக்களிடையே இது ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அரசாங்கம் எங்களையெல்லாம் இராஜாவின் கருமாதியை முன்னிட்டு விடுதலை செய்தனர். எதிரிகள் குரலும், கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவர ஆரம்பித்தது.

இராணியும் கூப்பிட்டு எங்களோடு இராஜி பண்ணி ஒரு உடன்பாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்தவுடன், அப்போது சமஸ்தானத்தில் திவானாக இருந்த ஒரு பார்ப்பான் (இராகவய்யா) என்னிடத்தில் நேரே இராணி பேசக்கூடாது என்று கருதி திரு. இராசகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதினார். இராசகோபாலாச்சாரியும் எங்கே என்னிடத்தில் இராணி பேசி உடன்பாட்டிற்கு வந்தால் எனக்கு மரியாதையும், புகழும் வந்து விடுமே, அந்த மாதிரி வரக்கூடாது என்று கருதி, இதைக் காந்தியாருக்கே அந்த வாய்ப்பு அளித்து காந்தியின் மூலமே காரியம் நடந்ததாக உலகுக்குக் காட்ட வேண்டுமென்று தந்திரம் செய்து காந்திக்குக் கடிதம் எழுதினார். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை . எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்; நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நானும் ஒப்புக்கொண்டேன்.

காந்தியும் புறப்பட்டு வந்தார். இராணியோடு காந்தி பேசினார். (இப்படி இந்த சத்தியாக்கிரகம் நல்லபடி வேரூன்றி வெற்றி நிலை மைக்கு வந்தவுடன் பார்ப்பனர்கள் காந்தியை இதில் புகுத்தினார்கள்.)

இராணி காந்தியோடு பேசிய போது இராணி தெரிவித்தார்கள், நாங்கள் ரோடுகளைத் (சாலைகளைத்) திறந்துவிட்டுப் போகிறோம். ஆனால், அதை விட்டவுடன் நாயக்கர் கோயிலுக்குள் போக உரிமை வேண்டும் என்று கேட்டு ரகளை செய்தால் என்ன செய்வது? அதுதான் தயங்குகிறோம் என்றார்கள். உடனே காந்தி டி. பி.யில் தங்கியிருந்த என்னிடத்தில் வந்து இராணி சொன்னதைச் சொல்லி என்ன சொல்லுகிறாய்? இதை ஒப்புக் கொண்டுவிடுவது நல்லது என்றார். நான் சொன்னேன் Public ரோடு திறந்து விடுவது சரி! ஆனால் அதை வைத்துக் கொண்டு கோயிலைத் திறந்து விடும்படி கேட்கமாட்டோம் என்று எப்படி நாம் உறுதியளிப்பது? கோயில் பிரவேசம் (நுழைவு) என்பது காங்கிரசின் லட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அதுதானே! (கோயில் நுழைவு) அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? வேண்டுமானால் இராணிக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள், இப்போதைக்கு அதுமாதிரி கிளர்ச்சி எதுவுமிருக்காது. கொஞ்சநாள் அதுபற்றி மக்களுக்கு விளங்கும்படி பிரச்சாரம் செய்து, கலவரத்திற்கு இடமிருக்காது என்று கண்டால்தான் கிளர்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என்று சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதைக் காந்தி இராணியிடம் சொன்னவுடன் இராணியார் ரோட்டில் யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்று உத்தரவு போட்டு பொது சாலையாக ஆக்கினார்கள். அதன்பிறகு சிலநாள் பொறுத்து ஈரோட்டிலே நான் தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக இருந்தபோது, நான் ஊரில் இல்லாத ஒரு நாளில் தோழர்கள் பொன்னம்பலமும், குருசாமியும், இப்போது காங்கி ரசுக்காரர்களாக இருக்கும், ஈசுவரனும், எங்கள் ஆஃபீசிலே வேலை செய்கிற இரு ஆதிதிராவிடரை விபூதிப் பூசச் சொல்லிப் பூசி, கோயில் உள்ளே அழைத்துச் சென்றவுடன் பக்தர்களெல்லாரும் சத்தம் போட்டுக் கோயிலுக்குள் இவர்கள் உள்ளே சென்றதும், அவர்களை உள்ளேவிட்டு வெளிக்கதவுகளைப் பூட்டி விட்டார்கள். அது குறித்து வழக்கும் போட்டார்கள்! சாமி தீட்டாய்ப் போச்சு என்று வாதாடி தண்டிக்கச் செய்தார்கள்! பிறகு ஹைக்கோர்ட்டிலே (உயர்நீதி மன்றம்) அதற்கு எதிராகத் தீர்ப்புக் கிடைத்தது ( அது வெள்ளையர் ஆட்சிக்காலம்) ஆனால், இந்தியாவிலேயே முதன் முதலில் சுசீந்திரம் கோயிலில்தான் கோயில் நுழைவுக்கென்று கிளர்ச்சி தொடங்கப்பட்டது. அந்தக் காலத்திலே கோட்டயத்திலே என் தலைமையில் ஒரு சுயமரியாதை மகாநாடு போட்டார்கள். அதில் சாதி ஒழிப்பு சம்பந்தமாகவும், கோயில் நுழைவு உரிமை சம்பந்தமாகவும் பலவிதத் தீர்மானங்களையும் போட்டார்கள்.

அடுத்து, எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் சாதி ஒழிப்புக்காக சாதியில்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வரப்பட்டது! சில செல்வருக்கு உட்பட்டவர்கள் கிருஸ்தவ மதத்தில் சேருவது என்று திருத்தம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி அய்யப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்குப் போய்ச் சேருவது என்பதை விருப்பப்பட்ட மதத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று திருத்திப் போட வேண்டுமென்று சொல்லி ஏகமனதாய் நிறைவேறச் செய்தார்.

இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே அய்ம்பது பேர்களாவது முஸ்லிமாகிவிட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறிவிட்டார்கள். இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.

இப்படி முஸ்லிமான ஓர் ஆள் (அவர் புலையர் வகுப்பைச் சேர்ந்தவர்) ஆலப்புழையில் ஒரு நாயர் கடையில் கடைமீது ஏறிச் சாமான் கேட்டார் என்பதை வைத்துக் கொண்டு (கடைக்கார நாயர்) ஓங்கி அடித்தான்! அவர் சத்தம் போடவே நாயர்களும் ஓடிவந்தார்கள். சாய்புக்களும் ஓடிவந்து பலமான அடிதடி சண்டை நடந்தது. ஒருவர் செத்துவிட்டார். இந்தமாதிரி இந்து - முஸ்லிம் கலவரம் வலுத்தவுடன் மேலே எல்லாம் தந்தி கொடுத்தார்கள். அப்போது திவானாக இருந்த சர் சி. பி. இராமசாமி அய்யர் இதை இந்து - முஸ்லிம் சச்சரவு என்று சொல்லிக் கொள்ளாமல், முதலாளி - தொழிலாளி சண்டை என்று சொல்லி அடக்கிவிட்டார்கள்.

பிறகு, மன்னருக்கு சி.பி. இராமசாமி சொன்னார், ஈழவர் புலையர்களெல்லோரும் துலுக்கராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு மருந்து கோயிலைத் திறந்து விட்டுவிட வேண்டியதுதான் என்று, அப்போது ஆயுசு ஓமம் நடந்து கொண்டிருக்கிறது. இராஜாவும் இதைக் கேட்டு ஒப்புக்கொண்டு பிறந்த நாளுக்கு ஏதாவது நல்ல சேதி ஆண்டு தோறும் சொல்லுவதில் அந்த ஆண்டு இராஜா பிறந்தநாள் செய்தியாக கோயில் எல்லா இந்துக்களுக்கும் திறந்து விடப்படும் என்று அறிவித்தார். இப்படித்தான் அங்கு ஆலயப்பிரவேச உரிமை கிடைத்தது.

இதற்கப்புறம்தான் ஆச்சாரியார் முழங்கினார். அதற்குப்பிறகு தான் காந்தியாரும் மற்றவர்களும் மாறினார்கள். இந்தக்காரியம் எல்லாம் காந்தியால்தான் நடந்தன என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமாகும். காந்தி தீண்டாதார் என்ற மக்களுக்கும், ஆதிதிராவிட மக்களுக்கும் ஒடிந்த ஊசியளவுக்குக்கூட அவர்களது இழிவு நீங்கப் பாடுபடவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ளார். காங்கிரசும், காந்தியும் தீண்டா தவர்களுக்குச் செய்தது என்ன ? (What congress and Gandhi have done to untouchables) என்னும் புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.

(8.1.1959 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களில் சுற்றுப்பயணத்தின்போது தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.

- விடுதலை; 08.01.1959)

 

 

Read 1726 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.